இந்திய அணிக்குத் திரும்புவேன்: தீபக் சஹார் உறுதி!

ESPNcricinfo staff

தீபக் சஹார் © Associated Press

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சஹார் இந்திய அணியில் இணைவதற்கான முழு உடற்தகுதியையும் அடைந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

கடைசியாக 2022 டிசம்பரில் வங்கதேசத்துடனான ஒருநாள் தொடரில் தீபக் சஹார் பங்கேற்றார். அதன்பிறகு ஐபிஎல் பருவத்தின் போது அவருக்கு தொடைப்பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் 6 ஆட்டங்களில் அவர் பங்கேற்கவில்லை.

முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக 2022 ஐபிஎல் போட்டி மற்றும் டி20 உலகக் கோப்பையிலும் அவரால் விளையாட முடியாமல் போனது. இந்நிலையில் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்துகொண்ட சஹார் தனது உடற்தகுதி குறித்துப் பேசியதாவது:

ஒரு வீரர் காயங்களால் ஏமாற்றமடையக் கூடாது. காயம் ஏற்படுவதும் ஏற்படாததும் வீரரின் கையில் இல்லை. இப்போதைக்கு எனது முன்னுரிமை முழு உடற்தகுதியுடன் இருப்பது மற்றும் அணிக்குத் திரும்ப வேண்டும் என்பதே. என் விஷயத்தில் எனக்கு ஒரு கெட்ட நேரம் இருந்தது என்றும் சொல்லலாம். கடந்த ஆண்டு எனக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு இது மோசமான காயம். ஆனால் இப்போது நான் முழுமையான உடற்தகுதியுடன் இருக்கிறேன். தற்போது எனது பந்துவீச்சு குறித்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய அணிக்குத் திரும்ப முயல்கிறேன். சமீபத்தில் ராஜஸ்தான் பிரீமியர் லீக் போட்டியில் விளையாடினேன். ஞாயிறு வரை தேசிய கிரிக்கெட் அகாடமியில் இருந்தேன். ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்காக சீனா செல்லும் இந்திய அணியுடன் பயிற்சியில் ஈடுபட்டிருந்தேன் என்றார்.

உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் சஹார் இடம்பெறவில்லை. இருப்பினும் உலகக் கோப்பையில் விளையாட வாய்ப்புக் கிடைத்தால் அணியின் வெற்றிக்கு பங்களிப்பேன் என சஹார் தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது:

நாட்டுக்காக உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்று கோப்பையை வெல்ல வேண்டும் என்பது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் கனவு. வாய்ப்பு கிடைக்கும்போது அதற்காக முயல்வேன். நான் முதல்முதலில் பங்கேற்ற பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். 2018 -ல் எனது முதல் ஆசியக் கோப்பையில் பங்கேற்றேன். அந்த ஆண்டு இந்தியா சாம்பியன் ஆனது. கடந்த ஆறு ஐபிஎல் பருவங்களில் நான் ஐந்து இறுதிப் போட்டிகளில் விளையாடினேன். அவற்றுள் மூன்று முறை சாம்பியன் பட்டத்தைப் பெற்றோம். நான் இதுவரை உலகக் கோப்பையில் விளையாடவில்லை. எனக்கு வாய்ப்பு கிடைத்தால் கோப்பையை வெல்ல என்னுடைய பங்களிப்பை அளிப்பேன் என்றார்.

எம்.எஸ். தோனி குறித்து சஹார் பேசியதாவது: மஹி பாயுடன் நேரத்தைச் செலவிடும் வாய்ப்பு கிடைத்ததில் நான் மிகவும் அதிர்ஷ்டசாலி. பல வருடங்களாக அவருடன் விளையாடி வருகிறேன். அவரை எனது மூத்த சகோதரனாகவும் எனது முன்மாதிரியாகவும் கருதுகிறேன். ஒரு கிரிக்கெட் வீரராகவும் தனிப்பட்ட மனிதனாகவும் அவரை மிகவும் மதிக்கிறேன். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன் என்றார்.

2018-ல் இந்தியாவுக்காக அறிமுகமான தீபக் சஹார் 12 ஒருநாள் ஆட்டங்களில் பங்கேற்று 16 விக்கெட்டுகளையும் 24 டி20 ஆட்டங்களில் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.

Comments