இலங்கையை எளிதாக வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பை பிரகாசமாக்கிய நியூசிலாந்து
இலங்கையை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அரை இறுதி வாய்ப்பை மேலும் பிரகாசமாக்கியுள்ளது நியூசிலாந்து.
பேட்டர்களின் சொர்க்கபுரியான பெங்களூரில் இந்த ஆட்டம் நடைபெற்றது. மழை காரணமாக கடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த நியூசிலாந்து இந்த ஆட்டத்தில் டாஸை வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இஷ் சோதிக்குப் பதிலாக லாக்கி ஃபெர்குசனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இலங்கை அணியிலும் கசுன் ரஜிதாவுக்குப் பதிலாக சமிகா கருணரத்னே அணிக்குத் திரும்பினார்.
செளதியின் முதல் ஓவரிலேயே பெரேராவின் கேட்சைத் தவறவிட்டார் லதம். ஆனால், அடுத்தப் பந்திலேயே நிசங்கா லதமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்விங் கைகொடுத்தது. இதனால் உள்ளே, வெளியே என பந்துவீசி இலங்கை பேட்டர்களைத் திணறடித்தார்கள். மேல் வரிசை பேட்டர்கள் பந்தைக் கணிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தார்கள்.
செளதி வீசிய 4-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் பெரேரா. ஆனால், குஷால் மெண்டிஸ் இன்றும் ஏமாற்றமளித்தார். 6 ரன்கள் எடுத்த அவர் போல்ட்டின் லெங்த் பந்தை ஸ்கொயர் லெக்கில் அடிக்க முயன்று டீப் பாய்ண்டில் கேட்ச் ஆனார். இதன்மூலம் ஒருநாள் உலகக் கோப்பையில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரராக மாறினார் போல்ட்.
ஒரு ரன் எடுத்த சமரவிக்ரமாவும் அதே ஓவரில் மிட்செலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதெல்லாம் ஒரு பக்கம் நடந்தாலும் மறுமுனையில் பெரேரா பந்துகளை நாலாபுறமும் சிதறடித்தார். செளதி வீசிய 6-வது ஓவரில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை விளாசினார் பெரேரா. இந்த அதிரடியால் 22 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார் அவர். இந்த உலகக் கோப்பையில் அடிக்கப்பட்ட அதிவேக அரை சதம் இதுதான்.
இலங்கை நடுவரிசை பேட்டிங்கின் தூணான அசலங்காவை 9-வது ஓவரில் எல்பிடபிள்யூ மூலம் ஆட்டமிழக்கச் செய்தார் போல்ட். அதிரடியாக 51 ரன்களைச் சேர்த்த பெரேராவின் இன்னிங்ஸுக்கு 10-வது ஓவரில் முற்றுப்புள்ளி வைத்தார் ஃபெர்குசன். 10 ஓவர் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுகளை இழந்து 74 ரன்களைச் சேர்த்தது.
முதல் பவர்பிளேவிற்குப் பிறகு சாண்ட்னரிடம் பந்தைக் கொடுத்தார் வில்லியம்சன். வேகத்தைக் குறைத்து முழு நீளத்தில் வீசி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார் சாண்ட்னர். 16 ரன்கள் எடுத்த மேத்யூஸ், சாண்ட்னரின் இந்த வலையில் வீழ்ந்தார். 19 ரன்கள் எடுத்த தனஞ்செயா டி சில்வாவையும் தனது அடுத்த ஓவரில் வீழ்த்தினார் சாண்ட்னர்.
20 ஓவர்கள் முடிவில் 111 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. ஆனால், அதன்பிறகு நியூசிலாந்து பந்துவீச்சாளர்களின் அத்தனை வியூகங்களிலும் தாக்குப் பிடித்து விளையாடத் தொடங்கினார் தீக்ஷனா. இந்த ஆட்டத்தில் வாய்ப்பு கிடைத்த சமிகா கருணரத்னே 6 ரன்கள் எடுத்து ஃபெர்குசனின் வேகத்தில் வீழ்ந்தார்.
அதன்பிறகு சமீரா - தீக்ஷனா இணை நியூசிலாந்தின் பொறுமையை சோதித்தது. டெஸ்ட் ஆட்டம் போல சில்லி பாய்ண்ட், லெக் ஸ்லிப், இரண்டு ஸ்லிப்கள் என ஃபீல்டிங்கை வைத்து வலை விரித்தார் வில்லியம்சன். ஆனால் இந்த இணை விக்கெட்டைக் காப்பாற்றிக்கொண்டு விளையாடியது. வேகப்பந்து, சுழல் என இரண்டையுமே தாக்குப்பிடித்து ஓவர்களைக் கடத்தினார்கள் இருவரும்.
52 பந்துகளில் 15 ரன்களை மட்டுமே இந்த இணை எடுத்தது. 20 பந்துகளில் ஒரு ரன் எடுத்த சமீராவை 33-வது ஓவரில் வீழ்த்தினார் ரவீந்திரா. ஆனால் அதன்பிறகு தீக்ஷனாவுடன் இணைந்து போராடத் தொடங்கினார் மதுஷன்கா. தவறான பந்துகளுக்கு காத்திருந்து பவுண்டரிகளை அடித்தார்கள் இருவரும்.
இந்தக் கூட்டணி 87 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தது. ஒருநாள் உலகக் கோப்பையில் இலங்கைக்காக 10-வது விக்கெட்டுக்கு சேர்க்கப்பட்ட அதிகபட்ச ரன்கள் இதுதான். கடைசி விக்கெட்டுக்காகப் போராடிய நியூசிலாந்தால் 47-வது ஓவரில் தான் அதைப் பெற முடிந்தது. 48 பந்துகளில் 19 ரன்கள் எடுத்த மதுஷன்காவை தனது சுழலில் வீழ்த்தினார் ரவீந்திரா. இறுதியில் 171 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இலங்கை. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 91 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தார் தீக்ஷனா.
இந்த எளிமையான இலக்கைத் துரத்திய நியூசிலாந்துக்கு நல்ல தொடக்கத்தைக் கொடுத்தார்கள் கான்வேயும் ரவீந்திராவும். இரண்டாவது ஓவரையே தீக்ஷனாவுக்குக் கொடுத்தார் மெண்டிஸ். ஆனால் நியூசிலாந்து பேட்டர்களின் அதிரடியைக் கட்டுப்படுத்த முடியவில்லை. மதுஷன்கா வீசிய 6-வது ஓவரில் மூன்று பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் கான்வே. அடுத்தடுத்த ஓவர்களிலும் பவுண்டரிகள் வரத் தொடங்கின. இதனால் 10 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்தது நியூசிலாந்து.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கான்வே 45 ரன்கள் எடுத்து சமீராவின் முழு நீளப்பந்தில் மிட்விக்கெட்டில் கேட்ச் ஆனார். 42 ரன்கள் எடுத்த ரவீந்திராவும் அடுத்த ஓவரிலேயே தீக்ஷனாவின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். கான்வே - ரவீந்திரா கூட்டணி 74 பந்துகளில் 86 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் டேரில் மிட்செல் அதிரடி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். பவுண்டரியுடன் இன்னிங்ஸைத் தொடங்கிய மிட்செல், மைதானத்தின் அளவுகளைப் பயன்படுத்தி பெரிய ஷாட்களுக்கு முயன்றார்.
14 ரன்கள் எடுத்த வில்லியம்சன், மேத்யூஸின் குறைவேகப் பந்தைக் கணிக்கத் தவறி போல்ட் ஆனார். மேத்யூஸின் அடுத்த ஓவரில் மிட்செலின் தவறான அழைப்பால் ரன் அவுட் ஆகி கோபத்துடன் வெளியேறினார் சாப்மேன்.
அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட மிட்செல் 31 பந்துகளில் 42 ரன்கள் அடித்து மேத்யூஸின் குறைவேகப் பந்தில் ஆட்டமிழந்தார். அசலங்காவின் டைவ் - கேட்சையும் பாராட்ட வேண்டும். 24-வது ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை முடித்தார் பிலிப்ஸ். இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது நியூசிலாந்து. 3 விக்கெட்டுகளை வீழ்த்திய போல்ட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
இதனால் பாகிஸ்தானின் அரை இறுதி வாய்ப்பு மேலும் மோசமடைந்துள்ளது. பாகிஸ்தான் தனது அடுத்த ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. நெட் ரன் ரேட்டில் நியூசிலாந்தைப் பின்னுக்குத் தள்ளி அரையிறுதிக்குள் நுழைய, பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தால் இங்கிலாந்தை 287 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். இரண்டாவதாக பேட்டிங் செய்தால், 284 பந்துகள் மீதமிருக்க வெற்றி பெற வேண்டும்.
தோல்வியுடன் இந்த உலகக் கோப்பைப் போட்டியை முடித்துள்ளது இலங்கை. இதனால் அந்த அணியின் சாம்பியன்ஸ் கோப்பை வாய்ப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.