இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தையும் தவறவிடும் பாண்டியா
இந்திய அணியின் ஆல்-ரவுண்டர் ஹார்திக் பாண்டியா, ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்திலும் விளையாட மாட்டார் எனத் தெரிகிறது.
உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக புனேவில் நடைபெற்ற ஆட்டத்தின்போது ஹார்திக் பாண்டியாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. அந்த ஆட்டத்தில் 3 பந்துகளை மட்டுமே வீசிய நிலையில், மேற்கொண்டு ஃபீல்டிங்கில் பங்கெடுக்கவில்லை.
வங்கதேசத்துடனான ஆட்டத்துக்குப் பிறகு, ஹார்திக் பாண்டியா சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடெமிக்குச் சென்றார். தொடர்ந்து, நியூசிலாந்துக்கு எதிராக தரம்சாலாவில் நடைபெற்ற ஆட்டத்தில் அவர் விளையாடவில்லை. பாண்டியா அணியில் இல்லாததால் கூடுதல் பேட்டராக சூர்யகுமார் யாதவும், கூடுதல் பந்துவீச்சாளராக ஷார்துல் தாக்குருக்குப் பதில் முகமது ஷமியும் அணியில் சேர்க்கப்பட்டார்கள்.
சூர்யகுமார் யாதவ் 2 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். உலகக் கோப்பையில் முதல் ஆட்டத்தில் விளையாடிய ஷமி 5 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இங்கிலாந்துடனான ஆட்டத்துக்கு ஒரு வாரம் இடைவெளி இருந்ததால், பாண்டியா அதற்குள் குணமடைந்து அணியுடன் இணைந்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. சமீபத்திய தகவல்களின்படி இங்கிலாந்துடனான ஆட்டத்திலும் பாண்டியா விளையாடவில்லை. நாளை உடற்தகுதி பரிசோதனையில் பங்கேற்கிறார். இதன்பிறகு, பாண்டியா அணியில் இணைவதற்கான தேதி குறித்து பிசிசிஐ மருத்துவக் குழு முடிவு செய்யவுள்ளது.
இங்கிலாந்துடனான ஆட்டம் லக்னௌவில் நடைபெறுகிறது. லக்னௌ ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்கும் என்பதால், இந்த ஆட்டத்தில் ஷமி இடத்தில் அஸ்வின் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரிகிறது.
இங்கிலாந்துடனான ஆட்டத்துக்குப் பிறகு இந்திய அணி நவம்பர் 2-ம் தேதி இலங்கையை மும்பை வான்கெடேவில் எதிர்கொள்கிறது. உலகக் கோப்பையில் இதுவரை ஐந்து ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய அணி, அனைத்திலும் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.