இறுதிச் சுற்றில் நாங்கள் சரியாக விளையாடவில்லை: ரோஹித் சர்மா வருத்தம்

ESPNcricinfo staff

ரோஹித் சர்மா © ICC/Getty Images

பேட்டிங்கில் கூடுதலாக ரன்கள் எடுக்காததே தோல்விக்குக் காரணம் என இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

அஹமதாபாதில் நடைபெற்ற இறுதிச் சுற்றில் இந்தியாவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஒருநாள் உலகக் கோப்பையை 6-வது முறையாக வென்றது ஆஸ்திரேலிய அணி. இறுதிச்சுற்றில் சதமடித்த டிராவிஸ் ஹெட், ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

தொடர் நாயகன் விருது விராட் கோலிக்கு வழங்கப்பட்டது. ஐசிசி போட்டியில் 3-வது முறையாக இவ்விருதை அவர் வென்றுள்ளார்.

இந்நிலையில் ஆட்டம் முடிந்தபிறகு இந்திய கேப்டன் ரோஹித் சர்மா கூறியதாவது:

முடிவு எங்களுக்குச் சாதகமாக அமையவில்லை. இன்றைய நாளில் நாங்கள் சிறப்பாகச் செயல்படவில்லை. எனினும், எங்கள் அணியை எண்ணி பெருமை கொள்கிறேன். நாங்கள் பெரிய கூட்டணியைக் கட்டமைக்கவில்லை. கூடுதலாக 20, 30 ரன்கள் எடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். கோலியும் ராகுலும் விளையாடிக் கொண்டிருந்தபோது, 270, 280 ரன்களுக்குத் திட்டமிட்டிருந்தோம். அதன்பிறகு விக்கெட்டுகளை வரிசையாக இழந்தோம். அதனால் தான் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

நீங்கள் 240 ரன்கள் எடுக்கும்போது, விரைவாக விக்கெட்டுகள் எடுக்க எண்ணுவீர்கள். நாங்கள் அதையும் செய்தோம். ஆனால், ஹெட்டும் லபுஷேனும் பெரிய கூட்டணியை அமைத்தார்கள். எங்களை ஆட்டத்திலிருந்து ஒட்டுமொத்தமாக வெளியேற்றினார்கள். நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்தோம். இன்னும் ஒரு விக்கெட்டை எடுத்திருந்தால் நல்ல வாய்ப்பு உருவாகியிருக்கும்.

இரண்டாவதாக பேட்டிங் செய்தபோது பந்து பேட்டுக்கு நன்றாக வந்தது. இதைத் தோல்விக்கான காரணமாக கூற விரும்பவில்லை. நாங்கள் சரியாக பேட்டிங் செய்யவில்லை என்றார்.

Comments