செப்டம்பர் 23: அம்பதி ராயுடு பிறந்தநாள்!
1985
அம்பதி ராயுடு பிறந்தநாள்!
இந்திய கிரிக்கெட்டில் இன்னும் பல சாதனைகள் புரிந்திருக்க வேண்டும் என்று ரசிகர்கள் ஆதங்கப்படும் வீரர்களில் முன்னணியில் இருப்பவர் அம்பதி ராயுடு. தனது 38-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்.
21 வயதில் ஐசிஎல் போட்டியில் விளையாடியதால் மிகத் தாமதமாகவே இந்திய அணியில் அறிமுகமானார். 2013 முதல் 2019 வரை இந்திய அணிக்காக 55 ஒருநாள், 6 டி20 ஆட்டங்களில் ராயுடு விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் 3 சதங்களும் 10 அரை சதங்களும் எடுத்துள்ளார். 2015 உலகக் கோப்பைக்கான இந்திய அணியிலும் இடம்பெற்றார்.
ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் விளையாடி 6 ஐபிஎல் கோப்பைகளை வெல்வதில் பங்களித்துள்ளார். ராயுடுவுக்கு 2018 ஐபிஎல் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. சிஎஸ்கே அணிக்காக 16 ஆட்டங்களில் விளையாடிய அவர் ஒரு சதம் உள்பட 602 ரன்கள் அடித்து சிஎஸ்கே அணி, ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். 2023 ஐபிஎல் இறுதி ஆட்டத்துடன் ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றார். தற்போது மற்ற நாடுகளில் நடைபெறும் டி20 லீக் போட்டிகளில் விளையாடி வருகிறார்.
203 ஐபிஎல் ஆட்டங்களில் விளையாடியுள்ள ராயுடு 4,348 ரன்கள் எடுத்துள்ளார்.
2019 உலகக் கோப்பை போட்டியில் ராயுடு தேர்வு செய்யப்படாதது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. தனக்குப் பதிலாக விஜய் சங்கர் தேர்வானதால் தேர்வுக்குழுவினரை ராயுடு விமர்சித்தது அவருடைய சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஐசிஎல்-லில் இடம்பெறாமலும் கோபத்தை வெளிப்படுத்தாமலும் இருந்திருந்தால் ராயுடுவால் சர்வதேச கிரிக்கெட்டில் இன்னும் பல ஆண்டுகள் விளையாடியிருக்க முடியும்.
1971
மொயீன் கான் பிறந்தநாள்!
பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் மொயீன் கான் பிறந்த தினம் இன்று.
ஒருநாள் கிரிக்கெட்டில் பின்வரிசையில் களமிறங்கி விரைவாக ரன்கள் எடுத்தவர் மொயீன் கான். 1992 உலகக் கோப்பையில் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் அவருடைய அதிரடி ஆட்டத்தை யாரால் மறக்க முடியும்?
டெஸ்டில் 4 சதங்கள் அடித்துள்ளார் மொயீன் கான். இதில் 3 சதங்கள் 1994-96 காலக்கட்டத்தில் 8 டெஸ்டுகளில் அடிக்கப்பட்டன.
கம்ரான் அக்மல் வருகையைத் தொடர்ந்து, 2004-க்குப் பிறகு அவருக்கு பாகிஸ்தான் அணியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பாகிஸ்தான் அணிக்காக 69 டெஸ்டுகள், 219 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ளார்.
2013-ல் பாகிஸ்தான் அணியின் மேலாளராக இருந்த மொயீன் கான், 2014-ல் ஆசியக் கோப்பை மற்றும் டி20 உலகக் கோப்பைக்கான பாகிஸ்தான் அணிகளின் இடைக்கால தலைமைப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்றார். 2014-ல் தேர்வுக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.