டி20 தொடரைக் கைப்பற்றுமா இந்தியாவின் இளம் படை?

ESPNcricinfo staff

சூர்யகுமார் யாதவ் மற்றும் ரிங்கு சிங் © Pankaj Nangia/Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 ஆட்டம் கெளஹாத்தியில் நாளை நடைபெறுகிறது. கடந்த இரு ஆட்டங்களிலும் வெற்றிபெற்று 2-0 என முன்னிலை வகிக்கும் இந்தியா இந்த ஆட்டத்திலும் வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இருக்கிறது.

இளம் வீரர்களைக் கொண்ட இந்த இந்திய அணியில் பேட்டர்கள் ஜொலிக்கின்றனர். அதிரடித் தொடக்கத்தை ஜெயிஸ்வால் கவனித்துக்கொள்கிறார். இஷான் கிஷன் மற்றும் சூர்யகுமார் யாதவ் நடுவரிசையில் ரன் குவிப்புக்கான பொறுப்பை சிறப்பாகவே செய்து வருகிறார்கள். ரிங்கு சிங் கடைசி நேர வாண வேடிக்கைகளை நிகழ்த்துவதால் பேட்டிங்கில் இந்தியா வலுவாகவே உள்ளது.

இந்த அதிரடியால் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் 208 ரன்களை வெற்றிகரமாகத் துரத்திய இந்தியா, திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் 235 ரன்களைக் குவித்தது.

இஷான் கிஷன் இரு ஆட்டங்களிலும் அரை சதம் அடித்து நடுவரிசையில் அணியின் நம்பிக்கையாகத் திகழ்கிறார். முதல் ஆட்டத்தில் 14 பந்துகளில் 22 ரன்கள் எடுத்து வெற்றியை உறுதி செய்த ரிங்கு சிங், இரண்டாவது ஆட்டத்தில் வெறும் 9 பந்துகளில் 31 ரன்கள் குவித்தார். இதனால், இந்திய அணியின் ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது.

பந்துவீச்சில் தான் இந்தியாவின் பலவீனம் வெளிப்படுகிறது. குறிப்பாக வேகப்பந்துவீச்சாளர்கள் லைன் மற்றும் லெங்தை தவறவிட்டு ரன்களை வாரிக்கொடுக்கிறார்கள். பிரசித் கிருஷ்ணாவின் வேகத்தை ஆஸி. பேட்டர்கள் நன்கு பயன்படுத்திக்கொள்கிறார்கள். இருப்பினும், ஈரப்பதம் அதிகமிருந்த திருவனந்தபுரத்தில் யார்க்கர் மற்றும் முழு நீளத்தில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்கள் இந்தியப் பந்துவீச்சாளர்கள். கெளஹாத்தியும் பேட்டர்களுக்குச் சாதகமான மைதானம் என்பதால் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நாளை இன்னொரு சவால் காத்திருக்கிறது.

சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை பிஸ்னாய் கடந்த ஆட்டத்தில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அஸ்திவாரமிட்டார். ஜடேஜாவின் இடத்தை நிரப்பும் அக்‌ஷர் படேல் ஒருபுறமும் பிஸ்னாய் மற்றொருபுறமும் பந்துவீசி ஆஸ்திரேலியாவுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள்.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரையில் பேட்டிங்கில் கூட்டணி அமைக்க முடியாமல் திணறுகிறார்கள். முதல் ஆட்டத்தில் ஸ்மித் அரை சதம் அடிக்க இங்லிஷ் சதம் அடித்தாலும் நடுவரிசையில் ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை. இரண்டாவது ஆட்டத்தில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸி.யில் டிம் டேவிட் - ஸ்டாய்னிஸ் இணையால் மட்டுமே நிலைக்க முடிந்தது.

ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தத் தவறுகிறது ஆஸ்திரேலியாவின் வேகப்பந்துவீச்சுப்படை. குறிப்பாக ஷாட் அபாட் மற்றும் நேதன் எல்லிஸ் இணைந்து முதல் ஆட்டத்தில் 87 ரன்களையும் இரண்டாவது ஆட்டத்தில் 101 ரன்களையும் விட்டுக் கொடுத்தார்கள்.

உத்தேச அணிகள்

இந்தியா: யஷஸ்வி ஜெயிஸ்வால், ருதுராஜ் கெயிக்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங், பிரசித் கிருஷ்ணா, அக்‌ஷர் படேல், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்.

ஆஸ்திரேலியா: டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்லீஷ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட், நேதன் எல்லிஸ், ஷான் அபாட், ஆடம் ஸாம்பா, தன்வீர் சங்கா.

கெளஹாத்தியில் இதுவரை 3 சர்வதேச ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இந்தியா ஒருமுறை வெற்றியும் ஒருமுறை தோல்வியும் பெற்றுள்ளது. கடைசியாக 2017-ல் கடைசியாக இந்தியா - ஆஸ்திரேலியா இங்கே மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 118 ரன்களுக்குச் சுருண்டது. 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து இந்த இலக்கை எட்டியது ஆஸ்திரேலியா.

கடைசியாக 2022-ல் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்த மைதானத்தில் 237 ரன்கள் குவித்தது இந்தியா. பதிலுக்கு தென்னாப்பிரிக்கா 221 ரன்களை எடுத்து தோல்வியடைந்தது. இங்கே முதலில் பேட்டிங் செய்த அணி 3 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 2 முறையும் வெற்றிபெற்றுள்ளன.

Comments