டைம்ட் அவுட் சர்ச்சை குறித்து பேட்டியளித்த டொனால்ட்: விளக்கமளிக்க பிசிபி உத்தரவு

ESPNcricinfo staff

ஆலன் டொனால்ட் © ICC/Getty Images

டைம்ட் அவுட் சர்ச்சை தொடர்பாக, தமது அணியையே விமர்சனம் செய்து பேட்டியளித்த ஆலன் டொனால்டிடம் வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம் கேட்டுள்ளது.

சில நாள்களுக்கு முன்பு தில்லியில் நடைபெற்ற இலங்கை - வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை ஆட்டத்தில் அசாதாரணமான சம்பவம் நடைபெற்றது. புதிய பேட்டரான மேத்யூஸ், இரு நிமிடங்களுக்குள் பந்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லாததால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசனின் முறையீட்டின்படி, டைம்ட் அவுட் முறையில் ஆட்டமிழக்கப்பட்டார். சர்வதேச கிரிக்கெட்டில் இதுபோல ஒரு பேட்டர் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில் வங்கதேச அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் ஆலன் டொனால்ட், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேட்டியளித்தார். கிரிக்பிளாக் டாட் நெட் ஊடகத்துக்கு டொனால்ட் பேட்டியளித்ததாவது:

நடைபெற்ற சம்பவம் ஏமாற்றமளிக்கிறது. ஷகிப் அல் ஹசன் ஒரு நிலைப்பாட்டை எடுப்பதை நான் புரிந்துகொள்கிறேன். வெற்றி பெறுவதற்காக என்னவெல்லாம் செய்யவேண்டுமோ அதைச் செய்தேன் என்றார். அதை நான் ஏற்கவில்லை. இலங்கை அணியின் பிரபல வீரர் ஒருவர் ஒரு பந்தைக் கூட எதிர்கொள்ளாமல் தாமதமாக வந்ததற்காக ஆட்டமிழந்துள்ளார். ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவது, கிரிக்கெட்டின் மாண்பு பற்றியெல்லாம் நாம் பேசுகிறோம். இதுபோன்ற சம்பவத்தைக் காண நான் விரும்பவில்லை. இது நடக்கக்கூடாது என்றே எண்ணினேன். உங்களுடைய தலைக்கவசத்தைச் சரிசெய்துகொள்ளுங்கள் என்று அவரிடம் சொல்லியிருந்தால்தான் அது நியாயமானதாக இருந்திருக்கும். சம்பவம் நடைபெற்றபோது, மைதானத்துக்குள் சென்று, போதும் போதும்... நாம் அதுபோன்ற ஓர் அணி கிடையாது. முறையீட்டைத் திரும்பப் பெறலாம் எனச் சொல்ல நினைத்தேன். எல்லாமே வேகமாக நடைபெற்றுவிட்டது. நான் தலைமைப் பயிற்சியாளர் இல்லை. ஆட்டம் முடிந்தபிறகு இலங்கை வீரர்களுடன் நாங்கள் கைகுலுக்கவில்லை. நேருக்கு நேர், கண்ணுக்குக் கண் யாரும் பார்த்துக்கொள்ளவில்லை. இரு அணி வீரர்களுக்கு இடையே பேச்சே இல்லை என்றார்.

இந்நிலையில் அந்தப் பேட்டிக்கு விளக்கம் அளிக்குமாறு டொனால்டுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் கட்டளையிட்டுள்ளது. தனது உணர்வுகளை, தனது எதிர்ப்புகளை டொனால்ட், அணியினரிடமே நேரடியாகத் தெரிவித்திருக்கலாம், பொதுவெளியில் பேசியிருக்கக் கூடாது என வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தரப்பு கூறியுள்ளது.

இந்தச் சூழலால் டொனால்டின் பதவிக்குப் பாதிப்பு எதுவும் நேராது. ஏனெனில், இந்த உலகக் கோப்பையுடன் டொனால்டின் பதவிக்காலம் முடிவடைகிறது. மேலும் உலகக் கோப்பைக்குப் பிறகு அணியில் தொடர விருப்பம் இல்லை என்று டொனால்டும் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

Comments