சிஎஸ்கே அணியிலிருந்து ஆகாஷ் சிங் விடுவிக்கப்பட்டது ஏன்?
2024 ஐபிஎல் போட்டிக்கான ஏலத்துக்கு முன்பு தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஐபிஎல் அணிகள் ஞாயிற்றுக்கிழமை மாலை வெளியிட்டன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பென் ஸ்டோக்ஸ், அம்பதி ராயுடு, டுவைன் ப்ரிடோரியஸ், கே பகத் வர்மா, சுப்ரன்ஷு சேனாபதி, ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன், சிசன்டா மகாலா ஆகிய 8 வீரர்களை விடுவித்துள்ளது.
அம்பதி ராயுடு ஓய்வு பெற்றதால் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆனால் இளம் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் விடுவிக்கப்பட்டது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
2022 ஐபிஎல் போட்டியின்போது சென்னை சூப்பர் கிங்ஸின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் தீபக் சஹார் காயமடைந்தார். இதனால், 2022 ஐபிஎல் போட்டியில் தீபக் சஹார் விளையாடவில்லை. பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் முக்கியப் பந்துவீச்சாளர் என்பதால் அவருடைய இடத்தை நிரப்புவது கடினமானதாகப் பார்க்கப்பட்டது.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் முகேஷ் சௌத்ரியைக் களமிறக்கியது. இவர் ரூ. 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸால் ஏலத்தில் தேர்வு செய்யப்பட்டவர். 2022 ஐபிஎல் போட்டியில் 13 ஆட்டங்களில் விளையாடிய முகேஷ் சௌத்ரி 16 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதில் 11 விக்கெட்டுகள் பவர்பிளேயில் எடுக்கப்பட்ட விக்கெட்டுகள். அந்தப் பருவத்தில் பவர்பிளேயில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர்களில் ஷமியுடன் முதலிடத்தைப் பகிர்ந்துகொண்டார்.
2023 ஐபிஎல்லில் தீபக் சஹாரும் அணிக்குத் திரும்பினார். முகேஷ் சௌத்ரியும் அணியில் இருந்தார். இருவரும் பவர்பிளேயில் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடியவர்கள் என்பதால் சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு மீது மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், 2023 ஐபிஎல்லில் முகேஷ் சௌத்ரி காயமடைந்தார். அவருக்குப் பதில் மாற்று வீரரைத் தேர்வு செய்யும் பணியில் சிஎஸ்கே நிர்வாகம் இறங்கியது.
அப்போது தீபக் சஹார் விடுத்த அழைப்பின்பேரில் சிஎஸ்கே நடத்திய தேர்வில் பங்கெடுத்தார் ராஜஸ்தானைச் சேர்ந்த ஆகாஷ் சிங். பயிற்சி ஆட்டத்தில் விளையாடினார். சென்னை அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங்கைக் கவர்ந்ததால், முகேஷ் சௌத்ரிக்கு மாற்று வீரருக்கான தேடலில் அதே ரூ. 20 லட்சத்துக்கு ஆகாஷ் சிங் தேர்வானார்.
2023 ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக 6 ஆட்டங்களில் விளையாடிய ஆகாஷ் சிங் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். விக்கெட்டுகள் மட்டுமின்றி மணிக்கு 145 கி.மீ. வேகம் வரை வீசுவது, கூடுதல் பவுன்ஸ் என இடக்கை வேகப்பந்துவீச்சுக்கு உரித்தான திறன்களைக் கொண்டிருந்தார். இதனால் அடுத்த ஐபிஎல் போட்டியில் இவர் மீதும் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தார்கள்.
இந்த நிலையில்தான் சென்னை அணி நிர்வாகம் இவரை விடுவித்துள்ளது. காரணம், மிக எளிமையானது.
முகேஷ் சௌத்ரிக்கான மாற்று வீரராகவே கடந்த ஐபிஎல் பருவத்தில் விளையாடினார் ஆகாஷ் சிங். எனவே, இந்த வருட ஐபிஎல் போட்டிக்கு முகேஷ் செளத்ரியை மறக்காமல் தேர்வு செய்துவிட்டது சிஎஸ்கே. அதாவது அவர் தக்கவைக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக வேறுவழியின்றி ஆகாஷ் சிங்கை விடுவித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம்.
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு விளையாடுவதற்கு முன்பாக 2020-ல் 19 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடியிருந்தார் ஆகாஷ் சிங். ஐபிஎல்லில் ராஜஸ்தான் ராயல்ஸிலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளிலும் ராஜஸ்தான் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, ராஜஸ்தானிலிருந்து நாகாலாந்துக்கு அணி மாறினார். ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியாலும் இவர் தேர்வு செய்யப்படாமல் இருந்தார். இந்த விரக்தியிலிருந்த ஆகாஷ் சிங்கை சென்னை அணி தேர்வு செய்ததன் மூலம் அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் விடிவு காலம் பிறந்தது.
ஆகாஷ் சிங்கின் திறமையை தோனியோ ஃபிளெமிங்கோ அறியாமல் இருக்க மாட்டார்கள். எனவே டிசம்பர் 19-ம் தேதி நடைபெறவுள்ள ஐபிஎல் ஏலத்தின்போது அவரை சிஎஸ்கே மீண்டும் தேர்வு செய்யும் என எதிர்பார்க்கலாம்.