ஐபிஎல் 2024: ஜோ ரூட் விலகல்

ESPNcricinfo staff

ஜோ ரூட் © BCCI

2024 ஐபிஎல் போட்டியிலிருந்து இங்கிலாந்து பேட்டர் ஜோ ரூட் விலகியுள்ளார்.

2023 ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி ஐபிஎல்-லில் அறிமுகமானார்.

2024 ஐபிஎல் போட்டிக்கான ஏலம் டிசம்பர் 19-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கு முன்பு தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களை ஐபிஎல் அணி நிர்வாகங்கள் இன்று மாலைக்குள் சமர்ப்பிக்கவுள்ளன. இந்த நிலையில் ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக ரூட் அறிவித்துள்ளார். பென் ஸ்டோக்ஸைத் தொடர்ந்து விலகல் அறிவிப்பை வெளியிடும் இரண்டாவது இங்கிலாந்து வீரர் இவர்.

ராஜஸ்தான் ராயல்ஸ் இயக்குநர் குமார் சங்கக்காரா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

"தக்கவைக்கப்படும் வீரர்கள் குறித்த உரையாடலின்போது, 2024 ஐபிஎல் போட்டியிலிருந்து விலகும் முடிவை ஜோ ரூட் எங்களிடம் தெரிவித்தார். குறைவான நாள்கள் அணியில் இருந்தாலும்கூட, நிறைய நேர்மறையான தாக்கத்தை உண்டாக்கி சென்றுள்ளார். இவரது முடிவுக்கு நாங்கள் முழுமையாக மதிப்பளிக்கிறோம்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

2023 ஐபிஎல் ஏலத்தின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் ரூ. 1 கோடிக்குத் தேர்வு செய்யப்பட்டார். கடந்த ஐபிஎல் பருவத்தில் மூன்று ஆட்டங்களில் மட்டுமே அவர் விளையாடினார். இதில் ஜெய்ப்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருவுக்கு எதிரான ஆட்டத்தில் மட்டுமே இவருக்கு பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் 10 ரன்கள் எடுத்தார். இந்த ஐபிஎல் போட்டியில் விளையாடுவதைக் காட்டிலும், நிறைய தகவல்களைச் சேகரித்து டி20 கிரிக்கெட்டுக்கு தன்னைத் தகவமைத்துக் கொள்வதிலேயே அவர் கவனமாக இருந்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் மற்ற அணிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வீரர்களை மாற்றிக்கொள்வதற்கான வேலையை ஏற்கெனவே தொடங்கிவிட்டது. தேவ்தத் படிக்கல்லை விட்டுக்கொடுத்து லக்னௌ சூப்பர் ஜயன்ட்ஸிலிருந்து அவேஷ் கானை வாங்கியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ்.

Comments