ஷமி 7 விக்கெட்டுகள்: இறுதிச் சுற்றில் இந்தியா!
நாக் அவுட் ஆட்டத்தின் பதற்றத்தை உணராமல் துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தி பேட்டர்கள் 397 ரன்கள் விளாச, ஷமி 7 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார்.
டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார். லீக் சுற்று முழுவதிலும் முதல் பவர்பிளேயில் தாக்குதல் ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி பந்துவீச்சாளர்களை நெருக்கடிக்குள்ளாக்கிய ரோஹித், நாக் அவுட் சுற்றிலும் இதைத் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்புகள் இருந்தன.
டிரென்ட் போல்ட் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகள் விளாசி தனது நோக்கத்தை இந்த ஆட்டத்திலும் வெளிப்படுத்தினார் ரோஹித் சர்மா. குறிப்பாக போல்ட் வீசிய இரண்டாவது ஓவரில் இறங்கி வந்து எக்ஸ்ட்ரா கவரில் சிக்ஸர் அடித்தார். இந்த நெருக்கடியிலிருந்து நியூசிலாந்தால் மீள முடியவில்லை. 5 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்ததால், 6-வது ஓவரிலேயே சான்ட்னரை அழைத்தார் வில்லியம்சன். சான்ட்னரின் முதல் ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் அடித்து அவரையும் நெருக்கடிக்குள்ளாக்கினார்.
9-வது ஓவரில்தான் டிம் சௌதி குறைவேகப் பந்தை வீசினார். ரோஹித் தூக்கி அடிக்கப் பார்த்து வில்லியம்சனிடம் கேட்ச் ஆனார். 29 பந்துகளில் 47 ரன்கள் விளாசி தேவையான சேதத்தை உண்டாக்கி சரியான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்துச் சென்றார்.
ரோஹித் விக்கெட்டுக்குப் பிறகு கில் அதிரடிக்கான பொறுப்பை ஏற்றார். கோலி இன்னிங்ஸை கட்டமைத்தார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 84 ரன்கள் எடுத்தது. கில் 41-வது அரை சதத்தை எட்டினார். அடுத்த 10 ஓவர்களில் இந்திய அணி விக்கெட்டை இழக்கவில்லை. சான்ட்னரால் நெருக்கடியை உண்டாக்க முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 150 ரன்கள் எடுத்தது. கில் - கோலி கூட்டணி சிறப்பாக வளர்ந்து வந்த நிலையில் கில்லுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. கில் 79 ரன்கள் எடுத்திருந்தபோது ரிடையர்ட் ஹர்ட் முறையில் வெளியேறினார்.
ஷ்ரேயஸ் ஐயர் வந்ததும் ஷார்ட் பந்துக்காக ஃபெர்குசன் வரவழைக்கப்பட்டார். இவரது முதல் ஷார்ட் பந்தில் மட்டுமே ஷ்ரேயஸ் தடுமாறினார். மற்றபடி நியூசிலாந்து பந்துவீச்சாளர்களால் இந்திய அணி எவ்வித நெருக்கடியையும் சந்திக்கவில்லை. கோலியைச் சுற்றி விளையாட வேண்டும் என்கிற பொறுப்பைக் கையிலெடுத்த ஷ்ரேயஸ், ரவீந்திரா ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் அடித்து ரன் குவிப்பில் ஈடுபடத் தொடங்கினார். கோலி 59-வது பந்தில் அரை சதத்தை அடித்தார். 29-வது ஓவரிலேயே இந்தியா 200 ரன்களைக் கடந்தது.
வில்லியம்சன் எந்த பந்துவீச்சாளரை அழைத்தாலும், இந்திய அணியின் பேட்டிங்கில் மாற்றமில்லை. சான்ட்னர் வீசிய 35-வது ஓவர் மட்டும்தான் நியூசிலாந்துக்குச் சாதகமாக அமைந்தது. நியூசிலாந்து இன்னிங்ஸில் வீசப்பட்ட ஒரே மெய்டன் ஓவர் இது.
இந்த மெய்டன் ஓவருக்குப் பிறகு கியரை மாற்றினார் ஷ்ரேயஸ். ஆட்டத்தின் மிக முக்கியமான திருப்புமுனையாக இது அமைந்தது. 35-வது பந்தில் அரை சதம் அடித்தார். 40 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 287 ரன்கள் எடுத்தது.
அணி நிர்வாகம் கொடுத்த இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும் என்கிற பொறுப்பை மிகச் சரியாக செயல்படுத்தி வந்த கோலி 42-வது ஓவரில் ஒருநாள் கிரிக்கெட்டில் 50-வது சதத்தை அடித்து சச்சின் டெண்டுல்கர் சாதனையை, அவரது சொந்த மண்ணிலேயே அவரது முன்னிலையிலேயே முறியடித்தார்.
சிறப்பான பேட்டிங்காக இருந்தாலும், இந்திய அணியின் ரன் ரேட் 7 முதல் 7.5-க்குள்தான் இருந்தது. கடைசி கட்டத்தை எட்டியதால் சரியான அதிரடி தேவை என்ற நிலை இருக்க, ஷ்ரேயஸ் பெரிய சிக்ஸர்களை அடிக்கத் தொடங்கினார். கோலி 117 ரன்கள் எடுத்து சௌதி பந்தில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயஸ் சிக்ஸர்களுக்கு இது வேகத்தடையாக அமையவில்லை. 67-வது பந்தில் இரண்டாவது உலகக் கோப்பை சதத்தை எட்டினார்.
ராகுலுக்கு வந்தவுடன் அதிரடி காட்ட முடியவில்லை. முதல் 10 பந்துகளில் 10 ரன்கள் எடுத்து தடுமாற்றம் கண்டார். 49-வது ஓவரிலிருந்து ரிதத்தை கண்டெடுத்தார். இதே ஓவரில் ஷ்ரேயஸ் ஒரு பவுண்டரி அடித்து 105 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி ஓவரிலும் அதிரடி காட்டிய ராகுல் ஒரு சிக்ஸர், இரு பவுண்டரிகள் விளாசி இன்னிங்ஸை நிறைவு செய்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 397 ரன்கள் குவித்தது.
398 ரன்கள் என்ற கடினமான இலக்கை நேர்மறையாகத் தொடங்கினார் டெவான் கான்வே. பும்ரா வீசிய முதல் ஓவரிலேயே இரு பவுண்டரிகள் அடித்தார். பும்ரா வழக்கத்துக்கு மாறாக, பேட்டருக்கு இடைவெளி கொடுத்து வீசினார். முதல் மூன்று ஓவர்களில் பும்ரா 5 வைட் பந்துகள் வீசினார். இதில் ஒரு வைட் பந்து பவுண்டரிக்குச் சென்றது. இந்த உலகக் கோப்பையில் 4-க்குக் கீழ் எகானமி வைத்துள்ள பும்ரா முதல் மூன்று ஓவர்களில் 22 ரன்கள் கொடுத்தார். சிராஜுக்கும் பந்து பெரிதளவில் ஸ்விங் ஆகவில்லை.
சூழலை உணர்ந்த ரோஹித், சிராஜை 2 ஓவர்களுடன் நிறுத்தி உடனடியாக ஷமியை அழைத்தார். ஷமி வந்தார், முதல் பந்திலேயே டிரைவுக்குச் சென்று ராகுலின் அட்டகாசமான கேட்சால் விக்கெட்டை இழந்தார் கான்வே. தனது இரண்டாவது ஓவரிலேயே ரச்சின் ரவீந்திராவையும் வீழ்த்தி நியூசிலாந்துக்கு இரட்டை அடி கொடுத்தார். முதல் விக்கெட் விழுந்தவுடன் ரிதத்தை பெற்றார் பும்ரா. பவர்பிளேயில் தனது கடைசி இரு ஓவர்களில் ஒரு மெய்டன் உள்பட 1 ரன் மட்டுமே கொடுத்தார்.
பவர்பிளே முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 46 ரன்கள் எடுத்தது.
அடுத்த 10 ஓவர்களில் வில்லியம்சனும், மிட்செல்லும் சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். வில்லியம்சன் விக்கெட்டை பாதுகாக்க, மிட்செல் இடையில் சிக்ஸர்கள், பவுண்டரிகள் அடித்து ரன் ரேட்டை படிப்படியாக உயர்த்தினார். 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 124 ரன்கள் எடுத்தது.
21-வது ஓவரிலிருந்து ரன் ரேட்டை மேலும் அதிகரிக்க முயற்சித்தார்கள். பக்கவாட்டு பவுண்டரிகளில் சிக்ஸர் அடிக்க முயற்சிக்காமல் நேர் பேட்டில் நேராக சிக்ஸர்களும், பவுண்டரிகளும் அடித்தார்கள். இருவரும் அரை சதம் கடக்க, மிட்செல் 107 மீட்டர் தூரத்துக்கு சிக்ஸர் அடித்து இந்தியப் பந்துவீச்சாளர்களை மிரட்டினார். ஆட்டம் இந்திய அணியிடமிருந்து நழுவி நியூசிலாந்து கட்டுப்பாட்டுகள் செல்லத் தொடங்கியது.
நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கொஞ்சம் தாமதமாக 29-வது ஓவரில் பும்ராவை அழைத்தார் ரோஹித். கூட்டணியைப் பிரிக்க வேண்டும் என்பதே திட்டமாக இருந்தது. இந்த ஓவரில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஷமி தவறவிட்டார். பும்ராவைக் கொண்டு வந்த திட்டம் சரியானதாக அமைந்தும் வாய்ப்பைத் தக்கவைக்கவில்லை.
முதல் 30 ஓவர்களில் நியூசிலாந்து மிகச் சரியாக 199 ரன்கள் எடுத்தது. கடைசி இரு ஓவர்களில் சரியாக 199 ரன்கள் தேவை. 8 விக்கெட்டுகள் இருந்ததால் டி20 ஆட்டமாக மாற வாய்ப்பு இருந்தது. பும்ராவின் 7-வது ஓவரில் சிக்ஸரும், பவுண்டரியும் பறக்க ரோஹித் சர்மா நெருக்கடிக்குள்ளானார்.
சிறிய இடைவேளைக்குப் பிறகு, 33-வது ஓவரில் ஷமியை அறிமுகப்படுத்தினார் ரோஹித். மிட்செல் 85 பந்துகளில் சதம் அடித்து நம்பிக்கையை அதிகரித்துக்கொண்டார்.
ஆனால், இதே ஓவரில் ஷமி பந்தை ஃபிளிக் செய்ய முயற்சித்து ஸ்கொயர் லெக் பவுண்டரி எல்லையில் கேட்ச் ஆனார் வில்லியம்சன். இவர் 69 ரன்கள் எடுத்தார். இந்த உலகக் கோப்பையில் மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் லேதம் இரண்டாவது பந்திலேயே எல்பிடபிள்யு ஆனார். ஷமியின் இரண்டாவது இரட்டை அடி நியூசிலாந்து சேஸிங்குக்கு வேகத்தடையாக அமைந்தது.
அடுத்த 5 ஓவர்களில் 25 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து எடுத்தது. ஃபிளிப்ஸ் 16 பந்துகளில் 11 ரன்கள் மட்டுமே எடுத்து திணறினார். ரோஹித் சர்மாவும் சிராஜை கொண்டு வைட் யார்க்கர் பந்துகளை வீச வைத்து, அதற்கான ஃபீல்டிங்கை கொடுத்து தடுப்பாட்ட முறையைக் கையாண்டு வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் நெருக்கடியை அதிகரிக்கச் செய்தார். இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 13-ஐ நெருங்கியது.
கடைசி 10 ஓவர்களில் 132 ரன்கள் தேவை என்ற நிலை இருக்க, சிராஜ் வீசிய ஓவரில் ஃபிளிப்ஸ் இரு சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி விளாச ஆட்டத்தைக் கட்டுப்பாட்டுக்குள் எடுக்க நியூசிலாந்து மீண்டும் முயற்சித்தது.
குல்தீப் மற்றும் பும்ராவை நம்பினார் ரோஹித். அடுத்த நான்கு ஓவர்களில் இவர்கள் 20 ரன்கள் மட்டுமே கொடுத்தார்கள். ஃபிளிப்ஸ் விக்கெட்டை பும்ரா வீழ்த்தினார். சேப்மேன் விக்கெட்டை குல்தீப் வீழ்த்தினார். 46-வது ஓவரில் வந்த ஷமி, 5-வது விக்கெட்டாக சதமடித்த மிட்செல்லை வீழ்த்தினார். இவர் 119 பந்துகளில் 134 ரன்கள் எடுத்தார். 49-வது ஓவரில் கடைசி இரு விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஷமி இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஷமி 57 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை நிகழ்த்தினார்.
நியூசிலாந்தை 327 ரன்களுக்குச் சுருட்டிய இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2019 அரையிறுதிக்குப் பழிதீர்த்த இந்திய அணி 2011 உலகக் கோப்பைக்குப் பிறகு முதல்முறையாக இறுதி ஆட்டத்துக்குத் தகுதி பெற்றுள்ளது.
ரன் இல்லாத இரண்டு இடங்களில் இந்திய அணி பவுண்டரிகளைக் கொடுத்து உதவியது. பும்ரா பந்தைப் பிடிக்காததும், பந்தைப் பிடித்த ஜடேஜா தேவையற்ற ஓவர் த்ரோ வீசியதும் நியூசிலாந்துக்கு ரிஸ்க் இல்லாமல் 8 ரன்களைக் கொடுத்தது. முதல் பவர்பிளேயில் இந்தியப் பந்துவீச்சாளர்கள் 7 வைட் பந்துகளை வீசினார்கள். இதில் இரு வைட் பந்துகள் மிகவும் வைடாகச் சென்று பவுண்டரியை அடைந்தன. ஆப்கானிஸ்தானுடனான ஆட்டத்துக்குப் பிறகு ஜடேஜா முதல் நோ-பாலை இன்றைய ஆட்டத்தில் வீசினார். மிக முக்கியமான கேன் வில்லியம்சன் கேட்ச் வாய்ப்பை ஷமி தவறவிட்டார். இந்த சிறு தவறுகள் இன்றைய ஆட்டத்தின் முடிவில் பாதிப்பை உண்டாக்கவில்லை. எனினும், இறுதி ஆட்டத்துக்கு முன்பு இந்திய அணி இதில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.