ரிஷப் பந்த் உலகளவில் கீப்பர் பேட்டர்களைக் கவர்ந்துள்ளார்: ஆடம் கில்கிறிஸ்ட்

ESPNcricinfo staff

ரிஷப் பந்த் © Associated Press

இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த், சர்வதேச கிரிக்கெட்டில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆஸ்திரேலிய முன்னாள் விக்கெட் கீப்பர் ஆடம் கில்கிறிஸ்டைக் கவர்ந்துள்ளது.

இந்தியாவுக்காக பிப்ரவரி 2017-ல் அறிமுகமான ரிஷப் பந்த், இந்திய அணியின் முன்னணி விக்கெட் கீப்பராக இருந்து வந்துள்ளார். குறிப்பாக டெஸ்டில் இவரது பெயர் இடம்பெறாமல் இருக்காது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் 5 இன்னிங்ஸில் 274 ரன்கள் குவித்தார். காபாவில் மறக்க முடியாத வெற்றியைப் பெற்ற ஆட்டத்தில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 89 ரன்கள் குவித்து வெற்றிக்கான கடைசி ரன்னை எடுத்தார். டெஸ்டில் 74 ஸ்டிரைக் ரேட்டை வைத்துள்ளார்.

விளம்பர நிகழ்ச்சியொன்றில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள ஆடம் கில்கிறிஸ்ட், ரிஷப் பந்த் குறித்து கூறியதாவது:

"ரிஷப் பந்த் தனது ஆக்ரோஷமான ஆட்டத்தின் மூலம் உலகம் முழுக்க விக்கெட் கீப்பர் பேட்டர்களைக் கவர்ந்துள்ளார். இளம் வீரர் ஒருவர் இந்தளவுக்கான தாக்கத்தை உண்டாக்கியிருக்கிறார். இதனால் ஈர்க்கப்பட்டு மற்றவர்களும் நேர்மறையான பாணியில் விளையாடுகிறார்கள்" என்றார்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட கார் விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பந்த், பெங்களூருவிலுள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் முழு உடற்தகுதியை அடைவதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். அடுத்தாண்டிலிருந்து அவர் மீண்டும் கிரிக்கெட்டுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை தொடங்க இன்னும் மூன்று வாரங்களுக்குக் குறைவான நாள்களே உள்ள நிலையில், அரையிறுதிக்குள் நுழையும் நான்கு அணிகளை கில்கிறிஸ்ட் கணித்துள்ளார்.

அரையிறுதிக்குள் இந்தியாவும், பாகிஸ்தானும் நுழையலாம். மற்ற இரு அணிகளாக ஆஸ்திரேலியாவும் இங்கிலாந்தும் அரையிறுதியில் மோதலாம் என்றார் கில்கிறிஸ்ட்.

Comments