வெற்றியுடன் டி20 தொடரைத் தொடங்குமா இந்தியாவின் இளம் படை?
உலகக் கோப்பை அனுபவங்கள் இந்திய ரசிகர்களை இன்னும் கலங்கடித்துக்கொண்டிருக்கும் நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நாளை தொடங்குகிறது.
இரு அணிகளிலும் உலகக் கோப்பையில் பங்கேற்ற முன்னணி வீரர்களுக்கு இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளிலும் இளம் வீரர்கள் இந்தத் தொடரில் களமிறங்குகிறார்கள். டி20 உலகக் கோப்பைக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டுமே இருப்பதால் தங்களது இடத்தை உறுதி செய்ய இந்த இளம் வீரர்களுக்கு இது முக்கியமான வாய்ப்பாக இருக்கும்.
முதல்முறையாக இந்திய அணிக்குத் தலைமை தாங்கும் பொறுப்பு சூர்யகுமாருக்குக் கிடைத்துள்ளது. ஆஸ்திரேலியாவை மேத்யூ வேட் வழிநடத்துகிறார். உலகக் கோப்பையில் பங்கேற்ற இந்திய அணியில் சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகிய மூவர் மட்டுமே இந்தத் தொடரில் முழுமையாக விளையாடவுள்ளார்கள். ஷ்ரேயஸ் ஐயர் கடைசி இரு ஆட்டங்களுக்கு துணைக் கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியாளரான டிராவிட்டுக்கும் இந்தத் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதிலாக விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.
இரு அணிகளிலும் இந்த ஆண்டு இரண்டு ஒருநாள் தொடர்களில் பங்கேற்றது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச் சுற்று மற்றும் ஒரு டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் பங்கேற்றன. இருப்பினும், கடந்த ஆண்டு தான் இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இரு அணிகளிலுமே பல மாற்றங்கள், பல புதுமுகங்கள் இருப்பதால் இந்தத் தொடர் விறுவிறுப்பு நிறைந்ததாகவே இருக்கப் போகிறது.
டி20 உலகக் கோப்பையில் தன்னுடைய இடத்தை தக்கவைத்துக்கொள்ள இஷான் கிஷனுக்கு இது பொன்னான வாய்ப்பாகும். ஏனெனில் இந்தத் தொடரில் ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் யாஷஸ்வி ஜெயிஸ்வால் ஆகிய தொடக்க பேட்டர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆகவே, டி20 உலகக் கோப்பைக்கு இவர்களுக்கிடையே மும்முனைப் போட்டி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 29 டி20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள இஷான் கிஷன் இதுவரை 3 முறை மட்டுமே தொடக்க ஆட்டக்காரராக இல்லாமல் பிற வரிசையில் களமிறங்கியுள்ளார்.
ஆஸ்திரேலியாவின் டி20 கேப்டனான மிட்செல் மார்ஷ் மற்றும் ஒருநாள் கேப்டனான கம்மின்ஸ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் மேத்யூ வேடுக்கு கேப்டன் பதவி அளிக்கப்பட்டுள்ளது. ஜோஷ் இங்லிஸ், அலெக்ஸ் கேரி என இரண்டு விக்கெட் கீப்பர் பேட்டர்கள் அணியில் இருப்பதால் டி20 உலகக் கோப்பைக்கு மேத்யூ வேட் பக்கம் தேர்வாளர்களின் கவனம் திரும்புமா என்பது சந்தேகம் தான்.
அதே நேரத்தில், ஆஸ்திரேலிய அணியில் 5-7 இடங்களில் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், வேட் ஆகியோர் கடந்த இரு ஆண்டுகளில் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். ஆகவே, உலகக் கோப்பையில் வேடின் இருப்பை முடிவு செய்யும் தொடராக இது அமையும் என்பதில் சந்தேகமில்லை.
விசாகப்பட்டினத்தில் கடந்த மார்ச்சில் இரு அணிகளும் ஒருநாள் ஆட்டத்தில் விளையாடியது. இதில் ஆஸ்திரேலியா 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 2019-ல் நடைபெற்ற ஒரு டி20 ஆட்டத்திலும் ஆஸி.யே வெற்றியைப் பதிவு செய்தது. இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி 3 சர்வதேச டி20 ஆட்டங்களிலும் பந்துவீச்சாளர்களுக்கே அதிக ஒத்துழைப்பு கிடைத்தது.
உத்தேச அணிகள்
இந்தியா: இஷான் கிஷன், யாஷஸ்வி ஜெயிஸ்வால், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னாய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, முகேஷ் குமார்.
ஆஸ்திரேலியா: ஸ்டீவன் ஸ்மித், மேத்யூ ஷார்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், ஷான் அபாட், நேதன் எல்லீஸ், ஜேசன் பெஹ்ரன்டார்ஃப், தன்வீர் சங்கா.
2021 முதல் 9 முறை இந்திய டி20 அணியின் கேப்டன் பொறுப்பு மாற்றப்பட்டுள்ளது. பாண்டியா, பும்ரா மற்றும் ருதுராஜைத் தொடர்ந்து தற்போது சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின் கேப்டனாகச் செயல்படவுள்ளார்.
மேத்யூ வேட் ஏற்கெனவே 7 முறை டி20 ஆட்டங்களில் ஆஸ்திரேலிய அணியை வழிநடத்தியுள்ளார். இதில் 2020-ல் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்திலும் கேப்டனாகப் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உண்டு. 2022 உலகக் கோப்பை இறுதிச் சுற்றில் ஆரோன் ஃபின்ஞ்சிற்கு காயம் ஏற்படவே மேத்யூ வேட் கேப்டனாகச் செயல்பட்டார்.
விசாகப்பட்டினத்தில் 4 ஒருநாள் மற்றும் ஒரு டி20 ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பங்கேற்றுள்ளது. இவற்றுள் ஒருமுறை மட்டுமே ஆஸ்திரேலியா தோல்வியடைந்துள்ளது.