என் மனம் கவர்ந்த விராட் கோலி: சாதனை சதத்துக்கு சச்சின் வாழ்த்து
ஒருநாள் கிரிக்கெட்டில் 50 சதங்கள் எடுத்த முதல் வீரர் என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. இதற்கு சச்சின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் அரையிறுதியில் நியூசிலாந்துக்கு எதிராகச் சதமடித்தார் கோலி. 113 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் கோலி. இது அவருடைய 50-வது ஒருநாள் சதம்.
49-வது ஒருநாள் சதத்தை 451-வது இன்னிங்ஸில் எடுத்தார் சச்சின். கோலி 50-வது ஒருநாள் சதத்தை 279-வது இன்னிங்ஸில் எடுத்துள்ளார்.
ஓர் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் எடுத்த பேட்டர் என்கிற சாதனையையும் படைத்துள்ளார் கோலி. 2003 உலகக் கோப்பையில் சச்சின் 673 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு சாதனையாக இருந்தது.
இந்நிலையில் கோலியின் சாதனை சதத்துக்கு சச்சின் வாழ்த்து தெரிவித்துள்ளார். ட்விட்டரில் அவர் கூறியதாவது:
முதல்முறையாக ஓய்வறையில் உங்களைப் பார்த்தபோது என் காலைத் தொட்டு வாழ்த்து பெற வேண்டும் என உங்களை மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள். அந்நாளில் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. ஆனால் விரைவில், உங்களுடைய ஆர்வத்தாலும் திறமையாலும் என் மனதைத் தொட்டீர்கள். அன்றைய இளம் வீரர், பின்னாளில் வீரமானவராக (விராத்) உருவானதற்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
என்னுடைய சாதனையை ஓர் இந்தியர் முறியடித்ததை விடவும் வேறென்ன சந்தோஷம் இருக்க முடியும்?அதுவும் இந்தச் சாதனை உலகக் கோப்பை அரையிறுதியில், என்னுடைய சொந்த மண்ணில் நிகழ்ந்தது பழம் நழுவி பாலில் விழுந்தது போல் ஆகிவிட்டது என்றார்.