சூர்யகுமார் அதிரடி: ஆஸி.யை வீழ்த்திய இந்தியா

ESPNcricinfo staff

ரிங்கு சிங்கைப் பாராட்டும் சூர்யகுமார் யாதவ் © Pankaj Nangia/Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20 ஆட்டத்தில் வென்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா.

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். மூன்று வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் இரு சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியது இந்தியா.

புற்கள் இல்லாததால் ஆடுகளம் பேட்டர்களுக்குச் சாதகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது. பிரசித் கிருஷ்ணா வீசிய இரண்டாவது ஓவரில் இது தெளிவாகப் புரிந்தது. பிரசித்தின் வேகத்தைப் பயன்படுத்திக்கொண்ட ஸ்மித், 3 பவுண்டரிகளை விளாசினார். முதல் ஓவரில் ஒரு பவுண்டரியைக் கொடுத்த அர்ஷ்தீப் தனது இரண்டாவது ஓவரில் குறைவேகப்பந்துகள் மூலம் பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுத்தார். முதல் இன்னிங்ஸில் பவுண்டரி செல்லாத இரு ஓவர்களில் இதுவும் ஒன்றாகும்.

வேகம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததால் அக்‌ஷர் மற்றும் பிஸ்னாயிடம் பந்தைக் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். 4-வது ஓவரில் வீசப்பட்ட இரு ஷார்ட் பந்துகளையும் பவுண்டரிகளாக மாற்றினார் ஷார்ட். 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 30 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

5-வது ஓவரை வீசிய பிஸ்னாய், இரண்டாவது பந்திலேயே ஸ்மித்தின் கேட்சைத் தவறவிட்டார். அதே ஓவரில் முழு நீளத்தில் வீசப்பட்ட 4-வது பந்தை விளாசப் பார்த்து ஆஃப் ஸ்டம்பைப் பறிகொடுத்தார் ஷார்ட். பவுண்டரியுடன் தனது இன்னிங்ஸைத் தொடங்கிய இங்லிஸ், திரி கிள்ளிய சரவெடியாக வெடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

மீண்டும் வேகப்பந்துவீச்சாளர்களிடம் பந்தைக் கொடுத்த சூர்யகுமார் யாதவின் திட்டம் பலன் கொடுக்கவில்லை. பிரசித் வீசிய 8-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரைப் பறக்கவிட்டு இந்திய ரசிகர்களை வாயடைக்கச் செய்தார் இங்லிஸ். 10 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 83 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா.

மைதானத்தின் அளவுகளை சரியாகப் பயன்படுத்திக்கொண்ட இங்லிஸ் 29 பந்துகளில் அரை சதத்தைக் கடந்தார். 12-வது ஓவரில் இங்லிஸின் அதிரடிப் புயலில் சிக்கிய பிஸ்னாய் இரு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியைக் கொடுத்தார்.

இன்றைய ஆட்டத்தில் இந்தியாவின் ஃபீல்டிங்கும் சுமார் ரகமாகவே இருந்தது. முதலில் பிஸ்னாயும் பின்னர் அர்ஷ்தீப் சிங்கும் ஸ்மித்தின் கேட்சைத் தவறவிட்டார்கள். 12-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்த ஆஸ்திரேலியா இங்லிஸின் அதிரடியால் 15-வது ஓவரில் 150 ரன்களைக் கடந்தது. பிஸ்னாயின் கடைசி ஓவரில் 3 சிக்ஸர்களை விளாசி அவரை வழியனுப்பி வைத்தார் இங்லிஸ்.

தடுமாற்றத்துடனேயே விளையாடிய ஸ்மித், 40 பந்துகளில் அரை சதம் அடித்தார். அடுத்தப் பந்தை ஸ்கூப் ஆடிய ஸ்மித், கீழே விழுந்த பின்னரும் ரன் எடுக்க ஓடி ரன் அவுட்டானார். இதனால் 66 பந்துகளில் 130 ரன்கள் குவித்த கூட்டணியைப் பிரித்தார்கள் பிரசித்தும் முகேஷ் குமாரும்.

அர்ஷ்தீப் வீசிய 17-வது ஓவரில் 4 பவுண்டரிகளை விளாசிய இங்லிஸ் 47 பந்துகளில் தனது முதல் டி20 சதத்தைப் பூர்த்தி செய்தார். இதன்மூலம், டி20யில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் எனும் ஆரோன் ஃபின்ஞ்சின் சாதனையை இங்லிஸ் சமன் செய்தார். 50 பந்துகளில் 11 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 110 ரன்களைக் குவித்த அவர், பிரசித் கிருஷ்ணாவின் குறைவேகப் பந்தில் ஜெயிஸ்வாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ஸ்டாய்னிஸின் எளிதான கேட்சைத் தவறவிட்டு மைதானத்தையே அமைதியாக்கினார் பிஸ்னாய். இன்றைய ஆட்டத்தில் அவர் தவறவிட்ட இரண்டாவது கேட்ச் இதுவாகும்.

ஃபீல்டர்களின் நிலையைக் கருத்தில்கொள்ளாமல் பந்துகளை வீசி தங்களது அனுபவமின்மையை வெளிப்படுத்தினார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். இதனால் 19-வது ஓவரில் 200 ரன்களைக் கடந்தது ஆஸ்திரேலியா. ஆனால், கடைசி ஓவரில் தனது யார்க்கர் அஸ்திரத்தைப் பயன்படுத்தி பவுண்டரி கொடுக்காமல் 5 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினார் முகேஷ் குமார். இதனால் இந்தியாவுக்கு 209 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

பிரம்மாண்டமான இலக்கு என்றாலும் ஆஸி. பந்துவீச்சாளர்களால் இந்திய பேட்டர்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை. குறைவேகம் தான் இந்த ஆடுகளத்துக்கு உகந்தது என்பதை உணர்ந்து முதல் ஓவரையே ஸ்டாய்னிஸுக்கு வழங்கினார் வேட். முதல் பந்தையே பவுண்டரிக்கு விரட்டிய ஜெயிஸ்வால் மூன்றாவது பந்தில் சிக்ஸரைப் பறக்கவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். ஆனால் அது வெகுநேரம் நீடிக்கவில்லை. 5-வது பந்தை டீப் மிட்விக்கெட்டில் அடித்துவிட்டு ரன் ஓடினார் ஜெயிஸ்வால்.

இரண்டாவது ரன்னுக்கு ஜெயிஸ்வால் முயற்சித்ததால் ருதுராஜும் பாதிதூரம் ஓடிவந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஜெயிஸ்வால் மறுக்கவே பந்தைச் சந்திக்காமலேயே ரன் அவுட்டாகி வெளியேறினார் ருதுராஜ். இந்த நெருக்கடியைப் பயன்படுத்தி இரண்டாவது ஓவரை மெய்டனாக வீசினார் பெஹ்ரன்டார்ஃப். 3-வது ஓவரின் முதலிரு பந்துகளில் பவுண்டரி மற்றும் சிக்ஸரை விளாசிய ஜெயிஸ்வால் மீண்டும் சிக்ஸருக்கு முயன்று கேட்ச் ஆனார்.

அபாட்டின் அறிமுக ஓவரிலேயே இஷான் ஒரு சிக்ஸரையும் சூர்யகுமார் ஒரு சிக்ஸர் மற்றும் பவுண்டரியை அடித்து கூட்டணிக்கு அஸ்திவாரமிட்டார்கள். பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து மாற்றி நெருக்கடி கொடுக்க திட்டமிட்டார் வேட். ஆனால் அதற்கு வாய்ப்பே கொடுக்காமல் அதிரடியை வெளிப்படுத்தினார்கள் சூர்யகுமாரும் இஷான் கிஷனும்.

தன்வீர் சங்கா வீசிய 9-வது ஓவரில் இரு சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை விளாசினார் இஷான் கிஷன். 10 ஓவர்கள் முடிவில் இரு விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்தது இந்தியா. 37 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்த இஷான் கிஷன், சங்காவின் சுழலில் விக்கெட்டைப் பறிகொடுத்தார். இந்தக் கூட்டணி 60 பந்துகளில் 112 ரன்களைக் குவித்தது.

மறுமுனையில் சூர்யகுமார் யாதவும் 29 பந்துகளில் தனது அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். திலக் வர்மாவுக்கு ஆஃப் பக்கம் ரூம் கொடுத்து வீசி வலை விரித்தார் சங்கா. இதனை திறமையாக எதிர்கொண்டு இரு பவுண்டரிகளை அடித்த திலக் வர்மா, உள்ளே வந்த பந்தை அடிக்க முயன்று ஸ்டாய்னிஸின் அட்டகாசமான கேட்சால் ஆட்டமிழந்தார். 30 பந்துகளில் 54 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் சூர்யகுமாருடன் கரம்கோர்த்தார் ரிங்கு சிங்.

ஸ்டாய்னிஸ் வீசிய 16-வது ஓவரில் மூன்று பவுண்டரிகள் பறந்தன. ஸ்டம்ப் லைனில் வீசாமல் வெளிப்புறமாக வீச முயன்று வைட்களை வாரி வழங்கினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். எல்லீஸ் வீசிய 17-வது ஓவரில் இரு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை சூர்யகுமார் அடிக்க 18 பந்துகளில் 20 ரன்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. எளிதாக எட்டகூடிய தூரத்தில் இலக்கு இருந்தபோது ஹார்டியின் பிரமாதமான கேட்சால் ஆட்டமிழந்தார் சூர்யகுமார் யாதவ்.

42 பந்துகளைச் சந்தித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் குவித்தார். கடைசி இரு ஓவர்களில் 14 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் 7 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்தினார் எல்லிஸ். கடைசி ஓவரில் இந்தியாவுக்கு 7 ரன்கள் தேவைப்பட்டன. அபாட் வீசிய அந்த ஓவரின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து வெற்றி வாய்ப்பைப் பிரகாசமாக்கினார் ரிங்கு சிங்.

ஆனால், அக்‌ஷர் படேல், பிஸ்னாய் மற்றும் அர்ஷ்தீப் ஆகியோர் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க ஆட்டம் பரபரப்பானது. கடைசிப் பந்தில் ஒரு ரன் தேவைப்பட்ட போது அபாட் அதனை நோ பாலாக வீச இந்தியா வெற்றிபெற்றது. இதனால் அந்தப் பந்தில் ரிங்கு சிங் அடித்த சிக்ஸர் கணக்கில் சேராமல் போய்விட்டது. இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரிலும் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

Comments