மேக்ஸ்வெல்லை நம்பி களமிறங்கும் ஆஸ்திரேலியா சாதிக்குமா?
உலகக் கோப்பைக்கு முன்பு தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்களில் விளையாடிய ஆஸ்திரேலியா இரண்டிலும் தோற்றது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக முதலிரு ஆட்டங்களில் மட்டும் வெற்றி பெற்று, கடைசி மூன்று ஆட்டங்களில் தோல்வியடைந்தது. இந்தியாவுக்கு எதிராக முதலிரு ஆட்டங்களில் தோல்வியடைந்து கடைசி ஆட்டத்தில் மட்டும் ஆறுதல் வெற்றி பெற்றது.
ஆனால், இந்த சமீபத்திய ஃபார்மை வைத்து மட்டும் ஆஸ்திரேலியாவை எடைபோட்டுவிட முடியாது. உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை போன்ற பெரிய போட்டிகளில் அவர்கள்தான் கொடிகட்டிப் பறக்கும் மன்னர்கள். 1987, 1999 முதல் 2007 வரை ஹாட்ரிக் மற்றும் 2015 என ஐந்து முறை உலகக் கோப்பைகளை வென்றுள்ளது. 2019-ல் பலம் கொண்ட இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்தது. எப்படிப்பட்ட வீரர்களைக் கொண்ட அணியாக இருந்தாலும், உலகக் கோப்பையை எப்படி வெல்ல வேண்டும் என நன்கு அறிந்த அணி ஆஸ்திரேலிய அணி.
இந்த உலகக் கோப்பையைச் சுற்றி காயங்கள் பற்றிய செய்திகள் தான் நிறைய உள்ளன. ஆஸ்திரேலியாவையும் இது விட்டுவைக்கவில்லை. டிராவிஸ் ஹெட் உலகக் கோப்பையில் முதல் பகுதி ஆட்டங்களில் விளையாடப்போவதில்லை.
மார்ச் 2022-க்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்த டிராவிஸ் ஹெட் 60.84 சராசரியில், 119.84 ஸ்டிரைக் ரேட்டுடன் 791 ரன்கள் விளாசியுள்ளார். இவர் பந்தைச் சுழற்றுவதும் கூடுதல் பலம். இதுவே அணியில் இவருக்கான இடத்தை உறுதி செய்துள்ளது. முதல் பகுதி ஆட்டங்களில் ஹெட்டால் விளையாட முடியாது என்று தெரிந்தும் வெறும் 14 வீரர்களுடன் துணிச்சலாகக் களமிறங்குகிறது ஆஸ்திரேலியா.
அஷ்டன் அகாரும் காயமடைந்துள்ளதால், அவருக்குப் பதில் பேட்டிங்கில் கூடுதல் பலம் சேர்க்கும் வகையில் மார்னஸ் லபுஷேன் கடைசி நிமிடத்தில் இணைக்கப்பட்டார். பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் உலகக் கோப்பைக்கு சற்று முன்னதாக இந்தியாவுக்கு எதிரான தொடரில்தான் மீண்டும் களத்துக்குத் திரும்பினார்கள்.
தென்னாப்பிரிக்கா, இந்தியாவுக்கு எதிரான தொடர்களை இழந்ததற்கு ஆஸ்திரேலியா முழு பலத்துடன் விளையாடாதது ஒரு முக்கியக் காரணம்.
ஆஸ்திரேலியாவின் பலம்:
ஆரம்பக்கட்ட போட்டிகளில் டிராவிஸ் ஹெட் இல்லாததால் தொடக்க பேட்டராக டேவிட் வார்னருடன் மிட்செல் மார்ஷ் களமிறங்குகிறார். இருவருமே அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தக்கூடியவர்கள். இருவருமே நல்ல நிலையில் உள்ளார்கள். முதல் 10 ஓவர்களில் இவர்கள் அதிரடி பேட்டிங்கை வெளிப்படுத்தி நல்ல அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தால், நடுவரிசையில் இன்னிங்ஸை அழகாக நகர்த்திச் செல்ல ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன் உள்ளார்கள்.
இவர்களுக்குப் பிறகு இரு அபாயகரமான பேட்டர்கள் உள்ளார்கள். கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ். இவர்களைத் தொடர்ந்து அலெக்ஸ் கேரி இருக்கிறார். இடக்கை பேட்டர் என்பதால் நடு ஓவர்களில் சுழற்பந்துவீச்சைச் சமாளிக்க அலெக்ஸ் கேரி முன்கூட்டியே களமிறக்கப்படலாம். கடைசி நேரத்தில் பேட் கம்மின்ஸும் அவ்வப்போது பேட்டை சுழற்றுவார் என்பதால் ஓரளவுக்குப் பெரிய பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா.
வார்னரும், மிட்செல் மார்ஷும் பெரிய இன்னிங்ஸை விளையாடிவிட்டால் ஆட்டம் முடிந்துவிட்டது என முடிவு செய்துகொள்ளலாம். பேட்டிங்கில் அந்தளவுக்குப் பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியவர்கள். வார்னர், மார்ஷ், ஸ்மித், லபுஷேன் என அனைவரும் நல்ல ஃபார்மில் உள்ளது ஆஸ்திரேலியாவுக்கு மகிழ்ச்சியான செய்தி.
மிட்செல் மார்ஷ்:
2023-ல் இந்தியாவில் பேட்டிங் சராசரி - 73.5 (5 இன்னிங்ஸ்)
டேவிட் வார்னர்:
கடைசி மூன்று இன்னிங்ஸில் மூன்று அரை சதங்கள்!
மார்னஸ் லபுஷேன்:
ரன்கள் - 421; சராசரி - 60.14 (கடைசி 8 ஆட்டங்கள்)
காயத்திலிருந்து திரும்பிய மேக்ஸ்வெல்லுக்கு மட்டும் கொஞ்சம் நேரம் தேவைப்படுகிறது. சூழல்களுக்கு ஏற்ப மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், கேம்ரூன் கிரீன் விளையாட வைக்கப்படலாம்.
வேகப்பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ், ஜோஷ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் இருக்கிறார்கள். உலகக் கோப்பை மாதிரியான போட்டிகளில் சரியான நேரத்தில் ஆஸ்திரேலியா ஃபார்முக்கு வந்துவிடும் என்பதற்கு நெதர்லாந்துக்கு எதிரான பயிற்சி ஆட்டமே உதாரணம். ஆஷஸுக்குப் பிறகு காயமடைந்து இந்தியாவுடனான மூன்றாவது ஆட்டத்தில் மட்டும் விளையாடிய மிட்செல் ஸ்டார்க், நெதர்லாந்துக்கு எதிராக தனது வழக்கமான உள்பக்க ஸ்விங் பந்துகள் மற்றும் உள்பக்கம் ஸ்விங் செய்யும் யார்க்கர் பந்துகள் மூலம் ஹாட்ரிக் எடுத்துள்ளார். நடு ஓவர்களில் விக்கெட் வீழ்த்தவும் இவர் ஆஸ்திரேலியாவுக்கு உதவுவார்.
ஹேசில்வுட் சரியான லெங்த்தில் வீசி திணறடிப்பார் என்பதில் சந்தேகம் இல்லை. பேட் கம்மின்ஸ் இந்த ஆண்டு மொத்தம் 2 ஒருநாள் ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். எனினும், கம்மின்ஸின் அனுபவம் மற்றும் திறனுக்கு அவர் எந்த நேரத்திலும் ஆட்டத்தை மாற்றிவிடுவார்.
பலவீனம்:
ஆஸ்திரேலியாவின் பிரதான சுழற்பந்துவீச்சாளர்களாக ஆடம் ஸாம்பா, அஷ்டன் அகார் இருந்தார்கள். காயம் காரணமாக அகார் விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதில் மாற்று சுழற்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்படவில்லை. மார்னஸ் லபுஷேன் சேர்க்கப்பட்டார்.
இந்தியாவில் ஆடுகளங்கள் சுழற்பந்துவீச்சுக்கு சாதமாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால், சுழற்பந்துவீச்சாளர்கள் முக்கியப் பங்கு வகிப்பார்கள். பெரும்பாலான அணிகள் குறைந்தபட்சம் இரு முக்கிய சுழற்பந்துவீச்சாளர்களுடனே களமிறங்கியுள்ளது, ஆஸ்திரேலியாவைத் தவிர.
இரண்டாவது சுழற்பந்துவீச்சாளர் இடத்தை கிளென் மேக்ஸ்வெல் நிரப்புகிறார். மேக்ஸ்வெல் பகுதிநேரப் பந்துவீச்சாளராக இருந்தாலும்கூட 10 ஓவர்கள் வீசக் கூடிய திறன் படைத்தவர். இந்தியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இருந்தபோதிலும், ஒருவேளை ஸாம்பா நிறைய ரன்களைக் கொடுக்கக்கூடிய சூழல் ஏற்பட்டால் (கிளாஸென் இன்னிங்ஸ் நினைவுக்கு வரலாம்), மறுமுனையில் அழுத்தம் கொடுப்பதற்கு மற்றொரு பிரதானப் பந்துவீச்சாளர் இல்லாமல் இருப்பது பலவீனமே. இந்த இடத்தில் அஷ்டன் அகார் இருந்திருந்தால், அணியின் சமநிலையே வேறாக இருந்திருக்கும். காரணம், அவர் இடக்கை பேட்டரும்கூட.
எனவே, இந்த உலகக் கோப்பையில் மேக்ஸ்வெல்லின் பங்களிப்பு ஆஸ்திரேலியாவுக்கு மிக முக்கியமானது.
வரலாறு சொல்லும் கதை:
ஆஸ்திரேலிய அணி தனது முதல் ஆட்டத்தில் இந்தியாவை சென்னையில் எதிர்கொள்கிறது. இதே மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் கடந்த ஜனவரி மாதம் மோதின. இந்தியாவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. சுழல் கூட்டணியான ஆடம் ஸாம்பாவும், அஷ்டன் அகாரும்தான் இந்தியாவின் 6 முக்கிய பேட்டர்களைக் காலி செய்தார்கள்.
இந்த ஆடுகளத்தில்தான் அஷ்டன் அகார் துணையில்லாமல் மேக்ஸ்வெல்லுடன் களமிறங்குகிறார் ஆடம் ஸாம்பா.