விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: முக்கிய அம்சங்கள்

ESPNcricinfo staff

ஹார்திக் பாண்டியா, எம்எஸ் தோனி © AFP/Getty Images

2024 ஐபிஎல் போட்டிக்கான தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் இறுதிப் பட்டியலை ஐபிஎல் அணிகள் இன்று மாலை சமர்ப்பித்தன. சமீபத்தில் ஹார்திக் பாண்டியா மீண்டும் மும்பை அணிக்குத் திரும்புவதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், குஜராத் டைடன்ஸ் அணியால் அவர் தக்க வைக்கப்பட்டுள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ்:

பணிச்சுமை மற்றும் உடற்தகுதியை மேம்படுத்துவதற்காக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகுவதாக இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் ஏற்கெனவே அறிவித்திருந்த நிலையில், தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் அதிகாரபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐபிஎல்-ல் 6 ஆட்டங்களில் விளையாடி 5 விக்கெட்டுகளை வீழ்த்திய ஆகாஷ் சிங், டுவைன் ப்ரிடோரியஸ், கைல் ஜேமிசன், சிசன்டா மகாலா ஆகியோரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். தவிர, ஐபிஎல் 2024-ல் எம்எஸ் தோனி விளையாடுவது உறுதியாகியுள்ளது.

தில்லி கேபிடல்ஸ்:

ஐபிஎல்-லில் சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமைக்கு சொந்தக்காரரான மணீஷ் பாண்டே, தில்லி கேபிடல்ஸ் அணியால் விடுவிக்கப்பட்டுள்ளார். கடந்த பருவத்தில் 10 ஆட்டங்களில் விளையாடி160 ரன்களை மட்டுமே எடுத்தார் மணீஷ் பாண்டே.

பஞ்சாப் கிங்ஸ்:

ஐபிஎல் 2023 ஏலத்தில் ரூ. 9 கோடிக்கு பஞ்சாப் அணியால் தேர்வுச் செய்யப்பட்ட தமிழக வீரர் ஷாருக் கான் இம்முறை விடுவிக்கப்பட்டுள்ளார். உள்ளூர் போட்டிகளில் தமிழக அணிக்காக கலக்கிய ஷாருக் கான் ஐபிஎல்-ல் கடந்த 3 ஆண்டுகளில் 33 ஆட்டங்களில் பங்கேற்று 426 ரன்கள் எடுத்துள்ளார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டிம் சௌதி, உமேஷ் யாதவ், லாக்கி ஃபெர்குசன், ஷார்துல் தாக்குர், வங்கதேச அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் போன்றவர்களை விடுவித்துள்ளார்கள். ஷார்துல் தாக்குர் கடந்த ஐபிஎல்-லில் 11 ஆட்டங்களில் விளையாடி வெறும் 7 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தினார். கடந்த ஆண்டு ரூ. 1.5 கோடிக்கு கேகேஆர் அணியால் தேர்வு செய்யப்பட்ட ஷகிப் அல் ஹசன் தனிப்பட்ட காரணங்களால் இப்போட்டியில் பங்கேற்கவில்லை.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

சர்வதேச கிரிக்கெட்டில் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும், வளரும் நட்சத்திரம் ஹாரி புரூக்கை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் விடுவித்துள்ளது. கடந்த ஆண்டு ஏலத்தில் ரூ. 13.25 கோடிக்கு சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் தேர்வு செய்யப்பட்டார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இவர் ஒரு சதம் அடித்தார். இதன்பிறகு, விளையாடிய 10 ஆட்டங்களில் வெறும் 90 ரன்களை மட்டுமே அடித்தார்.

மும்பை இந்தியன்ஸ்:

மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை ஜோஃப்ரா ஆர்ச்சர், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸ், துவான் யான்சென், ஜை ரிச்சர்ட்சன், ரைலி மெரிடித், கிறிஸ் ஜோர்டன் ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த ஆண்டு ஐபிஎல்-ல் ஒரு சில ஆட்டங்களில் மட்டுமே விளையாடிய ஆர்ச்சர் அந்த அணியால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட ஓர் வீரர் ஆவார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

2021 ஐபிஎல்-லில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களில் முதலிடம் பிடித்த ஹர்ஷல் படேல், 2022 ஐபிஎல்-லில் 26 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹசரங்கா உள்ளிட்ட முக்கிய வீரர்களை ஆர்சிபி விடுவித்துள்ளது.

உலகக் கோப்பையுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற டேவிட் வில்லி, ஜோஷ் ஹேசில்வுட், வேய்ன் பார்னெல் போன்ற வெளிநாட்டு வீரர்களும் விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

2024 ஐபிஎல் போட்டிக்கான வீரர்கள் ஏலம் டிசம்பர் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில் விடுவிக்கப்பட்ட வீரர்கள் அனைவரும் இந்த ஏலத்தில் கலந்து கொள்வார்கள். இதுதவிர மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட் உள்ளிட்டோரும் ஏலத்தில் பங்கெடுக்கவுள்ளார்கள். உலகக் கோப்பையில் கலக்கிய ரச்சின் ரவீந்திரா, ஜெரால்டு கூட்ஸியா உள்ளிட்ட இளம் நட்சத்திரங்களும் ஐபிஎல் ஏலத்தில் அதிக கவனத்தை ஈர்க்கவுள்ளார்கள்.

Comments