உலகக் கோப்பை: தென்னாப்பிரிக்க அணியின் 31 வருடக் கனவு!
தென்னாப்பிரிக்காவின் உலகக் கோப்பைப் பயணம் சோகங்கள் பொதிந்த வரலாறாகவே இருந்துள்ளது. 1992 முதல் உலகக் கோப்பையில் பங்கேற்று வரும் தென்னாப்பிரிக்கா இதுவரை ஒருமுறை கூட இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இல்லை.
1999, 2011 மற்றும் 2015 ஆகிய உலகக் கோப்பைகள் தென்னாப்பிரிக்காவுக்குச் சாதகமாக அமைந்தன. இருப்பினும், அவர்களால் அரையிறுதியைக் கடக்க முடியவில்லை. குறிப்பாக 2015-ல் நியூசிலாந்துக்கு எதிரான அரையிறுதிச் சுற்றில் கடைசி ஓவரில் தென்னாப்பிரிக்கா வெற்றியைப் பறிகொடுத்ததை கிரிக்கெட் ரசிகர்களால் எப்போதும் மறக்க முடியாது. ஆனால், 2019 உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவின் நிலைமை மோசமாகவே இருந்தது. 9 லீக் ஆட்டங்களில் 5-ல் தோல்வியடைந்து அரையிறுதி வாய்ப்பை இழந்தது அந்த அணி.
அசுர வேகப்பந்துவீச்சாளர்கள், அற்புதமான பேட்டர்கள் இருந்தும் உலகக் கோப்பையை வசப்படுத்துவதற்கான காலம் தென்னாப்பிரிக்காவிற்குக் கனியவில்லை. இந்த சோக வரலாற்றைத் திருத்தி எழுதும் நோக்கில் 2023 உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது பவுமா தலைமையிலான தென்னாப்பிரிக்க அணி.
2023 உலகக் கோப்பையுடன் ஒருநாள் ஆட்டங்களில் இருந்து ஓய்வுபெறுவதாக அந்த அணியின் நட்சத்திர பேட்டர் குயிண்டன் டி காக் அறிவித்திருக்கிறார். பவுமா, ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், கிளாஸன் மற்றும் வான் டெர் டசன் ஆகியோர் தென்னாப்பிரிக்க பேட்டிங்கின் பொறுப்பாளர்களாக உள்ளார்கள்.
சமீபத்திய காலங்களில் தென்னாப்பிரிக்காவின் நடுவரிசை பேட்டிங்கில் சறுக்கல்கள் நிறையவே இருந்தன. ஆனால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கிளாஸன் அந்த விமர்சனங்களை எல்லாம் தகர்த்துவிட்டார். 4-வது ஒருநாள் ஆட்டத்தில் 83 பந்துகளில் 174 ரன்கள் குவித்தார் கிளாஸன். இந்த ஆண்டு மட்டும் 10 ஆட்டங்களில் இரு சதங்களுடன் 527 ரன்களை அவர் எடுத்துள்ளார். அவரது சராசரி 58.55 ஆகும். அத்துடன் இந்த ஆண்டு அதிக சிக்ஸர்கள் அடித்த தென்னாப்பிரிக்க வீரர்களின் பட்டியலில் 25 சிக்ஸர்களுடன் கிளாஸன் முதலிடத்தில் உள்ளார்.
நடுவரிசயில் கிளாஸனின் அதிரடியும் மில்லரின் ஐபிஎல் அனுபவமும் கைகொடுக்கும் பட்சத்தில் அது தென்னாப்பிரிக்க அணிக்கு பலமாக அமையும்.
வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் அன்ரிச் நோர்கியா மற்றும் சிசாண்டா மகாலா ஆகியோர் காயம் காரணமாக உலகக் கோப்பைக்கான அணியில் இருந்து விலகியுள்ளார்கள். அதிவேகத்தில் பந்துவீசக்கூடிய நோர்கியா ஏராளமான ஐபிஎல் ஆட்டங்களில் பங்கேற்ற அனுபவம் கொண்டவர். அவருடைய விலகல் தென்னாப்பிரிக்க அணிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருப்பினும், மணிக்கு 145 கி.மீ வேகத்தில் பந்துவீசக்கூடிய புதுமுகமான ஜெரால்டு கூட்ஸி, லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, அன்டிலே பெஹ்லுவாயோ, மார்கோ யான்சென் என தரமான பந்துவீச்சுப் படையுடன் உலகக் கோப்பைக்கு வந்திருக்கிறது தென்னாப்பிரிக்கா.
சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் கேஷவ் மஹாராஜ் அந்த அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார். கூடுதல் சுழற்பந்துவீச்சாளராக ஷம்சியும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளார். ஐடன் மார்க்ரமும் ஐபிஎல் போட்டிகளில் பந்துவீசிய அனுபவம் கொண்டவர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் இங்கிலாந்து மற்றும் நெதர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற தென்னாப்பிரிக்கா அந்த இரு தொடர்களையும் வென்றது. ஆனால், அதன்பிறகு 5 மாதங்களில் அந்த அணி ஒருநாள் ஆட்டங்களில் விளையாடவில்லை.
சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை இழந்த தென்னாப்பிரிக்கா, முதலிரண்டு ஒருநாள் ஆட்டங்களிலும் தோல்வியடைந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று தொடரைக் கைப்பற்றியது. இந்த வெற்றி கொடுத்த தன்னம்பிக்கையுடன் உலகக் கோப்பையில் களமிறங்கியுள்ளது தென்னாப்பிரிக்க அணி.
உலகக் கோப்பைக்கான தென்னாப்பிரிக்க அணி: டெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்டு கூட்ஸி, குயிண்டன் டி காக், ரீஸா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ யான்சென், ஹென்ரிச் கிளாஸன், கேஷவ் மஹாராஜ், ஐடன் மார்க்ரம், டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, ககிசோ ரபாடா, ஷம்சி, வேன் டர் டுசென், அன்டிலே பெஹ்லுவாயோ, லிஸாட் வில்லியம்ஸ்.