இந்தியாவை வீழ்த்தி 6-வது முறையாக உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலியா

ESPNcricinfo staff

வெற்றிக் களிப்பில் ஆஸ்திரேலிய அணி. © AFP/Getty Images

இறுதிச் சுற்றுக்கு முன் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட கம்மின்ஸ் மைதானத்துக்கு வரும் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இந்திய ரசிகர்களை அமைதியாக்குவதே குறிக்கோள் எனச் சொல்லியிருந்தார். அதனை கண்முன்னே நிகழ்த்தி 6-வது முறையாக கோப்பையைக் கைப்பற்றியுள்ளது ஆஸ்திரேலியா.

உலகின் மிகப்பெரிய மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய இந்த ஆட்டத்தில் டாஸை வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தார் கம்மின்ஸ். இரு அணிகளிலும் எதிர்பார்த்ததைப் போலவே மாற்றங்கள் ஏதும் செய்யப்படவில்லை.

ஆரம்பம் முதலே ரோஹித் தனது வழக்கமான அதிரடிப் பாதையில் பயணித்தார். ஹேசில்வுட் வீசிய இரண்டாவது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரிகள் ரோஹித்தின் பேட்டில் இருந்து வந்தன. மூன்றாவது ஓவரில் தான் கில் தனது முதல் பந்தை சந்தித்தார். அதுவும் விளிம்பில் பட்டு ஸ்லிப்பில் எகிறியது. நல்லவேளையாக ஃபீல்டருக்கு முன்பு பவுன்ஸ் ஆகிவிட்டது.

ஹேசில்வுட்டின் இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டார் ரோஹித். தடுமாற்றத்துடன் இன்னிங்ஸைத் தொடங்கிய கில் 4 ரன்கள் எடுத்து ஸ்டார்க்கின் பேக் ஆஃப் த லெங்த் பந்தில் ஸாம்பாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் இறங்கி வந்து லாங் ஆஃபில் சிக்ஸர் அடித்து தனது முடிவில் மாற்றமில்லை என அறிவித்தார் ரோஹித்.

ஸ்டார்க் வீசிய 7-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் கோலி. இந்த அதிரடியைக் கட்டுப்படுத்த கம்மின்ஸ் ஒருபுறமும் மேக்ஸ்வெல் மற்றொருபுறமும் பந்துவீசத் தொடங்கினார்கள். இதற்கு உடனடிப் பலனும் கிடைத்தது. மேக்ஸ்வெல் வீசிய 10-வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்த ரோஹித் இன்னொரு சிக்ஸருக்கு முயன்று ஆட்டமிழந்தார். 31 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 47 ரன்கள் எடுத்தார்.

பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய ஷ்ரேயஸ் கம்மின்ஸின் அட்டகாசமான பந்தில் கீப்பரிடம் கேட்ச் ஆனார். இதனால் விக்கெட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் வகையில் ராகுல் - கோலி இணை விளையாடத் தொடங்கியது. பவுண்டரிகள் கிடைக்கவில்லை என்றாலும் சிங்கிள்கள் மூலம் ரன்களை உயர்த்தினார் கோலி. மறுபக்கம் கேஎல் ராகுல் பொறுமையுடன் விளையாடினார்.

56 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் கோலி. 11-வது ஓவர் தொடங்கி அடுத்த 16 ஓவர்களுக்கு இந்தியாவுக்கு பவுண்டரியே கிடைக்கவில்லை. இந்த காத்திருப்புக்கு மேக்ஸ்வெல் வீசிய 27-வது ஓவரில் முற்றுப்புள்ளி வைத்தார் ராகுல். அவர் அடித்த ஒரே பவுண்டரி இது மட்டுமே.

கோலி - ராகுல் இணைக்கு ஷார்ட் பந்துகள் மூலம் வலை விரித்தார் கம்மின்ஸ். ஆனால் இருவரும் சுதாரித்து விளையாடினார்கள். நேரம் செல்லச்செல்ல ஆடுகளத்தில் பந்து நன்றாகத் திரும்பியதால் ஸ்டார்க், ஹெட், ஸாம்பா என பந்துவீச்சாளர்களை மாற்றிக்கொண்டே இருந்தார் கம்மின்ஸ்.

109 பந்துகளில் 67 ரன்கள் எடுத்த கோலி - ராகுல் கூட்டணியை உடைக்கும் பொறுப்பை கம்மின்ஸே ஏற்றுக்கொண்டு பந்துவீச வந்தார். 54 ரன்கள் எடுத்த கோலி, 28-வது ஓவரில் கம்மின்ஸின் குறைவேக லெங்த் பந்தை தடுக்க முயன்று போல்ட் ஆனார். இதனால் அஹமதாபாத் மைதானமே அமைதியானது. கோலியும் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.

வழக்கத்துக்கு மாறாக சூர்யகுமார் யாதவுக்கு முன்பே ஜடேஜா களமிறக்கப்பட்டார். பொறுமையாக விளையாடிய கேஎல் ராகுல் 86 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். கூட்டணி அமைக்கவிடாமல் தடுக்க ஹேசில்வுட்டிடம் பந்தைக் கொடுத்தார் கம்மின்ஸ்.

அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஆஃப் பக்கம் ரூம் கொடுத்து வீசி ஜடேஜாவுக்கு வலை விரித்தார் ஹேசில்வுட். இதில் விழுந்த ஜடேஜா, கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்களுடன் ஓய்வறைக்குத் திரும்பினார். 41-வது ஓவரில் தான் இந்தியா 200 ரன்களைக் கடந்தது. 107 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த கேஎல் ராகுல் 42-வது ஓவரில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதனால் கடைசி ஓவர்களில் ரன் குவிக்க வேண்டிய மொத்தப் பொறுப்பும் சூர்யகுமார் யாதவின் மீது விழுந்தது. மறுமுனையில் ஷமி 6 ரன்களிலும் பும்ரா 1 ரன்னிலும் விக்கெட்டைப் பறிகொடுத்தார்கள். கடைசி ஓவர்களில் ரிவர்ஸ் ஸ்விங் ஆனதால் பந்துகளைக் கணிக்க முடியாமல் இந்திய பேட்டர்கள் திணறினார்கள்.

சூர்யகுமார் யாதவுக்கு குறைவேக ஷார்ட் பந்துகள் மூலம் நெருக்கடி கொடுத்தார்கள். பந்தில் வேகம் கிடைக்காததால் தனது வழக்கமான ஸ்கூப் ஷாட் அடிக்க முடியாமல் திணறினார் சூர்யகுமார். இதனைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டார் ஹேசில்வுட். கடைசி ஓவர்களில் ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து கீப்பரிடம் கேட்ச் ஆனார். இன்னிங்ஸின் கடைசிப் பந்தில் குல்தீப் ரன் அவுட்டாக இந்தியா 240 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

முதல் பவர்பிளேவில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களை அடித்த இந்தியாவால் அடுத்த 40 ஓவர்களில் வெறும் 4 பவுண்டரிகளை மட்டுமே பெற முடிந்தது. அந்த அளவுக்கு ஆஸ்திரேலிய வீரர்கள் கச்சிதமாக ஃபீல்டிங் செய்து ரன்களைக் கட்டுப்படுத்தினார்கள்.

குறைவான இலக்கை வைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் பவர்பிளேவில் இந்தியாவுக்கு விக்கெட்டுகள் தேவைப்பட்டன. இதனால் பும்ரா - ஷமியிடம் பொறுப்பைக் கொடுத்தார் ரோஹித் சர்மா.

பும்ராவின் முதல் பந்திலேயே வார்னரின் பேட்டில் பட்டு ஸ்லிப்பில் நின்ற கோலி - கில் இடையே சென்றது பந்து. இருவருமே முயற்சிக்காததால் பந்து பவுண்டரிக்குச் சென்றது. அதே ஓவரில் இரண்டு பவுண்டரிகளைப் பறக்கவிட்டார் ஹெட்.

7 ரன்கள் எடுத்த வார்னர், ஷமியின் முதல் ஓவரிலேயே ஸ்லிப்பிடம் இருந்த கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இன்றைய தினத்தில் இந்திய அணியின் ஃபீல்டிங் சுமார் ரகமாகவே இருந்தது. குறிப்பாக ராகுல் கைக்கு வந்த பந்துகளைத் தவறவிட இது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமானது. இதனால் இரண்டு ஓவர்களில் ஆஸ்திரேலியா ஒரு விக்கெட் இழப்புக்கு 28 ரன்கள் எடுத்தது.

ஒரு பவுண்டரி, சிக்ஸருடன் 15 ரன்கள் எடுத்த மார்ஷை தனது மூன்றாவது ஓவரில் வீழ்த்தினார் பும்ரா. அவருடைய அடுத்த ஓவரில் லெங்த் பந்தை கால் காப்பில் வாங்கினார் ஸ்மித். எல்பிடபிள்யூ-க்கு அப்பீல் செய்யப்பட கள நடுவரும் அவுட் கொடுத்துவிட்டார். ஹெட்டிடம் ஆலோசனை நடத்திய ஸ்மித் ரெவ்யூ எடுக்காமல் வெளியேறினார். பந்து ஸ்டம்பிலேயே படவில்லை என்பது பின்னர் தான் தெரியவந்தது. 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 60 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

கிரீஸிற்கு வைடாக வந்து உள் பக்க கோணத்தில் பந்துவீசி டிராவிஸ் ஹெட்டுக்கு நெருக்கடி கொடுத்தார்கள் ஷமியும் பும்ராவும். பல பந்துகள் பேட்டுக்கு மிக அருகே கடந்து கீப்பருக்குச் சென்றாலும் ஹெட் தனது விக்கெட்டை காப்பாற்றிக்கொண்டு விளையாடினார்.

ஈரப்பதம் வருவதற்கு முன்பாகவே சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்த முடிவு செய்த ரோஹித் பவர்பிளே முடிந்த பிறகே ஜடேஜா - குல்தீப்பிடம் பந்தைக் கொடுத்தார். இருவரும் ரன் குவிப்பை கட்டுப்படுத்தினாலும் விக்கெட்டைக் கைப்பற்ற முடியாமல் தவித்தார்கள். 18-வது ஓவரில் தான் சிராஜ் அறிமுகப்படுத்தப்பட்டார். ஆனால் அவராலும் விக்கெட்டைக் கைப்பற்ற முடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 104 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. தடுமாற்றத்துடன் தொடங்கிய ஹெட் 58 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார்.

ஹெட் - லபுஷேன் கூட்டணியைப் பிரிக்க பல முயற்சிகளை மேற்கொண்டது இந்திய அணி. ஆனால் எந்தத் திட்டமும் கைகொடுக்கவில்லை. பும்ரா, ஷமியிடம் பந்தைக் கொடுத்துப் பார்த்தார் ரோஹித். ஆனால், அதற்குள் ஈரப்பதம் வந்ததால் இலகுவாக ரன்களைக் குவிக்கத் தொடங்கியது ஹெட் - லபுஷேன் கூட்டணி.

பும்ரா வீசிய 28-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறந்தன. அதே ஓவரில் லெங்த் பந்தை கால் காப்பில் வாங்கினார் லபுஷேன். இந்தியா அப்பீல் செய்தாலும் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. ரெவ்யூவிலும் நடுவரின் முடிவு இறுதியானது என வந்ததால் லபுஷேன் தப்பித்தார். 30 ஓவர்கள் முடிவில் 167 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக இருந்த ஹெட் 95 பந்துகளில் சதம் அடித்து வரலாற்றில் இடம் பிடித்தார். பொறுமையாக விளையாடிய மார்னஸ் லபுஷேன் 99-வது பந்தில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 137 ரன்கள் குவித்த ஹெட் வெற்றிக்கு 2 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஹெட் - லபுஷேன் கூட்டணி 215 பந்துகளில் 192 ரன்கள் குவித்து வெற்றியை சாத்தியமாக்கியது.

மேக்ஸ்வெல் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டத்தை முடித்துவிட்டார். இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று சாதனை படைத்தது ஆஸ்திரேலியா. அதிரடியாக விளையாடி சதம் அடித்த டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். விராட் கோலிக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி வீரர்கள் இறுதிச் சுற்றில் தோல்வியடைந்து வாடிய முகத்துடன் களத்திலிருந்து வெளியேறினார்கள். 2003 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் தோல்வியடைந்த இந்திய அணி 20 வருடங்கள் கழித்து இன்னொரு முறை ஆஸ்திரேலியாவிடம் உலகக் கோப்பையைப் பறிகொடுத்துள்ளது.

Comments