நவம்பர் 27: பிலிப் ஹியூஸின் மரணம்

ESPNcricinfo staff

ஃபிலிப் ஹியூஸ் © Getty Images

கிரிக்கெட் வரலாற்றின் சோக நாள் இன்று. 2014-ல் இதே நாளில் தான் ஆஸ்திரேலியாவின் ஃபிலிப் ஹியூஸ் துரதிருஷ்டவசமாக மரணமடைந்தார்.

சிட்னியில் நடைபெற்ற உள்ளூர் ஆட்டத்தின்போது பவுன்சராக வந்த பந்தை ஹுக் ஷாட்டுக்கு முயன்றார் ஹியூஸ். ஆனால், பந்து அவருடைய தலையைத் தாக்கியது. இதனையடுத்து உடனடியாக அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அறுவை சிகிச்சை செய்யப்பட்ட போதும் நினைவு திரும்புவதற்கு முன்னரே அவரது உயிர் பிரிந்தது. ஹியூஸின் சொந்த ஊரான மேக்ஸ்வில்லியில் டிசம்பர் 3 அன்று இறுதிச் சடங்குகள் நடைபெற்றன. இதில் ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டார்கள்.

25 வயதில் மரணமடைந்த ஹியூஸின் உடலை ஆஸ்திரேலிய அணி வீரர்கள் கண்ணீருடன் சுமந்துசென்ற காட்சி உலக கிரிக்கெட் ரசிகர்களை உலுக்கியது.

கும்ப்ளேவின் மிகச்சிறந்த பந்துவீச்சு

1993-ல் இதே நாளில் தான் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி ஹீரோ கோப்பையைக் கைப்பற்றியது இந்தியா.

கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 225 ரன்கள் இலக்கைத் துரத்திய மேற்கிந்தியத் தீவுகள் கும்ப்ளேவின் சுழலில் சிக்கி 123 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த ஆட்டத்தில் 6.1 ஓவர்களை வீசிய கும்ப்ளே 12 ரன்களை மட்டும் கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அப்போது இதுவே ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் இந்திய வீரரின் சிறந்த பந்துவீச்சாகும்.

51 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்த மேற்கிந்தியத் தீவுகள் கும்ப்ளேவின் மந்திரச் சுழலின் காரணமாக அடுத்த 66 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளைப் பறிகொடுத்தது. இதனால் 10 ஓவர்களுக்கு முன்பே வெற்றியை ருசித்தது இந்தியா.

இந்த ஆட்டத்தில் ரோலண்ட் ஹோல்டர் போல்ட் ஆனபோது, அதனை கள நடுவர்களால் உறுதிபடுத்த முடியாததால் மூன்றாம் நடுவர் பரிசோதனைக்குப் பிறகு அவுட் கொடுத்தார். போல்டுக்கு மூன்றாம் நடுவர் அவுட் கொடுத்தது இதுவே முதல்முறையாகும்.

இந்த ஆட்டத்தைக் காண சுமார் ஒரு லட்சம் ரசிகர்கள் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் திரண்டார்கள். அன்றைய காலத்தில் இவ்வளவு ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெற்ற முதல் ஆட்டம் இதுதான்.

அஸ்வினின் சாதனை

2017-ல் இதே நாளில் தான் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வீரர் எனும் சாதனையைப் படைத்தார் அஸ்வின். தன்னுடைய 54 வது டெஸ்டில் இந்த சாதனையை நிகழ்த்தினார் அவர்.

நாக்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்டில் முதல் நாளிலேயே இலங்கை 205 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முரளி விஜய், புஜாரா, ரோஹித் சர்மா ஆகியோரின் சதம் மற்றும் கோலியின் இரட்டைச் சதத்தால் 6 விக்கெட் இழப்புக்கு 610 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது இந்தியா.

இரண்டாவது இன்னிங்ஸிலும் இலங்கையால் 166 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிபெற்றது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இன்றளவும் இலங்கையின் மிகப்பெரிய தோல்வி இதுதான்

இந்த டெஸ்டில் முதல் மற்றும் இரண்டாம் இன்னிங்ஸில் தலா 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் அஸ்வின்.

'சின்ன தல' ரெய்னா பிறந்தநாள்!

இந்தியாவின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா இன்று தனது 37-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்.

2005-ல் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் யுவ்ராஜ் சிங்கிற்கு காயம் ஏற்படவே, இந்திய அணிக்கு இடக்கை ஆட்டக்காரரின் தேவை ஏற்பட்டது. அசாத்தியமான ஃபீல்டிங் மற்றும் நடுவரிசை பேட்டிங்கில் கில்லியான யுவ்ராஜின் இடத்தை நிரப்புவது அத்தனை சுலபமில்லை தான். ஆனால், அந்த இடத்தை ரெய்னா கச்சிதமாக நிரப்பினார். இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்கிற அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பலின் திட்டத்தில் முக்கிய வீரராக அறியப்பட்டார்.

துரதிருஷ்டவசமாக காயம் ஏற்பட்டு சிறிதுகாலம் ஓய்வில் இருந்தார் ரெய்னா. ஐபிஎல் முதல் பருவத்தில் சென்னை அணிக்காக அவர் விளையாடிய விதம் இந்திய அணிக்கான கதவை அகலத் திறந்து வைத்தது. 2010-ல் டெஸ்டில் அறிமுகமான ரெய்னா கொழும்பில் இலங்கைக்கு எதிராகச் சதமடித்தார்.

2008-2011 வரையிலான காலக்கட்டம் சுரேஷ் ரெய்னாவின் புகழை உச்சிக்குக் கொண்டு சென்றது. குறிப்பாக 2011 உலகக் கோப்பையில் ஆஸி.க்கு எதிரான காலிறுதி மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் இந்தியாவின் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

குறைந்த ஓவர் போட்டிகளில் தொடர்ந்து ஜொலித்தாலும் டெஸ்டில் ரெய்னாவுக்கு வாய்ப்புகள் அரிதாகவே கிடைத்தன. இந்தியாவுக்காக 18 டெஸ்டுகள், 226 ஒருநாள் மற்றும் 78 டி20 ஆட்டங்களில் ரெய்னா விளையாடினார். 2013 சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்திய அணியிலும் இடம்பெற்றிருந்தார்.

2006-ல் இந்தியா தனது முதல் டி20 ஆட்டத்தில் விளையாடியபோது அணியில் அங்கமாக இருந்தார் ரெய்னா. சர்வதேச டி20 ஆட்டங்களில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் ரெய்னா தான். 2010-ல் ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டார் ரெய்னா. அப்போது அவருக்கு வயது 23 மட்டுமே.

ஐபிஎல்-லில் எம்எஸ் தோனியின் தளபதியாக இருந்த இவர், சென்னை சூப்பர் கிங்ஸ் 2010, 2011, 2018-ல் கோப்பைகளை வெல்லவும், ஒவ்வொரு முறை பிளே ஆஃபுக்குள் நுழையவும் முதுகெலும்பாக இருந்தார். இதனாலேயே சென்னை ரசிகர்கள் 'சின்ன தல' என ரெய்னாவை அழைக்கிறார்கள். சென்னை அணிக்குத் தடை விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளில் குஜராத் அணிக்குக் கேப்டனாகச் செயல்பட்டார்.

2020 ஆகஸ்ட் 15 அன்று யாருமே எதிர்பார்க்காத நிலையில் தோனி தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார். அந்த இன்ஸ்டாகிராம் பதிவு பரவுவதற்கு முன்னரே ரெய்னாவும் தனது ஓய்வு அறிவிப்பை வெளியிட்டு ரசிகர்களை கலங்கடித்தார். தோனியுடனான நட்பின் ஆழத்தை அழகாக வெளிப்படுத்தினார்.

ஓய்வுபெற்றாலும் சென்னை ரசிகர்களுக்கு அன்றும் இன்றும் என்றும் ரெய்னா சின்ன தல தான்.

Comments