சாம்பியன்ஸ் கோப்பை: கடைசி இரு இடங்களுக்கு மோதும் 4 அணிகள்
2023 உலகக் கோப்பைப் போட்டி அரையிறுதியை எட்டியுள்ளது. இந்த பரபரப்புக்கு மத்தியில் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் சில அணிகள் உள்ளன.
இந்த உலகக் கோப்பைப் புள்ளிகள் பட்டியலில் முதல் 8 இடங்களைப் பிடிக்கும் அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெறும். அதாவது, 8 அல்லது அதற்கு மேல் புள்ளிகளைப் பெற்ற 6 அணிகள் நேரடியாக சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெற்றுள்ளன.
மீதமுள்ள இரு இடங்களுக்கு இலங்கை, இங்கிலாந்து, நெதர்லாந்து மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது. சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெற ஒவ்வொரு அணிக்கும் உள்ள வாய்ப்புகளைக் காணலாம்.
நெதர்லாந்து
புள்ளிகள்: 4
மீதமுள்ள ஆட்டங்கள்: 2 (இங்கிலாந்து மற்றும் இந்தியா)
நெதர்லாந்து மீதமுள்ள இரு ஆட்டங்களில் வெற்றிபெற்றால் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெறும். ஒருவேளை இங்கிலாந்தை வீழ்த்தி, இந்தியாவுடனான ஆட்டத்தில் தோல்வியடைந்தால் நெதர்லாந்து 6 புள்ளிகளை எட்டும்.
வங்கதேசம் மற்றும் இலங்கை இன்னும் ஒரு வெற்றியைப் பெற்றால் இம்மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெறும். ஆகவே, ரன் ரேட் அடிப்படையில் மூன்று அணிகளுக்குள் போட்டி ஏற்படும். நெதர்லாந்தின் தற்போதைய ரன் ரேட் -1.398 ஆகும். இங்கிலாந்துக்கு எதிராக 300 ரன்கள் குவித்து 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாலும் நெதர்லாந்தின் ரன் ரேட் -0.955 ஆக மட்டுமே உயரும்.
எஞ்சியிருக்கும் இரண்டு ஆட்டங்களிலும் நெதர்லாந்து தோல்வியடைந்து, மற்ற அணிகள் தங்களுக்கான பிற ஆட்டங்களில் தோற்றாலும் நெதர்லாந்துக்கே சிக்கல் ஏற்படும். ஏனெனில் 4 அணிகளும் தலா 4 புள்ளிகளைப் பெற்றுவிடும் என்பதால் அதிக ரன் ரேட் கொண்ட அணிகளே தேர்வாகும். நெதர்லாந்தின் தற்போதைய ரன் ரேட்டின்படி அது அந்த அணிக்கு சிக்கலாகவே முடியும்.
இங்கிலாந்து
புள்ளிகள்: 2
மீதமுள்ள ஆட்டங்கள்: 2 (நெதர்லாந்து, பாகிஸ்தான்)
நடப்பு சாம்பியனான இங்கிலாந்துக்கு இந்த உலகக் கோப்பை மோசமானதாக அமைந்துள்ளது. இருப்பினும் அந்த அணியின் தற்போதைய இலக்கு குறைந்தபட்சம் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெறுவதாகத்தான் இருக்க முடியும்.
இங்கிலாந்து தனது கடைசி இரண்டு ஆட்டங்களில் வெற்றி பெற்றாலும், அதற்கு மற்ற அணிகளின் உதவி தேவைப்படும். ஏனெனில் இலங்கை மற்றும் வங்கதேசம் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் வென்றால் இந்த மூன்று அணிகளுமே தலா ஆறு புள்ளிகளைப் பெறும். சரி, ரன் ரேட்டின் அடிப்படையில் இங்கிலாந்து பிற அணிகளைப் பின்னுக்குத் தள்ளுமா என்றால் அதற்கும் வாய்ப்பில்லை. ஏனெனில் இங்கிலாந்தின் தற்போதைய ரன் ரேட் -1.504. ஆகவே, இங்கிலாந்து தங்களுடைய எஞ்சியுள்ள இரு ஆட்டங்களிலும் மகத்தான வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இங்கிலாந்து ஒருவேளை நெதர்லாந்திடம் தோற்றால், பாகிஸ்தானை வீழ்த்தியே ஆகவேண்டும். மேலும், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் தங்களது எஞ்சிய ஆட்டங்களில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடக்கும்பட்சத்தில் இம்மூன்று அணிகளுமே 6 புள்ளிகளைப் பெறும். ஆகவே, ரன் ரேட் அடிப்படையில் தகுதித் தேர்வு நடைபெறும்.
இலங்கை
புள்ளிகள்: 4
மீதமுள்ள ஆட்டம்: 1 (நியூசிலாந்து)
சாம்பியன்ஸ் கோப்பைக்கான வாய்ப்பைத் தக்க வைக்க நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றிபெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இலங்கை. அதேநேரத்தில் பிற மூன்று அணிகளுள் ஒன்று மட்டும் 6 புள்ளிகளைப் பெற வேண்டும். (ஆனால், மற்ற 3 அணிகளுமே 6 புள்ளிகளைப் பெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது இங்கிலாந்து தனது கடைசி இரு ஆட்டங்களில் வென்று, ஆஸி.யை வங்கதேசம் வீழ்த்தி, இந்தியாவை நெதர்லாந்து வெற்றிபெற்றால் இந்த 4 அணிகளிடமும் 6 புள்ளிகள் கைவசம் இருக்கும்)
நியூசிலாந்தை வீழ்த்தினால் மற்ற அணிகளைக் காட்டிலும் சிறந்த ரன் ரேட் காரணமாக இலங்கை, சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெறும். ஒருவேளை தோற்றால் பிற அணிகளின் தயவுக்கு காத்திருக்க வேண்டிவரும். முக்கியமாக, 3 அணிகளுள் இரு அணிகள் 6 புள்ளிகளைப் பெற்றால் இலங்கையின் காத்திருப்பு வீணாகும்.
வங்கதேசம்
புள்ளிகள்: 4
மீதமுள்ள ஆட்டம்: 1 (ஆஸ்திரேலியா)
வங்கதேசமும் கிட்டத்தட்ட இலங்கையின் சூழ்நிலையில் தான் உள்ளது. இருந்தாலும், கடைசி 4 அணிகளில் வங்கதேசம் சிறப்பான ரன் ரேட்டைக் (-1.142) கொண்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் வங்கதேசம் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒருவேளை தோல்வியடைந்தாலும் சாம்பியன்ஸ் கோப்பைக்குத் தகுதிபெற பிற அணிகளின் தயவு அந்த அணிக்குத் தேவைப்படும்.