நவம்பர் 10: சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய தென்னாப்பிரிக்கா

ESPNcricinfo staff

சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்பிய தென்னாப்பிரிக்கா © PA Photos

1991

கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் உணர்வுபூர்வமான நாள் இது. 1970-ல் தென்னாப்பிரிக்க அரசால் பிறப்பிக்கப்பட்ட நிறவெறிக் கொள்கையை எதிர்த்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. இந்தத் தீர்மானத்தின்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிக்குத் தடை விதிக்கப்பட்டது.

21 ஆண்டு தடைக்காலத்துக்குப் பிறகு தென்னாப்பிரிக்க அணி மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பிய நாள் இன்று. முதல் ஒருநாள் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது தென்னாப்பிரிக்க அணி.

தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஆலன் டொனால்ட் 29 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக கிரிக்கெட்டுக்கு தனது வருகையை அறிவித்தார். இருந்தபோதிலும், சச்சின் டெண்டுல்கர் 62 ரன்கள் அடிக்க, இந்திய அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முதல் ஒருநாள் ஆட்டத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்துக்கு இந்தியாவில் பெரிய வரவேற்பு கிடைத்தது. ஈடன் கார்டன்ஸில் இந்த ஆட்டத்தை ஒரு லட்சம் பேர் நேரில் பார்த்தார்கள்.

தென்னாப்பிரிக்க அணி தோல்வியடைந்தாலும் அது அவர்களுக்கு ஒரு பொருட்டாக இல்லை. காரணம், அவர்கள் மீண்டும் சர்வதேச கிரிக்கெட்டுக்குத் திரும்பியுள்ளார்கள். நீல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்த தருணத்தைத் தன்னால் உணர முடிவதாக தென்னாப்பிரிக்க கேப்டன் கிளைவ் ரைஸ் கூறினார்.

தீபக் சஹார் © BCCI

2019

2019-ல் வங்கதேசத்துக்கு எதிரான டி20 ஆட்டத்தில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் 7 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆடவர் சர்வதேச டி20 கிரிக்கெட்டின் தலைசிறந்த பந்துவீச்சு என்கிற சாதனையைப் பதிவு செய்தார். இந்தப் பந்துவீச்சில் தீபக் சஹார் ஹாட்ரிக் விக்கெட்டுகளும் எடுத்தார். இதன்மூலம், சர்வதேச டி20யில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

தீபக் சஹாரின் இந்தச் சாதனையை பின்னாளில் நைஜீரியா மற்றும் மலேசிய வீரர்கள் முறியடித்து விட்டார்கள்.

2023-ல் சீனாவுக்கு எதிரான டி20 ஆட்டத்தில் மலேசியவின் சியாஸ்ருல் இட்ரஸ் 4 ஓவர்கள் வீசி 1 மெய்டனுடன் 8 ரன்கள் மட்டும் கொடுத்து 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே தற்போது சாதனையாக உள்ளது.

ஐபிஎல் கோப்பையுடன் மும்பை இந்தியன்ஸ் © BCCI

2020

ஐபிஎல் கோப்பையை 5-வது முறையாக வென்ற மும்பை அணி

கொரோனாவால் உலகமே அச்சப்பட்டுக் கொண்டிருந்த 2020-ம் ஆண்டில் இதே நாளில் மும்பை அணி 5-வது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்று சாதனை படைத்தது.

துபாயில் நடைபெற்ற இறுதிச்சுற்றில் தில்லி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி.

முதலில் பேட்டிங் செய்த தில்லி அணி, 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 65 ரன்களும் ரிஷப் பந்த் 56 ரன்களும் எடுத்தார்கள். டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

மும்பை அணி, 18.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்று கோப்பையை வென்றது. ரோஹித் சர்மா 68 ரன்கள் எடுத்தார். இதையடுத்து ஐபிஎல் கோப்பையை 5 முறை வென்ற முதல் அணி என்கிற சாதனையை மும்பை அணி படைத்தது.

Comments