செப்டம்பர் 22: மார்டின் குரோ பிறந்தநாளும், 'டை' ஆன மெட்ராஸ் டெஸ்டும்!
1962: மார்டின் குரோ பிறந்தநாள்!
நியூசிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த பேட்டராகப் போற்றப்படும் மார்டின் குரோ-வின் பிறந்தநாள் இன்று.
பேட்டிங் தொழில்நுட்பங்களில் வலிமையான இவர், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் ஆகிய பந்துவீச்சுப் படைக்கு எதிராக தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை அடித்தார். பிரெண்டன் மெக்கல்லம் 302 ரன்கள் விளாசும் வரை, இலங்கைக்கு எதிராக குரோ 299 ரன்கள் எடுத்ததே, டெஸ்டில் நியூசிலாந்தின் அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.
கேப்டனாக அவருடைய பங்களிப்பு மிக முக்கியமானது. 1992 உலகக் கோப்பையில் நடுவரிசை பேட்டரான மார்க் கிரேட்பேட்ச்சைத் தொடக்க பேட்டராகக் களமிறக்கி அதிரடியாக விளையாடச் சொன்னது, சுழற்பந்துவீச்சாளரான தீபக் படேலை முதல் ஓவரை வீச வைத்தது எனப் புத்திசாலித்தனமான மற்றும் புதுமையான முடிவுகளால் நியூசிலாந்தை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார். அந்த உலகக் கோப்பையில் 456 ரன்களும் எடுத்து முத்திரை பதித்தார்.
1995-ல் கடைசியாக விளையாடிய குரோ, டெஸ்டில் அதிக ரன்கள் எடுத்த நியூசிலாந்து வீரர் என்கிற பெருமையுடன் ஓய்வு பெற்றார்.
அடுத்த தலைமுறையை ஆளப்போகும் கிரிக்கெட் வீரர்களைக் குறிப்பிட்டு ஃபேப் ஃபோர் (Fab Four) என்கிற சொல்லை உருவாக்கியவர் இவர்தான். இவர் கூறியதைப்போல ஜோ ரூட், ஸ்டீவ் ஸ்மித், கேன் வில்லியம்சன், விராட் கோலி ஆகியோர் அடுத்த தலைமுறையை ஆட்சி செய்தார்கள். குரோ சொன்னதைப்போலவே அவர்கள் நாட்டு அணியை வழிநடத்தினார்கள்.
2016-ல் 53 வயதில் புற்றுநோயால் காலமானார்.
1986: 'டை' ஆன மெட்ராஸ் டெஸ்ட்!
ஒரு டெஸ்ட் டிரா ஆவது வேறு, டை ஆவது வேறு. டிரா என்றால் அதன் முடிவை அனைவரும் ஒரேடியாக மறந்துவிடுவார்கள். டை என்றால் அந்த முடிவு காலத்துக்கும் ரசிகர்கள் நினைவில் நிற்கும். அப்படியொரு டெஸ்ட் தான் இது.
1986-ல் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் சென்னையில் மோதின. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட் இழப்புக்கு 574 குவித்தபோது இந்த முடிவை யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். இந்தியா முதல் இன்னிங்ஸில் 397 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்ஸில் 5 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
கடைசி நாள் ஆட்டத்தில் இந்தியா 87 ஓவர்களில் 348 ரன்கள் எடுக்க வேண்டும்.
வெற்றி இலக்கை விரட்டிய இந்தியா தேநீர் இடைவேளை வரை 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 190 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி ஐந்து ஓவர்களில் 18 ரன்கள் தேவைப்பட இந்தியாவின் வசம் நான்கு விக்கெட்டுகள் இருந்தன.
ஆனால், ரே பிரைட் ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி திருப்புமுனையை உண்டாக்கினார். இதனால், அனைத்து விதமான முடிவுகளும் சாத்தியமாகின.
மேத்யூஸ் ஓவரில் சிக்ஸர் அடித்து அவரிடமே ஆட்டமிழந்தார் ஷிவ்லால் யாதவ். இந்தியா 9 விக்கெட்டுகளை இழந்து 344 ரன்கள் எடுக்க, கடைசி 8 பந்துகளில் 4 ரன்கள் தேவைப்பட்டன. பிரைட் ஓவரின் இரு பந்துகளைத் தாக்குப்பிடித்தார் 11-வது வீரராகக் களமிறங்கிய மனிந்தர் சிங்.
கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் இருந்தார் 45 ரன்கள் எடுத்திருந்த ரவி சாஸ்திரி. 6 பந்துகளில் 4 ரன்கள் தேவை. கிரேக் மேத்யூஸ் பதற்றமான அந்த ஓவரை வீசினார். கள நடுவர் - விக்ரம் ராஜு.
2-வது பந்தில் இரண்டு ரன்கள் எடுத்தார் ரவி சாஸ்திரி. மூன்றாவது பந்தில் 1 ரன் எடுத்து சமன் செய்து ஸ்டிரைக்கை மனிந்தரிடம் ஒப்படைத்தார். மீதம் மூன்று பந்துகள் இருக்க இந்தியாவுக்கு 1 ரன்னும், ஆஸ்திரேலியாவுக்கு 1 விக்கெட்டும் தேவைப்பட்டன. ஆட்டத்தின் கடைசிக்கு முந்தைய பந்தில் மனிந்தரை எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழக்கச் செய்து டெஸ்டை டை செய்தார் மேத்யூஸ். அப்பீல் கேட்டவுடன் கையை உயர்த்தினார் விக்ரம் ராஜு.
டெஸ்ட் டை-யில் முடிவது டெஸ்ட் வரலாற்றில் இதுவே இரண்டாவது முறை. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க டெஸ்ட் நிறைவடைந்து இந்த நாளில்தான்.
ஆஸ்திரேலியாவின் டீன் ஜோன்ஸ் சென்னை வெயிலுக்கு ஈடுகொடுக்க முடியாமல், களத்தில் நிற்கக்கூட முடியாமல், உடல் சோர்வடைந்தும் இரட்டைச் சதம் அடித்து 210 ரன்கள் ஆட்டமிழந்ததும் இதே டெஸ்டில்தான்.