ஐபிஎல்: குஜராத் அணிக்கு கேப்டன் ஆனார் ஷுப்மன் கில்
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கான கேப்டன் பொறுப்பு ஷுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஐபிஎல் 2024 போட்டிக்கான ஏலம் வரும் டிசம்பர் 19-ல் துபாயில் நடைபெறுகிறது. இதனையடுத்து, நேற்று ஒவ்வொரு அணியும் தங்களது தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டது.
முன்னதாகவே குஜராத் கேப்டன் ஹார்திக் பாண்டியாவை மும்பை அணி தேர்வு செய்யவிருப்பதாக தகவல் வெளியானது. ஆனால், பாண்டியாவை தக்கவைப்பதாக குஜராத் அணி அறிவித்தது. இருப்பினும், இந்தப் பட்டியல் வெளியான சிறிது நேரத்திலேயே ஹார்திக் பாண்டியாவை மும்பையும் கேம்ரூன் கிரீனை பெங்களூரு அணியும் தேர்வு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
குஜராத்தின் கேப்டனான ஹார்திக் பாண்டியா மும்பைக்குத் தேர்வானதால் குஜராத்தின் கேப்டன் பொறுப்பு யாருக்கு வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஷுப்மன் கில்லிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஷுப்மன் கில் பேசியதாவது: குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்பதில் நான் மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இதுபோன்ற சிறந்த அணியை வழிநடத்த என் மீது நம்பிக்கை வைத்ததற்காக அணி நிர்வாகத்திற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். கடந்த இரு பருவங்களிலும் எங்களது அணி சிறப்பாகச் செயல்பட்டது. கேப்டனாக அணியை வழிநடத்தி திறமையை மேலும் வெளிப்படுத்த ஆவலுடன் உள்ளேன் என்றார்.
கடந்த இரு பருவங்களில் குஜராத் அணிக்காக விளையாடிய கில் 2022-ல் 16 ஆட்டங்களில் பங்கேற்று 4 அரை சதங்களுடன் 483 ரன்களைக் குவித்தார். இந்த ஆண்டு 17 ஆட்டங்களில் விளையாடிய அவர் 890 ரன்களைக் குவித்து அதிக ரன் எடுத்தவர்களின் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதில் 3 சதங்கள் மற்றும் 4 அரை சதங்கள் அடக்கம்.