50 ஒருநாள் சதங்கள்: புதிய உலக சாதனை படைத்த விராட் கோலி

ESPNcricinfo staff

சதமடித்த விராட் கோலி © ICC/Getty Images

உலகக் கோப்பை அரையிறுதியில் புதிய உலக சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் விராட் கோலி.

வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் முன்னால் இந்தச் சாதனையை நிகழ்த்தியது, அத்தருணத்தை மேலும் அழகாக்கியது.

அதிக சதங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 49 சதங்களுடன் சச்சின் 2-வது இடத்தில் உள்ளார்.

அரையிறுதியில் அற்புதமாக விளையாடிய கோலி, அரை சதத்தை 59 பந்துகளில் எடுத்தார். பிறகு 106 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்தார்.

கோலி சதமடித்தபோது பார்வையாளர் பகுதியில் இருந்த அவருடைய மனைவியும் நடிகையுமான அனுஷ்கா சர்மா பறக்கும் முத்தங்களை வழங்கினார்.

49-வது ஒருநாள் சதத்தை 451-வது இன்னிங்ஸில் எடுத்தார் சச்சின். கோலி 50-வது ஒருநாள் சதத்தை 279-வது இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.

ஓர் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. 2003 உலகக் கோப்பையில் சச்சின் 673 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.

இந்த உலகக் கோப்பையில் 10 ஆட்டங்களில் 3 சதங்கள், 5 அரை சதங்களுடன் 709 ரன்கள் எடுத்துள்ளார் கோலி.

113 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி.

நவம்பர் 15 அன்று சச்சின், சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமானார்; தனது கடைசி சர்வதேச இன்னிங்ஸையும் விளையாடினார். அதே நாளில் கோலி 50-வது ஒருநாள் சதமடித்து சச்சினின் சாதனையை முறியடித்துள்ளார்.

Comments