கவுன்டி கிரிக்கெட்: இந்திய வீரர் புஜாரா இடைநீக்கம்!
இங்கிலாந்தின் கவுன்டி சாம்பியன்ஷிப்பில் சசக்ஸ் அணி 12 அபராதப் புள்ளிகளைப் பெற்றதையடுத்து, அந்த அணியின் கேப்டன் புஜாரா, டெர்பிஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஒரே பருவத்தில் அந்த அணி 4 அபராதங்களை எதிர்கொண்டதையடுத்து, கேப்டன் என்கிற அடிப்படையில் அவர் தாமாக இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
லீசெஸ்டெர்ஷைர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 15 ரன்கள் வித்தியாசத்தில் சசக்ஸ் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நடத்தை விதிமுறைகளை மீறியதற்காக ஜேக் கார்சன், டாம் ஹெயின்ஸ் மற்றும் ஆரி கார்வெலாஸ் ஆகிய வீரர்களை அடுத்த ஆட்டத்திலிருந்து நீக்குவதாக சசக்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பால் ஃபார்பிரேஸ் தெரிவித்துள்ளார்.
கார்சன், ஹெயின்ஸ் மீது நடுவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்கள். எனவே இந்நடவடிக்கை எடுக்கவேண்டியிருக்கிறது. இதுபோன்ற செயல்களை மன்னிக்க முடியாது. இதன்மூலம் எங்களுடைய நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துகிறோம் எனத் தலைமைப் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஆரி கார்வெலாஸ் விஷயத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், அவரையும் அணியில் சேர்ப்பது ஏற்புடையதாக இருக்காது. இதன்மூலம் 12 அபராதப் புள்ளிகளைப் பெற்றதோடு கேப்டன் புஜாராவையும் அடுத்த ஆட்டத்தில் இழந்துள்ளோம் என அவர் கவலை தெரிவித்தார்.
இந்தக் குளறுபடிகளால் சசக்ஸ் அணி புள்ளிகள் பட்டியலில் 5-ம் இடத்துக்கு இறங்கியுள்ளது. இன்னும் இரு ஆட்டங்கள் மீதமுள்ளன.