நவம்பர் 16: வகார் யூனிஸ் பிறந்தநாள்!
1971
பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வகார் யூனிஸ் இன்று 52-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.
1989-ல் அறிமுகமான இவர் 90-களில் உச்சம் பெற்று கொடிகட்டிப் பிறந்தார். வேகமாக ஷார்ட் பந்துகளை வீசி விக்கெட் எடுக்க வேண்டும் மரபை உடைத்து முழு நீளத்தில் பந்தை ஸ்விங் செய்து விக்கெட் வேட்டையை நடத்தியவர். மேலும் இவரது யார்க்கர்கள், பேட்டர்களின் கால்களைப் பெயர்த்து ஸ்டம்புகளைத் தகர்க்கும்.
1990-91 நியூசிலாந்து தொடருக்குப் பிறகு மூன்று ஆண்டுகளில் 33.55 ஸ்டிரைக் ரேட்டில் 109 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இவரும் வாசிம் அக்ரமும் ரிவர்ஸ் ஸ்விங்கில் எதிரணி பேட்டர்களை மிரட்டி வந்தார்கள்.
2000-க்குப் பிறகு இவரிடம் கேப்டன் பொறுப்பு வந்தது. பந்துவீச்சில் சாதித்ததற்கு நேர் எதிராக அமைந்தது இவரது கேப்டன் பொறுப்பு. இவரது தலைமையிலான பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2002-ல் ஷார்ஜா டெஸ்டில் 59 மற்றும் 53 ரன்களுக்குச் சுருண்டு படுதோல்வியடைந்தது. 2003 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் மிக மோசமான தோல்வியைச் சந்தித்தது.
2003 உலகக் கோப்பை தோல்விக்குப் பிறகு அணியில் இடம்பிடிப்பது இவருக்கு சிரமமாகவே இருந்தது. இதனால், தனது 33-வது வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார். டெஸ்டில் 373 விக்கெட்டுகளையும், ஒருநாள் கிரிக்கெட்டில் 416 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
ஓய்வுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராகவும், தலைமைப் பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
2013
ஆடுகளத்திலிருந்து விடைபெற்ற கிரிக்கெட் கடவுள்!
கிரிக்கெட் ரசிகர்கள் கண்ணீர் விட்ட நாள் இன்று. இதே நாளில் தான் 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் சச்சின் டெண்டுல்கர்.
2013-ல் இந்தியா, மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான வான்கடே டெஸ்டுடன் ஓய்வு பெறுவதாக சச்சின் டெண்டுல்கர் ஏற்கெனவே அறிவிக்க, சச்சினின் கடைசி இன்னிங்ஸை காணவே ரசிகர்கள் மைதானத்தின் முன்பும், தொலைக்காட்சி முன்பும் கூடினார்கள்.
இந்த ஆட்டத்தில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸில் மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 495 ரன்கள் குவித்தது. கடைசி டெஸ்ட் இன்னிங்ஸில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 74 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் டினோ பெஸ்ட் சச்சினுக்கு சவால் அளிக்க, இதைச் சிறப்பாகக் கையாண்டு அற்புதமான ஸ்டிரெய்ட் டிரைவ், அப்பர் கட் ஷாட்கள் மூலம் ரசிகர்களுக்கு விருந்தளித்தார்.
மேற்கிந்தியத் தீவுகள் அணி 182 மற்றும் 187 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி டெஸ்டை வெற்றியுடன் நிறைவு செய்தார் சச்சின் டெண்டுல்கர்.
ஆட்டம் முடிவடைந்தவுடன் சச்சின் டெண்டுல்கர், ஆடுகளத்துக்கு மரியாதை செலுத்தியபிறகு ஓய்வறைக்குச் சென்றார். தனது நன்றியுரையில் ரசிகர்களைக் கண்ணீர் விட வைத்தார். சச்சின்... சச்சின்... என மைதானத்தில் ஒலித்த குரல்களைத் தன்னால் என்றென்றும் மறக்க முடியாது என்று ரசிகர்களின் இத்தனையாண்டு அன்புக்கும் ஆதரவுக்கும் மதிப்பளித்துப் பேசினார் சச்சின் .
1989 நவம்பரில் தொடங்கிய பயணம் 2013 நவம்பரில் நிறைவடைந்தது.