1996 உலகக் கோப்பை: இலங்கை அணி நிகழ்த்திய அதிசயம்!
1996 உலகக் கோப்பை - கிரிக்கெட் வரலாற்றின் மறக்க முடியாத போட்டிகளில் ஒன்று. கத்துக்குட்டி அணி என்று வர்ணிக்கப்பட்ட இலங்கை அணி, முதல்முறையாக உலகக் கோப்பையை வென்று அசத்தியது. இந்தியா உடன் சேர்த்து பாகிஸ்தான், இலங்கை ஆகிய அணிகள் உலகக் கோப்பைப் போட்டியை நடத்தின.
போட்டித் தொடங்குவதற்கு சில நாட்கள் முன்னதாக கொழும்பு மத்திய வங்கியில் குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதனால், ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய அணிகள் இலங்கையில் நடைபெறும் ஆட்டங்களில் பங்கேற்க மறுத்தன. 1996 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் முரளிதரன் பந்தை எறிகிறார் என்று ஆஸ்திரேலிய நடுவர் டேரல் ஹேர் சர்ச்சையைக் கிளப்பினார். களத்தில் ஆஸ்திரேலிய வீரர்களும் ரசிகர்களும் முரளிதரன் உள்ளிட்ட இலங்கை வீரர்களைக் கடுமையாக வசைபாடினர்.
கடுமையான நெருக்கடிகளைச் சந்தித்த ரணதுங்கா தலைமையிலான இலங்கை அணி, தளராத நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவில் இருந்து திரும்பியது. இலங்கை அணி பலம் கொண்ட ஓர் அணியாக மாறியதற்கு 1996 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் தான் காரணம் என்றார் அன்றையை இலங்கைப் பயிற்சியாளர் டேவ் வாட்மோர். இந்தப் பின்னணியில் தான், இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செய்ய மறுத்த ஆஸ்திரேலியாவின் முடிவு இலங்கையை ஏன் சூடேற்றியது என்பதைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆஸ்திரேலியா புறக்கணித்த இலங்கைக்கு சக ஆசிய நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் உதவிக்கு வந்தன. இலங்கையின் பாதுகாப்பு ஏற்பாடுகள் சிறப்பாக இருக்கிறது என்பதை நிரூபிக்கும் விதமாக கண்காட்சி ஆட்டம் ஒன்றில் இந்தியா - பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து இலங்கையுடன் விளையாடினர். இதனால் ஏற்பட்ட நம்பிக்கையில் ஜிம்பாப்வே, கென்யா ஆகிய அணிகளும் இலங்கைக்கு வந்து விளையாடின.
லீக் சுற்றில் கொழும்பில் நடைபெற்ற ஆட்டங்களை ஆஸ்திரேலியா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் புறக்கணித்ததால், இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பலப்பல சம்பவங்களுடன் உலகக் கோப்பை தொடங்கியது.
தொடக்க பேட்டர்கள் பவர்பிளே ஓவர்களில் அடித்தாட வேண்டும், சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏதுவாக வேகப்பந்து வீச்சாளர்கள் புதிய பந்தை தேய்த்துக் கொடுக்க வேண்டும், நடு வரிசையில் விக்கெட்டுகள் சரிந்தால் இந்த பேட்டர் தடுப்பாட்டம் ஆடவேண்டும்... இப்படி, ஒவ்வொரு வீரருக்குமான பொறுப்புகளைத் தெளிவாக வரையறுத்திருந்தார் ரணதுங்கா.
கொழும்பில் நடைபெற்ற ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியைச் சந்தித்தது. முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே, 228 ரன்கள் எடுத்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய இலங்கை, 13 ஓவர்கள் மீதமிருக்கும் போது வெற்றி இலக்கை எட்டியது.
தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் போட்டியின் பலம் பொருந்திய அணிகளில் ஒன்றாக இந்தியாவை எதிர்கொண்டது இலங்கை. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, சச்சினின் சதத்தின் (137) உதவியுடன் 271 ரன்கள் குவித்தது. கடினமான இலக்கை விரட்டிய இலங்கைக்கு ஜெயசூர்யா - கலுவிதரண இணை அபாரமான தொடக்கத்தை அமைத்துக் கொடுத்தது. நடு ஓவர்களில் அர்ஜுன ரணதுங்கா, ஹசன் திலகரத்னே ஆகியோரும் கைகொடுக்க 49-வது ஓவரில் இலங்கை இந்தியாவை வென்றது. உலகக் கோப்பை சூடுபிடித்தது. இந்தியாவை அவர்கள் சொந்த மண்ணிலேயே வீழ்த்தியதால் அனைத்து அணிகளும் இலங்கையைக் கவனமாகக் கையாள ஆரம்பித்தன.
இலங்கையின் தொடக்க பேட்டர்கள் அதிரடியாக விளையாடியதற்கு ரணதுங்கா கொடுத்த கட்டற்ற சுதந்திரம் தான் காரணம். உலகக் கோப்பைக்கு முன்பாக ஜெயசூர்யா, சரியான ஃபார்மில் இல்லை. தொடக்க பேட்டராக அவருடைய சராசரி அப்போது 26 மட்டுமே. ஆனால் உலகக் கோப்பையின் ஆரம்பக் கட்டத்தில் கலுவிதரணா தொடர்ச்சியாக மூன்று அரைசதங்கள் விளாசி ஃபார்முக்கு வர, ஜெயசூர்யாவின் பேட்டிங்கும் உச்சம் தொட்டது.
இந்தியாவை வீழ்த்திய பிறகுதான் உலகக் கோப்பையில் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்தது என்றார் இலங்கை பயிற்சியாளர் டேவ் வாட்மோர். ஜாம்பவான் அணியான இந்தியாவை வீழ்த்திய நம்பிக்கையுடன் அடுத்த ஆட்டத்தில் கென்யாவை சந்தித்த இலங்கை, 144 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் ரன் மழை பொழிந்த ஆட்டம் என்று இதனை சொல்லலாம்.
ஒரு வாரத்துக்கு முன்பு, மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்திய கென்ய அணி, இலங்கையிடம் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த இலங்கைக்கு, வழக்கம் போல ஜெயசூர்யா - கலுவிதரண இணை அதிரடி தொடக்கம் அமைத்துக் கொடுத்தது. ஜெயசூர்யா, 27 பந்துகளில் 44 ரன்களும் கலுவிதரண 18 பந்துகளில் 33 ரன்களும் எடுத்தார்கள். நடு வரிசையில் அரவிந்த டி சில்வா 115 பந்துகளில் 145 ரன்கள் குவிக்க, இலங்கை அணி, 50 ஓவர்கள் முடிவில் 398 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தது. அப்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதுதான் அதிகபட்ச ஸ்கோர். அடுத்த 10 வருடங்களுக்கு இலங்கையின் இந்த ஸ்கோரை எந்த அணியாலும் தொட முடியவில்லை.
குரூப் ஏ சுற்றில் புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்த இலங்கை, ஃபைசலாபாதில் நடைபெற்ற முதல் காலிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்தைச் சந்தித்தது. வழக்கம் போல ஆமை வேகத்தில் விளையாடிய இங்கிலாந்து, 50 ஓவர்கள் முடிவில் 235 ரன்கள் மட்டுமே எடுத்தது. 44 பந்துகளில் 88 ரன்கள் குவித்த ஜெயசூர்யா, இலங்கைக்கு அட்டகாசமான தொடக்கம் அமைத்துக் கொடுத்தார்.
இந்த அடித்தளத்தைப் பயன்படுத்திக் கொண்ட இலங்கை, 56 பந்துகள் மீதமிருந்த நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றது.
கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தை இந்திய ரசிகர்களால் மறக்க முடியாது. இன்றைக்கும் ஆறாத வடு அது.
கிரிக்கெட் வரலாற்றின் சர்ச்சைக்குரிய ஆட்டங்களில் ஒன்று. அதன் முடிவை யாரும் கணித்திருக்க முடியாது.
முதல் ஓவரில் அடுத்தடுத்த பந்துகளில் ஆபத்தான தொடக்க வீரர்களை வீழ்த்தினார் ஸ்ரீநாத். ஆனால் அரவிந்த டி சில்வா மிகச்சிறந்த ஒருநாள் ஆட்டத்தை வெளிப்படுத்த அந்நாளைத் தேர்வு செய்தார். வரிசையாக பவுண்டரிகள் அடித்து இந்திய அணி மேலும் ஆதிக்கம் செலுத்தாமல் பார்த்துக் கொண்டார். 47 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து இலங்கையைப் பத்திரமாக அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு சென்றார்.
டி சில்வாவின் கடின உழைப்பை வீணடிக்காமல் மஹனாமா, ரணதுங்கா போன்ற நடுவரிசை பேட்டர்கள் விளையாடினார்கள். இலங்கை, 251 ரன்கள் எடுத்தது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களமிறங்கிய இந்திய அணி ஆரம்பத்தில் நன்றாகத்தான் விளையாடியது. சித்து 3 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் மும்பை வீரர்களான சச்சினும் மஞ்ச்ரேக்கரும் பொறுப்புடன் விளையாடினார்கள். ஆனால் புதிய ஆடுகளம் சதி செய்தது. 2-வது இன்னிங்ஸில் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக மாறியது. தேசத்தின் நம்பிக்கையாக இருந்த சச்சின், 65 ரன்களுக்கு எதிர்பாராதவிதமாக ஸ்டம்பிங் ஆனார். அவ்வளவுதான்... அந்த நொடியிலிருந்து ஆட்டம் இலங்கைக்குக் கை மாறியது. ஜெயசூர்யா உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்டர்கள் தடுமாறினார்கள். கண் முன்னே கனவு கரைந்தது. 34.1 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்து தோல்வியை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் ரசிகர்கள் பொறுமை இழந்தார்கள். உள்ளூர் ரசிகர்கள் வன்முறையில் இறங்கினர். வீரர்கள் பாதுகாப்பாக ஓய்வறைக்கு அனுப்பப்பட்டார்கள். கேப்டன் அசாரூதின் வந்து சமாதானப்படுத்தப் பார்த்தார். ஆனால் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. ஆட்டத்தை மீண்டும் தொடர முடியாமல் போனது.
இதனால், கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக டிஃபால்ட் (default) முறையில் எதிரணியான இலங்கை வெற்றிபெற்றதாக ஆட்ட நடுவர் கிளைவ் லாயிட் அறிவித்தார்.
மொஹாலியில் நடைபெற்ற 2-வது அரையிறுதியில் மேற்கிந்தியத் தீவுகளை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு ஆஸ்திரேலியா நுழைந்தது.
பாகிஸ்தானின் ஃபைசலாபாதில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியா - இலங்கை அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இடையே மைதானத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நீடித்த பகை இறுதிச்சுற்றில் எதிரொலித்தது.
ஆட்டத்தில் பாகிஸ்தான் ரசிகர்கள், இலங்கை அணிக்கு ஆதரவு கொடுத்தனர். அரையிறுதியில் இந்திய அணியை வீழ்த்தியதால் கிடைத்த வரவேற்பு அது. ஆஸ்திரேலியா மீதுள்ள பகையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற வெறியுடன் களமிறங்கியது இலங்கை. வெற்றி பெற வாய்ப்புள்ள அணி என்று முத்திரை குத்தப்பட்ட ஆஸ்திரேலியா, முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 241 ரன்கள் சேர்த்தது.
1 விக்கெட்டை மட்டுமே இழந்து 137 ரன்கள் எடுத்திருந்த ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பை, அரவிந்த டி சில்வா தடுத்து நிறுத்தினார். முக்கிய பேட்டர்களான மார்க் டெய்லர், ரிக்கி பாண்டிங் உள்ளிட்ட மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இலங்கை இன்னிங்ஸில் ஜெயசூர்யா - கலுவிதரண இணை மீண்டும் ஏமாற்றமளித்தது. அரையிறுதியில் அசத்திய நடு வரிசை நாயகன் அரவிந்த டி சில்வா மீண்டுமொருமுறை இலங்கைக்குக் கைகொடுத்தார். இந்தமுறை அரை சதத்துடன் வெளியேறாமல் பெரிய சதத்தை அடித்தார்.
ஆஸ்திரேலியாவின் நட்சத்திர சுழலர் ஷேவ் வார்ன் பந்துவீச்சை அசங்கா குருசின்ஹா நாலாபுறமும் சிதறடித்தார். கடைசிக் கட்டத்தில் கேப்டன் ரணதுங்காவும் பங்களிக்க இலங்கை அணி, 22 பந்துகள் மீதமிருந்த நிலையில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று உலகக் கோப்பையை வென்றது. சதமடித்த அரவிந்த டி சில்வா ஆட்ட நாயகனாகவும், 221 ரன்களும் 7 விக்கெட்டுகளும் கைப்பற்றிய ஜெயசூர்யா தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். வார்னரை ரணதுங்கா கடுமையாக விமர்சித்தது அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.
523 ரன்கள் குவித்த சச்சின், அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். 15 விக்கெட்டுகளை வீழ்த்திய கும்ப்ளே, அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடம் பிடித்தார். இந்த வெற்றிக்குக் காரணமான அர்ஜுன ரணதுங்கா, இலங்கை ரசிகர்களின் ஏகோபித்த நாயகனாக கொண்டாடப்பட்டார். பெனாசிர் பூட்டோ கையால் கோப்பை வென்ற ரணதுங்கா, எந்தவொரு அதீதமான கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
உலகக் கோப்பை போட்டியில் இலங்கை அணியின் மேலாளராக செயல்பட்ட சிதாத் வெட்டிமுனி, உலகக் கோப்பையை வெல்வோம் என்பதை ரணதுங்கா முன்கூட்டியே அறிந்திருந்தார் என்றார்.
உலகக் கோப்பையை இலங்கை வென்றதில் முக்கியப் பங்கு வகித்தவர் அரவிந்த டி சில்வா. 80களில் அதிரடி பேட்டராக அறிமுகமானா டி சில்வா, இலங்கை பேட்டிங் பாரம்பரியத்தின் முக்கியமான வீரர் என்று அறியப்படுகிறார். ஆனால், தொடர்ச்சியற்ற ஆட்டத்தின் காரணமாக தனது திறமைக்கு அவர் நியாயம் சேர்க்கவில்லை. 1996 உலகக் கோப்பையில் ரணதுங்கா முழு சுதந்திரம் கொடுக்க, தனது ஆட்ட வாழ்வின் கடைசிக்கட்டத்தில் டி சில்வா உச்சம் தொட்டார்.
சச்சின் பாணியில் எடை மிகுந்த பேட் பயன்படுத்திய டி சில்வா, இறுதிச் சுற்றில் தனது உச்சபட்ச திறமையை வெளிப்படுத்தினார். இலங்கை வெற்றியில் தலைமைப் பயிற்சியாளர் டேவ் வாட்மோரின் பங்களிப்பைக் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது. மனம் போன போக்கில் விளையாடிக் கொண்டிருந்த இலங்கை அணியில் ஒழுங்கையும் நேர்த்தையையும் வாட்மோர் கொண்டுவந்தார்.
உலகக் கோப்பைக்கு முன்பு, இலங்கையின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்காக அந்த அணிக்கு நிதியுதவி செய்தது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம். இந்தத் தொகையைக் கொண்டுதான் டேவ் வாட்மோர், இலங்கைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். மேலும் இந்த உதவியை வெளியில் தெரிவிக்க வேண்டாம் என்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. டேவ் வாட்மோரின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று, இலங்கை வீரர்களின் உடற்தகுதியை மேம்படுத்துவதில் அவர் செலுத்திய கவனம். வெற்றி பெற்றதும் உலகக் கோப்பையைக் கடவுளாக பாவித்து இலங்கை வீரர்கள் வணங்கினர். 1996 உலகக் கோப்பை வெற்றி, இலங்கை கிரிக்கெட்டை மட்டுமின்றி உலக கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியமைத்தது.