நவம்பர் 3: கிரிக்கெட் வரலாற்றின் கருப்பு நாள்!

ESPNcricinfo staff

சல்மான் பட் © AFP

2011-ல் இதே நாளில் தான் ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்ட குற்றத்துக்காக பாகிஸ்தானின் சல்மான் பட், முஹமது ஆசிஃப் மற்றும் முஹமது ஆமிருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

2010 லார்ட்ஸில் நடைபெற்ற டெஸ்டில் குறிப்பிட்ட ஓவர்களில் நோ பால்-களை வீசுவதற்காக இம்மூவரும் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில் மூவரும் குற்றவாளிகள் என லண்டன் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அதன்படி, சல்மான் பட்டுக்கு இரண்டரை வருடங்களும் ஆசிஃபுக்கு ஒரு வருடமும் ஆமிருக்கு ஆறு மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டன. மேலும், இதற்கு மூளையாகச் செயல்பட்ட மஷார் மஜீத் என்கிற வீரர்களுக்கான ஏஜண்டுக்கு 2 வருடங்கள் மற்றும் 8 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

ஆமிர் மற்றும் மஜீத் விசாரணைக்கு முன்பே குற்றத்தை ஒப்புக்கொண்டார்கள். ஆனால், சல்மான் மற்றும் ஆசிஃப் ஆகிய இருவரும் குற்றச்சாட்டுகளை மறுத்தார்கள். இருப்பினும், சாட்சியங்களின் அடிப்படையில் இவர்களை குற்றவாளிகள் என அறிவித்தது நீதிமன்றம். கிரிக்கெட் போட்டிகளின் போது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதற்கும் இந்தச் சம்பவம் முக்கியக் காரணமாக அமைந்தது.

சேவாக்கின் டெஸ்ட் அறிமுகம்!

2001-ல் இதே நாளில் தான் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் வீரேந்தர் சேவாக் அறிமுகமானார்.

அந்த டெஸ்டில் இந்தியாவின் மேல் வரிசை பேட்டர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்கள். இக்கட்டான சூழ்நிலையில் சேவாக் களத்துக்கு வந்தார். அப்போது சச்சின் சேவாக்கிடம், நீங்கள் பதட்டமாக இருப்பது எனக்குத் தெரியும். ஆனால், ஒருபோதும் பதற்றமடைய வேண்டாம். இந்தத் தருணத்தை ரசித்து விளையாடுங்கள் என்றார். சொல்லப்போனால், தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முழுவதும் சச்சினின் இந்த அறிவுரையின்படியே விளையாடினார் சேவாக்.

அந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் 157 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார் சேவாக். மறுமுனையில் சச்சின் 155 ரன்கள் குவித்தார். இவர்களது கூட்டணி 220 ரன்களைச் சேர்த்தது. இருப்பினும் இரண்டாவது இன்னிங்ஸில் ஷான் பொல்லாக் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி ஆட்டத்தை மாற்றினார். இதனால், 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இருப்பினும் டெஸ்டில் பல சதங்களை விளாசுவதற்கு சேவாக்கிற்கு அதுவே தொடக்கப் புள்ளியாக அமைந்தது.

Comments