1983 வெற்றி: யானையின் காதில் புகுந்த எறும்பு!

ESPNcricinfo staff
இந்திய அணியின் வெற்றிப் பயணம் மட்டுமல்ல மேற்கிந்தியத் தீவுகளின் சரிவும் தொடங்கியது 1983-லிருந்துதான்.

உலகக் கோப்பையுடன் கபில் தேவ் © Getty Images

1983 உலகக் கோப்பையை கபில் தேவ் கையில் ஏந்திய நொடி, இந்திய கிரிக்கெட்டின் தலையெழுத்து மாற்றி எழுதப்பட்டது. பிற்காலத்தில் சச்சின், தோனி, கோலி போன்ற ஜாம்பவான்கள் இந்திய கிரிக்கெட்டை அலங்கரிப்பதற்கு விதைபோட்டது அந்த ஒரு தருணம்தான். பலம் வாய்ந்த கோலியாத்தை தாவீது வீழ்த்திய கதைதான் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி உலகக் கோப்பையை வென்றது.

1983-ல் உலகக் கோப்பை வெல்வோம் என்று இந்திய அணி வீரர்கள் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. இந்தியா இறுதி ஆட்டத்துக்கு எப்படியும் முன்னேறாது என்ற நம்பிக்கையில் தேனிலைவைக் கொண்டாடுவதற்காக கிருஷ் ஸ்ரீகாந்த் அமெரிக்காவுக்கு விமான டிக்கெட்டை முன்பதிவே செய்துவிட்டார். 1975, 1979 உலகக் கோப்பைகளில் விளையாடிய இந்தியா, கத்துக்குட்டியான கிழக்கு ஆப்பிரிக்காவை மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. வழக்கம்போல ஒரு படையுடன் சென்று, அதே படையுடன் புறமுதுகுக் காட்டித் திரும்புவார்கள் என்றுதான் கணிக்கப்பட்டது. ஆனால் நடந்ததோ, யாராலும் நினைத்துப் பார்க்க முடியாத ஓர் அதிசயம்.

இந்திய அணி, 1983 உலகக் கோப்பைக்கு முன்பாகவும் சரியான ஃபார்மிலும் இல்லை. பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்று ஒருநாள் தொடர்களில் தோற்றிருந்தது. உலகக் கோப்பைப் பயிற்சி ஆட்டங்களிலும் படுதோல்வியைச் சந்தித்ததால் அடுத்தச் சுற்றைத் தாண்டுவோம் என்று இந்திய வீரர்களே நம்பவில்லை. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் ஆட்டம். முந்தைய நாள் இரவு மேற்கிந்தியத் தீவுகள் அணியை நம்மால் வீழ்த்த முடியும் என வீரர்கள் மத்தியில் கபில் தேவ் பேசினார். அதை ஒருவரும் பெரிதாக எடுக்கவில்லை. இந்த ஆள் என்ன முட்டாளா? நம்மால் எப்படி மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்த முடியும் என்று நினைத்தோம் என்றார் ஸ்ரீகாந்த்.

சொன்னதைச் செய்து காட்டினார் கபில் தேவ். யாரும் எதிர்பார்க்காத விதமாக இந்திய அணி, குரூப் பி சுற்றில் தனது முதல் ஆட்டத்தில் பலம் வாய்ந்த மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது. 89 ரன்கள் குவித்து யஷ்பால் சர்மா கைகொடுக்க, 262 ரன்களை எடுத்தது இந்திய அணி. பலம் வாய்ந்த பேட்டிங் வரிசையை கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் - ரவி சாஸ்திரி, ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இருமுறை உலகக் கோப்பையை வென்று பீமபலத்துடன் இருந்த ஓர் அணி முதல் ஆட்டத்திலேயே அதுவும் இந்தியாவிடம் தோற்றதால் உலகக் கோப்பைப் போட்டியின் மீது ரசிகர்களுக்கு உடனடியாகப் பரபரப்பு தொற்றிக் கொண்டது. இது, மேற்கிந்தியத் தீவுகள் அணி வழக்கமாக ஜெயிக்கும் உலகக் கோப்பை அல்ல என உணரவைத்தது.

ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில்... இல்லையில்லை... நீங்கள் நினைக்கும் ஆட்டம் அல்ல இது. அந்த வரலாற்றுப் புகழ் ஆட்டத்துக்கு முன்பே ஜிம்பாப்வேவை எதிர்கொண்டது இந்தியா. மதன் லாலின் பந்துவீச்சும் சையது கிர்மானியின் விக்கெட் கீப்பிங்கும் இந்தியாவுக்கு எளிதான வெற்றியைத் தேடிக் கொடுத்தன. 5 கேட்சுகள் பிடித்த கிர்மானி, உலகக் கோப்பையில் அதிக கேட்சுகள் பிடித்த விக்கெட் கீப்பர் என்ற சாதனையை நிகழ்த்தினார். ஜிம்பாப்வே 155 ரன்களுக்குச் சுருண்டது. பதிலுக்கு இந்தியா 37.3 ஓவர்களில் இலக்கை அடைந்தது.

இங்கிலாந்து வீதிகளைச் சுற்றிப் பார்க்க வந்த இந்திய அணி, முதலிரண்டு ஆட்டங்களில் வெற்றிபெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது. ஆனால் 3-வது ஆட்டத்தில் 321 ரன்கள் இலக்கை எதிர்கொண்ட இந்தியா, ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 158 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் ஆட்டத்தில் இந்தியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்த மேற்கிந்தியத் தீவுகள், அடுத்த ஆட்டத்தில் இந்தியாவுக்குத் தண்ணி காட்டியது. அந்த அணி விவியன் ரிச்சர்ட்ஸின் உதவியுடன் 282 ரன்கள் குவித்தது. இந்தியா, 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. எனில், அந்த முதல் ஆட்ட வெற்றி ஏதோ அதிர்ஷ்டத்தால் வந்தது போல என ரசிகர்கள் எண்ணிக்கொண்டார்கள்.

முதல் இரு ஆட்டங்களில் பெற்ற வெற்றிகளோடு அடுத்த இரு ஆட்டங்களிலும் அடுத்தடுத்து தோற்றதால் இந்தியா, அடுத்தச் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் ஏற்பட்டது. தனது 5-வது ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியை மீண்டும் எதிர்கொண்டது. இந்த ஆட்டம் வரலாற்றில் இடம்பெறப் போகிறது என்பது தெரியாமலேயே வீரர்கள் அனைவரும் பங்கேற்றார்கள். இது என்ன, துக்கடா ஆட்டம்... என்றெண்ணி இதைப் புறக்கணித்து, லார்ட்ஸில் நடைபெற்ற ஆஸ்திரேலியா - மே.இ. தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தை நேரலையாக ஒளிபரப்பு செய்தது பிபிசி. மைதானத்தில் இருந்த 10 ஆயிரம் பேரைத் தவிர வெளியே யாராலும் பார்க்க முடியாத ஓர் ஆட்டத்தில்தான் வாழ்நாள் எல்லாம் நினைவில் நிற்கும் ஓர் இன்னிங்ஸை வெளிப்படுத்தினார் கபில் தேவ்.

17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்த இந்திய அணியை, 175 ரன்கள் குவித்து கபில் தேவ் மீட்டெடுத்தார். இந்த இன்னிங்ஸை நேரில் பார்த்தவர்கள், காண கண் கோடி வேண்டும் என்றார்கள்.

முதலில் அணியைக் காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்ட கபில், அரை சதத்தை 72 பந்துகளில் எடுத்தார். அடுத்த அரை சதம் கண்ணிமைக்கும் நேரத்தில் வந்தது. சரியாக 100 பந்துகளில் சதத்தை எட்டினார். அவ்வளவுதான்... அதற்குப் பிறகு ரசிகர்களும் எதிரணி வீரர்களும் நேரில் கண்டது ஒரு ருத்ரதாண்டவம். சதத்துக்குப் பிறகு அடுத்த 75 ரன்களை 38 பந்துகளில் எடுத்தார். இந்தியா 60 ஓவர்களில் 266/8, கபில் தேவ் ஆட்டமிழக்காமல் 175 ரன்கள். உலக சாதனை. ஜிம்பாப்வே 235 ரன்களுக்கு ஆட்டமிழக்க, அரையிறுதியை நோக்கி நகர ஆரம்பித்தது இந்தியா.

வாழ்வா சாவா ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுடன் மோதிய இந்தியா, முதலில் பேட்டிங் செய்து 247 ரன்கள் எடுத்தது. மதன்லால், ரோஜர் பின்னி, பல்விந்தர் சந்து ஆகியோரின் துல்லியமான மிதவேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாத ஆஸ்திரேலியா, 129 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பக்கிங்ஹாம் அரண்மனையை சுற்றிப் பார்க்கும் கனவுடன் இங்கிலாந்து மண்ணில் காலடி எடுத்துவைத்த இந்தியா, யாரும் எதிர்பார்க்காத வகையில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.

அரையிறுதியில் உலகக் கோப்பை போட்டியின் பலம் பொருந்திய அணிகளின் ஒன்றான இங்கிலாந்தை எதிர்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, அபாரமாக விளையாடி ரன் குவித்தது. டேவிட் கோவர், மைக் கேட்டிங் போன்ற முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றிய அமர்நாத், புயல் வேகத்தில் சென்று கொண்டிருந்த இங்கிலாந்து அணியைத் தடுத்து நிறுத்தினார். ஒருகட்டத்தில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து, 213 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இந்தியாவுக்கு காவஸ்கர் - ஸ்ரீகாந்த் இணை நல்ல தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. பந்துவீச்சில் அசத்திய அமர்நாத் 46 ரன்கள் எடுத்து பேட்டிங்கிலும் பங்களித்தார். இதன் மூலம், ஐந்து ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்று முதல்முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு இந்திய அணி தகுதிபெற்றது.

கனவு பலித்ததாக இந்திய ரசிகர்கள் இதைக் கொண்டாடினார்கள். பொறுங்கள், இன்னும் ஒரு வெற்றி மீதமுள்ளது என்றார் கபில் தேவ்.

இந்திய அணி மேற்கிந்தியத் தீவுகளோடு சரிக்குச் சமமாக மோதியது 1983 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் மட்டுமல்ல. அதற்கு முன்பிருந்தே இந்திய அணி மே.இ. தீவுகளுக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டு தானிருந்தது. அதே வருடம் மார்ச்சில், மே.இ. தீவுகளுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்தியா, ஒருநாள் தொடரில் தோற்றாலும் கம்பீரமாக ஓர் ஆட்டத்தில் வென்றது. கயானாவின் அல்பியானில் நடைபெற்ற ஒருநாள் ஆட்டத்தில் மே.இ. தீவுகளுக்கு எதிரான அப்போதைய அதிகபட்ச ஒருநாள் ஸ்கோரை (282 ரன்கள்) எடுத்தது இந்தியா. டி20 வேகத்தில் 38 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 7 பவுண்டரிகளுடன் 72 ரன்கள் எடுத்து இந்த வெற்றியைச் சாதித்தார் கபில் தேவ். அன்று ஹோலி தினம் என்பதால் இந்திய ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமானது. 1977 முதல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு வந்து இதர அணிகள் ஒருநாள் தொடர்களில் விளையாடின. ஆனால் ஒருமுறை ஆஸ்திரேலியா நூலிழையில் பெற்ற வெற்றியைத் தவிர வேறு எந்த அணியாலும் மேற்கிந்தியத் தீவுகளை அவர்கள் மண்ணில் வெல்ல முடியவில்லை. அந்த மலையைத்தான் புரட்டிப் போட்டார் கபில் தேவ். கயானாவிலேயே மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதுதான் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்தது. ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் அங்கிருந்துதான் தொடங்கியது என்று கயானா டைம்ஸுக்குப் பேட்டியளித்தார் கபில் தேவ்.

அதுவுமில்லாமல் உலகக் கோப்பை முதல் ஆட்டத்தில் இன்னொருமுறை மே.இ. தீவுகளுக்கு இந்தியா கும்மாங்குத்து விட, இறுதிச்சுற்றுக்கு முன்பு கபில் தேவ் தெம்பாக இருந்தார். இது ஒன்றும் வீழ்த்த முடியாத அணியில்லை. இந்த வருடத்தில் மட்டுமே இருமுறை வீழ்த்தியுள்ளோம், இன்னொரு முறை வீழ்த்தினால் உலகக் கோப்பை நம் உள்ளங்கையில் என அணி வீரர்களுக்கு நம்பிக்கையூட்டினார். துணிச்சல்களே சாதனைகளை அறுவடை செய்யும்.

லார்ட்ஸில் இறுதிச்சுற்று. உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடி வெற்றி பெறுவது என்பது மேற்கிந்தியத் தீவுகளுக்குத் தண்ணி பட்ட பாடு. ஆனால் இந்தியாவுக்கு அந்தத் தருணம் புதிது. மனத்தில் பட்டாம்பூச்சிகள் பறபறக்கக் களமிறங்கினார்கள் நம் வீரர்கள். டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் கேப்டன் கிளைவ் லாயிட், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதற்கு முந்தைய இரு உலகக் கோப்பை இறுதிச்சுற்றுகளிலும் டாஸில் தோற்ற மே.இ. தீவுகள் முதலில் பேட்டிங் செய்து 291, 286 ரன்கள் குவித்தது. கோப்பைகளை வென்றது. ஆனால் அவற்றின் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது ஒருவேளை டாஸை வென்று மேற்கிந்தியத் தீவுகள் முதலில் பேட்டிங் செய்திருந்தால் முடிவு மாறியிருக்குமோ என்றுகூட எண்ணத் தோன்றுகிறது.

ஆன்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், மால்கம் மார்ஷல் ஆகியோரின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், இந்தியா 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக தொடக்க பேட்டர் ஸ்ரீகாந்த், 38 ரன்கள் சேர்த்தார். எளிதான இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு மதன்லால் அதிர்ச்சி கொடுத்தார். தொடக்க பேட்டர் கிரீனிட்ஜ் விக்கெட்டை 1 ரன்னில் இழந்த போதும் நட்சத்திர பேட்டர் விவியன் ரிச்சர்ட்ஸ் அதிரடி ஆட்டத்தைக் கைவிடவில்லை.

அப்போதும் கூட இந்தியா உலகக் கோப்பையை வெல்லும் என்ற நம்பிக்கை கபில்தேவைத் தவிர வேறு யாருக்குமே இல்லை. மைதானத்தில் இருந்த காவஸ்கர் மனைவி, பவுண்டரி லைனில் ஃபீல்டிங் செய்துகொண்டிருந்த சந்தீப் பாட்டிலிடம், "அரை மணி நேரத்தில் காவஸ்கரை ஸ்டேசனுக்கு வரச்சொல்லுங்கள். ஷாப்பிங் போக வேண்டும்" என்றிருக்கிறார். சந்தீப் பாட்டில் சுமாரான ஃபீல்டர் என்பதால் அவரைக் குறிவைத்து மேற்கிந்தியத் தீவுகள் பேட்டர்கள் ரன் சேர்த்தனர்.

மதன்லால் வீசிய ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகள் விளாசிய ரிச்சர்ட்ஸ், அவருடைய பந்திலேயே விக்கெட்டைப் பறிகொடுத்தார். ரிச்சர்ட்ஸ் அடித்த புல் ஷாட் சரியான டைமிங் இல்லாததால் மேலேற, மிட்விக்கெட்டில் நின்றிருந்த கபில் தேவ் பின்னால் ஓடி அபாரமான கேட்சைப் பிடித்தார். அது மற்றொரு புகழ்பெற்ற தருணம். கேப்டன் கிளைவ் லாயிடும் 8 ரன்களில் வெளியேற, மேற்கிந்தியத் தீவுகள் அணி 66 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசிக்கட்டத்தில் டுஜான் - மார்ஷல் இணை போராடிய போதும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை.

ஒருகட்டத்தில் 1 விக்கெட்டை மட்டும் இழந்து 50 ரன்கள் எடுத்திருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணி 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதல்முறையாக ஒருநாள் உலகக் கோப்பையை வென்று சாதித்தது.

இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதியில் ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்ட அமர்நாத், இறுதி ஆட்டத்திலும் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதன் மூலம் உலகக் கோப்பையின் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டங்களில் ஆட்ட நாயகன் விருதை வென்ற முதல் வீரர் என்ற சாதனையை அமர்நாத் படைத்தார். இங்கிலாந்து பேட்டர் டேவிட் கோர், 384 ரன்கள் குவித்து அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். சராசரி 76.80, ஸ்டிரைக் ரேட் 85.95. அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய பந்துவீச்சாளர்கள் வரிசையில் இந்தியாவின் ரோஜர் பின்னி(18) முதலிடம் பிடித்தார்.

உலகக் கோப்பையில் ஓர் ஆட்டத்தில் கூட கபில் தேவ் மோசமாக விளையாடவில்லை. பந்துவீச்சில் 12 விக்கெட்டுகள் எடுத்தார். அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 5-வது இடமும் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 8-வது இடமும் பிடித்தார். இந்த உலகக் கோப்பையில் தொடர் நாயகன் விருது என்கிற ஒன்று வழங்கப்படவில்லை. ஒருவேளை அது இருந்திருந்தால் நிச்சயம் கபில் தேவுக்குத்தான் கிடைத்திருக்கும்.

இந்திய அணி உலகக் கோப்பையை வென்றதை விடவும் மூன்று மாத இடைவெளியில் மூன்று முறை மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியதால் இந்திய அணியை யானையில் காதில் புகுந்த எறும்பாகவே கிரிக்கெட் உலகம் பார்த்தது,

ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியின் வெற்றிப் பயணம் மட்டுமல்ல மேற்கிந்தியத் தீவுகளின் சரிவும் தொடங்கியது 1983-லிருந்துதான்.

Comments