சிஎஸ்கேவிலிருந்து ஸ்டோக்ஸ் விடுவிப்பு: முழுப் பட்டியல் இதோ!
2024 ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை விடுவித்துள்ளது.
எம்எஸ் தோனியைத் தக்கவைத்துள்ளதன் மூலம் அடுத்த ஐபிஎல்-லில் அவர் விளையாடுவது உறுதியாகியுள்ளது.
2024 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதற்கு முன்னதாக ஐபிஎல் அணிகள் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியலை இன்று மாலை சமர்ப்பித்தன.
ரச்சின் ரவீந்திரா, ஜெரால்ட் கூட்ஸியா, அஸ்மதுல்லா ஓமர்ஸாய் உள்ளிட்ட இளம் வீரர்கள் மற்றும் மிட்செல் ஸ்டார்க், டிராவிஸ் ஹெட், பேட் கம்மின்ஸ், கிறிஸ் வோக்ஸ் உள்ளிட்ட அனுபவமிக்க வீரர்கள் ஐபிஎல் ஏலத்துக்குப் பெயர் கொடுத்துள்ளார்கள். இவர்களை ஏலத்தில் எடுப்பதற்கு ஏதுவாக ஐபிஎல் எந்தெந்த வீரர்களை விடுவிக்க இருக்கிறார்கள், தக்கவைக்க இருக்கிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
ஐபிஎல் அணிகள் சமர்ப்பித்துள்ள வீரர்களின் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை அணியிலிருந்து இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல் போட்டியிலிருந்து விலகிய அம்பதி ராயுடு, டுவைன் ப்ரிடோரியஸ், கைல் ஜேமிசன், சிசன்டா மகாலா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.
தவிர, கே பக்த் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதியுடன் முகேஷ் சௌதரிக்குப் பதில் மாற்று வீரராக சேர்க்கப்பட்ட ஆகாஷ் சிங்கும் சென்னை அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ள வீரர்கள்:
எம்எஸ் தோனி (கேப்டன்), டெவான் கான்வே, ருதுராஜ் கெயிக்வாட், அஜிங்க்ய ரஹானே, ஷைக் ரஷீத், ரவீந்திர ஜடேஜா, மிட்செல் சான்ட்னர், மொயீன் அலி, ஷிவம் துபே, நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், தீபக் சஹார், மஹீஷ் தீக்ஷனா, முகேஷ் சௌதரி, பிரசாந்த் சோலங்கி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பாண்டே, மதீஷா பதிரனா.
விடுவித்துள்ள வீரர்கள்:
பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் ப்ரிடோரியஸ், கே பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன், சிசன்டா மகாலா.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் மீதமிருக்கும் தொகை: ரூ. 32.1 கோடி