2011 உலகக் கோப்பை: என்ன நடந்தது அப்போட்டியில்?
1983-க்குப் பிறகு இந்தியா மீண்டும் உலகக் கோப்பையைக் கைப்பற்றுவதற்கு 28 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. கனவான்களின் ஆட்டமாக இருந்த கிரிக்கெட்டை சாமானியர்களின் ஆட்டமாக மாற்றியவர் கபில் தேவ். அதே போல, மும்பை, தில்லி, பெங்களூர் என்று நகரங்களின் ஆட்டமாக இருந்த கிரிக்கெட்டை ராஞ்சியில் இருந்து கிளம்பி வந்து ஜனநாயகப்படுத்தியவர் தோனி.
உள்ளூரில் நடைபெறும் உலகக் கோப்பைக்கு தோனி தலைமையிலான இந்தியா மிகவும் சிறப்பாக தயாரானது. உலகக் கோப்பைக்கு முன்பாக கடைசி ஐந்து ஒருநாள் தொடர்/போட்டிகளில் ஆசியக் கோப்பை உள்பட மூன்றை இந்தியா கைப்பற்றியது. கடைசி 13 மாதங்களில் 32 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய இந்தியா, 19-ல் வெற்றியும் 13-ல் தோல்வியும் பெற்றது.
1983 உலகக் கோப்பையில் யாரும் எதிர்பார்க்காத ஓர் இளம் படை கோப்பையை வென்றது. ஆனால், 2011 உலகக் கோப்பைக்கு அனுபவமும் இளமையும் ஒன்று சேர்ந்த ஓர் அணி தேர்வு செய்யப்பட்டது. குறிப்பாக உள்ளூர் சூழலுக்கு ஏற்ற வீரர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டது. பந்துவீச்சுக்கு ஜாகீர் கானும் ஹர்பஜன் சிங்கும் தலைமை தாங்கினர். அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஆஷிஸ் நெஹ்ராவும் அணியில் சேர்க்கப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த ஆஃப் ஸ்பின்னர் ஆர். அஸ்வின் தனது முதல் உலகக் கோப்பையை விளையாடத் தயாரானார்.
ஸ்விங் பந்துவீச்சாளர் பிரவீன் குமார் காயமடைந்ததால் முனாஃப் படேலுக்கு வாய்ப்புக் கிடைத்தது. பேட்டிங்கில் சச்சின், சேவாக், கம்பீர், யுவராஜ் சிங், தோனி என்று ஒரு படையே இருந்தது. கோப்பை உறுதி என்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டன் வழிகாட்டினார்.
பி பிரிவில் இடம்பெற்றிருந்த இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் வங்கதேசத்தை எதிர்கொண்டது. 2007 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்த அணி என்பதால், டாக்காவில் நடைபெற்ற ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமிருந்தது. அதிரடி பேட்டர் சேவாக்,, இளம் பேட்டர் கோலி ஆகியோர் கைகொடுக்க, முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 370 ரன்கள் குவித்தது. வங்கதேச பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்த சேவாக், 140 பந்துகளில் 14 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் உடன் 175 ரன்கள் குவித்தார்.
நான்காவது பேட்டராக களமிறங்கிய கோலி, 83 பந்துகளில் சதமடித்து அசத்தினார். பெரிய இலக்கை விரட்டிய வங்கதேசத்துக்கு தமிம் இக்பால் நம்பிக்கையான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தார். நடுவரிசையில் கேப்டன் ஷகிப் அல் ஹசனைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடததால், 87 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்றது.
இந்தியா, தனது 2-வது ஆட்டத்தில் ஸ்டிராஸ் தலைமையிலான இங்கிலாந்தை எதிர்கொண்டது.
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த இந்தியா, 338 ரன்கள் குவித்தது. சச்சின் 120 ரன்கள் குவித்தார். மிகப் பெரிய இலக்கை விரட்டிய இங்கிலாந்துக்கு ஸ்டிராஸ் அபாரமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். ஒரே ஓவரில் ஸ்டிராஸ், பெல் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்திய ஜாகீர் கான், ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
கடைசி ஓவரில் 14 ரன்கள் தேவைப்பட, இங்கிலாந்து 13 ரன்கள் மட்டுமே எடுத்ததால் ஆட்டம் டை-யில் முடிந்தது. உலகக் கோப்பையின் தலைசிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இது வர்ணிக்கப்படுகிறது. அடுத்த இரு ஆட்டங்களில் அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளை எளிதில் வீழ்த்திய இந்தியா, தனது ஐந்தாவது ஆட்டத்தில் கிரீம் ஸ்மித் தலைமையிலான தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டது.
நாக்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சச்சின் சதத்தின் உதவியுடன் 296 ரன்கள் எடுத்தது. பெரிய ஸ்கோர் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா, கடைசி 10 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சொதப்பியது. பதற்றமில்லாமல் விளையாடிய தென்னாப்பிரிக்கா, 2 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை விரட்டியது. 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவிடம் இந்தியா அடைந்த தோல்வி இந்திய ரசிகர்களைப் பதற வைத்தது.
அடுத்த ஆட்டத்தில் சென்னையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 80 ரன்களில் வீழ்த்திய இந்தியா, காலிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றது. சென்னையில் நடைபெற்ற ஆட்டத்தில் அஸ்வினை விளையாட வைத்தார் தோனி. வெற்றி பெற்றால் காலிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிந்தும் இந்திய அணி வெற்றி பெற்று பெரிய சவாலுக்குத் தயாரானது.
அஹமதாபாதில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான வலிமையான ஆஸ்திரேலியா உடன் இந்தியா மோதியது. இதிலும் அஸ்வின் விளையாடினார். கேப்டன் ரிக்கி பாண்டிங் சதத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு, 261 ரன்களை வெற்றி இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்தது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் அற்புதமாக இருந்தது. யுவ்ராஜ் சிங், ரெய்னா அசத்தினார்கள்.
முக்கியமான கட்டத்தில் யுவ்ராஜ் சிங் - ரெய்னா இணை அபாரமாக விளையாடியதால், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2011 உலகக் கோப்பையின் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றான இதில் 2 விக்கெட்டுகளும் அரை சதமும் அடித்த யுவ்ராஜ் சிங் ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொஹாலியில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் பரம வைரி பாகிஸ்தானை எதிர்கொண்டது இந்தியா.
இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கும் பாகிஸ்தான் பிரதமர் யூசுப் கிலானியும் மைதானத்துக்கு வருகை தந்தனர். கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்துக் காத்திருந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா, வஹாப் ரியாஸின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 260 ரன்கள் மட்டுமே எடுத்தது. நம்பிக்கை நட்சத்திரம் யுவராஜ் சிங், தனது உள்ளூர் மைதானத்தில் முதல் பந்தில் ஆட்டமிழந்து ரசிகர்களை ஏமாற்றினார். நடுவர் சம்மதம் தெரிவித்த சச்சினுடைய எல்பிடபிள்யுவை 3-வது நடுவர் அவுட் இல்லை என அறிவித்தது இன்று வரை சர்ச்சையாகவே இருக்கிறது.
எளிமையான இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தானுக்கு முகமது ஹஃபீஸ் நல்லத் தொடக்கம் அமைத்துக் கொடுத்தார். ஆனால் நடு ஓவர்களில் மிஸ்பா உல் ஹக் தவிர ஒருவரும் சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை. இந்தியப் பந்துவீச்சாளர்கள் மிகவும் கட்டுக்கோப்பாக பந்துவீசினார்.
29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா, மூன்றாவது முறையாக உலகக் கோப்பை இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது. தோனி இன்னொருமுறை உலகக் கோப்பையை வெல்வாரா என நாடே எதிர்பார்த்தது. கொழும்பில் நடைபெற்ற மற்றொரு அரையிறுதியில் நியூசிலாந்தை எளிதாக வீழ்த்தியது இலங்கை. இதனால் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருந்தார்கள்.
ஆடுகளம் எப்படி அமையும் என்கிற கவலை தோனிக்கு ஏற்படவில்லை. உண்மையில் ஆடுகளத்தைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை. மும்பை மைதானம் எப்படி இருக்கும் என்பது அவருக்குத் தெரியாதா? ஆனால் இலங்கை வீரர்கள் ஆடுகளத்தை அடிக்கடிப் பார்வையிட்டு விசாரித்தார்கள்.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை, ஜெயவர்தனே சதத்தின் உதவியுடன் 274 ரன்கள் எடுத்தது. காயமடைந்த நெஹ்ராவிற்குப் பதிலாக சேர்க்கப்பட்ட ஸ்ரீசாந்த், 8 ஓவர்களில் 52 ரன்களை விட்டுக்கொடுத்தார்.
இந்தப் போட்டியில் 8 ஆட்டங்களில் 6-ல் முதல் பந்தில் பவுண்டரி அடித்த சேவாக், இந்தமுறை 2-வது பந்திலேயே மலிங்கா பந்தில் டக் அவுட் ஆனார். 18 ரன்களில் லிட்டில் மாஸ்டர் சச்சினும் விக்கெட்டைப் பறிகொடுக்க வான்கடே மைதானம் நிசப்தத்தில் உறைந்தது. மூன்றாவது விக்கெட்டுக்கு கம்பீர் - கோலி இணை, 83 ரன்கள் சேர்த்து தத்தளித்த அணியை மீட்டெடுத்தது. இளம் பேட்டர் விராட் கோலி, 35 ரன்களில் ஆட்டமிழந்தார்.
யுவராஜ் சிங் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 5-வது பேட்டராக ஃபார்மில் இல்லாத தோனி உள்ளே வந்தார். முரளிதரனை ஒரு வலக்கை பேட்டர் நன்றாக எதிர்கொள்ள முடியும் என்பதாலும், சிஎஸ்கே வலைப்பயிற்சியில் முரளிதரனை எதிர்கொண்டு விளையாடிய அனுபவம் இருப்பதாலும் களமிறங்கியதாக பின்னர் தோனி தெரிவித்தார். 30 ரன்களில் கம்பீர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குலசேகரா தவறவிட்டார். அபாரமாக விளையாடிய கம்பீர், 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதி ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த தோனி, குலசேகரா பந்தில் சிக்ஸர் அடித்து உலகக் கோப்பையை மீண்டும் இந்தியாவுக்குப் பெற்றுக் கொடுத்தார். கடைசி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடிய முரளிதரன் விக்கெட் எதுவும் எடுக்காமல் தனது 19 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கையை நிறைவு செய்தார். உலகக் கோப்பையை சச்சினுக்கு சமர்ப்பித்த இந்திய அணியினர், அவரைத் தோளில் தூக்கி சுமந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பதற்றமின்றி 79 பந்துகளில் 91 ரன்கள் குவித்த தோனி ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.
தேசத்தின் சுமையை 21 வருடங்கள் சச்சின் தோளில் சுமந்தார்; இப்போது எங்கள் தோள்களில் அவரை சுமக்கின்ற நேரம் இது என்றார் விராட் கோலி. உலகக் கோப்பையை வென்ற பிறகு மொட்டை அடித்து தனது வேண்டுதலை தோனி நிறைவேற்றினார் என்று கூறப்படுகிறது. புற்றுநோய் பாதிப்புடன் கடுமையான வலிகளுக்கு மத்தியில் விளையாடிய யுவராஜ் சிங், 2011 உலகக் கோப்பையின் தொடர் நாயகன் விருதை வென்றார். மொத்தமாக 362 ரன்களும் 15 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
500 ரன்கள் குவித்த தில்ஷன், அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். பந்துவீச்சாளர்களில் ஜாகீர் கான், ஷாகித் அஃப்ரிடி ஆகியோர் தலா 21 விக்கெட்டுகள் கைப்பற்றி முதலிடம் பிடித்தனர். இந்த வெற்றியை விதியின் உணர்வு என்று வர்ணித்த கேரி கிர்ஸ்டன், நாங்கள் உலகக் கோப்பையை வெல்வோம் என்பதை முன்னரே உணர்ந்திருந்தோம் என்றார். 2011 உலகக் கோப்பை வெற்றிக்குப் பிறகு தோனி இந்திய கிரிக்கெட்டின் ஈடு இணையில்லாத உச்ச நட்சத்திரமாக உயர்ந்தார். 1983-ல் யாரும் எதிர்பார்க்காத வகையில் கோப்பையை வென்ற இந்தியா, 28 ஆண்டுகளுக்குப் பிறகு எல்லாருடையை எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்து வென்றது.