நவம்பர் 13: ரோஹித்தின் இரட்டைச் சதம்!

ESPNcricinfo staff

ரோஹித் சர்மா © BCCI

2014-ல் இதே நாளில் தான் ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் ஆட்டத்தில் 264 ரன்களைக் குவித்து உலக சாதனை படைத்தார்.

கொல்கத்தால் நடைபெற்ற ஆட்டத்தில் ரோஹித் 4 ரன்கள் எடுத்திருந்தபோது அவருடைய கேட்சை திசாரா பெரேரா தவறவிட்டார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய சாதனையைப் படைக்க அந்தத் தவறும் ஒரு காரணமாகிப் போனது.

100 பந்துகளில் தனது சதத்தை எட்டிய ரோஹித், அதன்பிறகு வெறும் 73 பந்துகளில் அடுத்த 164 ரன்களைக் குவித்தார். 9 சிக்ஸர்கள், 33 பவுண்டரிகளுடன் 264 ரன்கள் குவித்து, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்கிற சாதனையைப் படைத்தார். விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஓய்வில் இருந்து அணிக்குத் திரும்பிய முதல் ஆட்டத்திலேயே இந்த அதிரடியை நிகழ்த்தி ரசிகர்களை மிரள வைத்தார் ரோஹித்.

ரோஹித்தின் அதிரடியால் அந்த ஆட்டத்தில் 404 ரன்களைக் குவித்தது இந்தியா. இந்த இலக்கைத் துரத்திய இலங்கை 251 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

ரோஹித்தின் 3 இரட்டைச் சதங்களில் இது 2-வதாகும்.

இங்கிலாந்து டி20 சாம்பியன்!

2022-ல் இதே நாளில் தான் டி20 உலகக் கோப்பையை வென்று புதிய வரலாறைப் படைத்தது இங்கிலாந்து.

மெல்போர்னில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் முதலில் விளையாடிய பாகிஸ்தானால் 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. சாம் கரண் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி வெற்றிக்கான அஸ்திவாரமிட்டார்.

பந்துவீச்சில் பாகிஸ்தான் நெருக்கடி கொடுத்தது. ஃபீல்டிங் செய்யும்போது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக ஷாஹீன் அஃப்ரிடியால் தனது 3-வது ஓவரை முழுமையாக வீச முடியவில்லை. இது ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது.

2019 ஒருநாள் உலகக் கோப்பை நாயகனான பென் ஸ்டோக்ஸ் இந்த ஆட்டத்தில் அரை சதம் அடிக்க, ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் இங்கிலாந்து வெற்றியை ருசித்தது. இதன்மூலம் 2010-க்குப் பிறகு மீண்டும் டி20 சாம்பியன் ஆனது இங்கிலாந்து. ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை சாம் கரண் பெற்றார்.

ஒரே நேரத்தில் ஒருநாள் மற்றும் டி20 என இரு உலகக் கோப்பைகளிலும் சாம்பியன் எனும் புதிய கெளரவத்தையும் இங்கிலாந்து பெற்றது.

ஷார்ஜாவில் கோப்பையை வென்ற இந்தியா

1998-ல் ஷார்ஜாவில் இந்தியா, இலங்கை, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் கோகோ - கோலா சாம்பியன்ஸ் கோப்பைப் போட்டியில் மோதின.

இதே நாளில், இறுதிச் சுற்றில் ஜிம்பாப்வே-வை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 196 ரன்கள் சேர்த்தது. இந்த இலக்கைத் துரத்திய இந்தியா ஒரு விக்கெட்டைக் கூட இழக்காமல் 20 ஓவர்கள் மீதமிருந்த நிலையில் வெற்றி பெற்றது.

தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய சச்சின் - கங்குலி இணை ஜிம்பாப்வே பந்துவீச்சாளர்களைப் பந்தாடி கோப்பையை உறுதி செய்தார்கள். 92 பந்துகளில் 12 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் மூலம் 124 ரன்கள் குவித்த சச்சின் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இது அவருடைய 21-வது ஒருநாள் சதமாகும். அந்தப் போட்டியில் இரு விக்கெட்டுகளுடன் 274 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் சச்சின் தட்டிச் சென்றார்.

Comments