மேக்ஸ்வெல்லின் ருத்ரதாண்டவம்: முதல் வெற்றியை ருசித்த ஆஸி.

ESPNcricinfo staff

மேக்ஸ்வெல் © BCCI

உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தைக் கண்முன்னே கொண்டுவந்த மேக்ஸ்வெல் இந்த ஆட்டத்தை தனியொரு வீரராகப் போராடி வென்றுகொடுத்துள்ளார். இதன்மூலம் இந்தத் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது ஆஸ்திரேலியா.

கெளஹாத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்துவீச்சைத் தேர்வு செய்தது. ஷார்ட், அபாட், ஸாம்பா ஆகியோருக்குப் பதிலாக பெஹ்ரன்டார்ஃப், டிராவிஸ் ஹெட் மற்றும் ரிச்சர்ட்சன் சேர்க்கப்பட்டார்கள். முகேஷ் குமாருக்குப் பதிலாக அவேஷ் கானுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

ஆடுகளத்தில் தொடக்கத்தில் நல்ல ஸ்விங் கிடைத்தது. இதனைப் பயன்படுத்திக்கொள்ள ஆஸி. பந்துவீச்சாளர்கள் முயன்றாலும் வைட்களை வாரிக் கொடுத்தார்கள். உள்ளே, வெளியே என பந்து ஸ்விங் ஆனதால் இறங்கி வந்து அடிக்க முயன்ற ஜெயிஸ்வால் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து 6 ரன்களில் வெளியேறினார்.

தடுமாற்றத்துடன் தொடங்கிய இஷான் கிஷனும் ரிச்சர்ட்சனின் ஷார்ட் பந்தில் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டைப் பறிகொடுத்தார். 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில் சூர்யகுமார் யாதவ் மற்றும் ருதுராஜ் கூட்டணி அமைக்க முயன்றார்கள். ஆடுகளத்தில் ஸ்விங்கின் ஆதிக்கம் குறையத் தொடங்க எல்லீஸ் பந்துவீச வந்தார்.

அந்த ஓவரில் தனது வாடிக்கையான ஸ்கூப் ஷாட் மூலம் இரண்டு சிக்ஸர்களைப் பறக்கவிட்டார் சூர்யகுமார் யாதவ். 6 ஓவர்கள் முடிவில் 43 ரன்கள் எடுத்தது இந்தியா. தன்வீர் சங்கா, ஹார்டி வீசிய 7,8-வது ஓவர்களில் தலா இரண்டு பவுண்டரிகளை அடித்து ஸ்கோரை உயர்த்தினார் சூர்யகுமார்.

தொடர்ந்து ஸ்கூப் ஷாட்டுக்கு முயன்ற சூர்யகுமாருக்கு குறைவேக ஷார்ட் ஆஃப் லெங்தில் வீசினார் ஹார்டி. 39 ரன்கள் எடுத்த சூர்யகுமார் குறைவேகப் பந்தையும் ஸ்கூப்புக்கு முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். அதன்பிறகு ருதுராஜுடன் ஜோடி சேர்ந்தார் திலக் வர்மா.

ரிச்சர்ட்சன் வீசிய 12-வது ஓவரில் திலக் வர்மா இரு பவுண்டரிகளையும் ருதுராஜ் ஒரு பவுண்டரியும் விளாசி அதிரடிக்கான அஸ்திவாரத்தை அமைத்தனர். நேர்த்தியான ஷாட்களின் மூலமாக ரன்களை சேகரித்த ருதுராஜ் 32 பந்துகளில் அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். 17-வது ஓவரில் தான் 150 ரன்களைக் கடந்தது இந்தியா.

ஹார்டி வீசிய 18-வது ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியை ருதுராஜ் பறக்கவிட ஸ்கோர் கிடுகிடுவென எகிறியது. இந்த ஆட்டத்தில் 64 ரன்களை கொடுத்ததன் மூலம் ஒரு டி20 ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த ஆஸ்திரேலிய வீரர் எனும் ஆண்ட்ரூ டையின் மோசமான சாதனையை சமன் செய்தார் ஹார்டி.

ரிச்சர்ட்சனுக்கு ஒரு ஓவர் மீதமிருந்த நிலையில் கடைசி ஓவரை மேக்ஸ்வெல்லிடம் கொடுத்தார் வேட். அந்த முடிவு அவருக்கு அதிர்ச்சி கொடுக்கும்படியாகவே இருந்தது. முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து டி20 போட்டிகளில் தனது முதல் சதத்தைப் பூர்த்தி செய்தார் ருதுராஜ். 32 பந்துகளில் அரை சதம் அடித்த ருதுராஜ் 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். மேலும், டி20யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்த முதல் இந்தியர் எனும் பெருமையையும் பெற்றார்.

அதே ஓவரில் மேலும் இரண்டு பவுண்டரிகள், இரண்டு சிக்ஸர்கள் என மொத்தம் 30 ரன்கள் கிடைத்தது இந்தியாவுக்கு. இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 223 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. முதன்முறையாக தொடர்ச்சியாக 3 டி20 ஆட்டங்களில் 200க்கும் மேற்பட்ட ரன்களை எடுத்து சாதனை படைத்தது இந்திய அணி. கடைசிவரை ஆட்டமிழக்காமல் ருதுராஜ் 123 ரன்களும் திலக் வர்மா 31 ரன்களும் எடுத்தார்கள். இவர்களது கூட்டணி 59 பந்துகளில் 141 ரன்களைக் குவித்தது.

அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகளை அடித்து ரன் குவிப்பைத் தொடங்கினார் ஹெட். பிரசித் கிருஷ்ணாவின் முதல் ஓவரில் 4 பவுண்டரிகள் பறந்தன. இதனால், தனது துருப்புச்சீட்டான பிஸ்னாயிடம் பந்தைக் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ்.

அந்த ஓவரில் ஹார்டி பவுண்டரி பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இந்த அதிரடியால் 3 ஓவர்களிலேயே 40 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா. 16 ரன்கள் எடுத்த ஹார்டி, அர்ஷ்தீப் வீசிய 6-வது ஓவரில் இறங்கி வந்து அடிக்க முயன்று கீப்பரிடம் கேட்ச் ஆனார். 18 பந்துகளில் 35 ரன்கள் எடுத்த ஹெட், அவேஷ் கானின் குறைவேகப் பந்தில் பிஸ்னாயிடம் கேட்ச் ஆனார். அடுத்த ஓவரில் இங்லீஷை போல்ட் செய்தார் பிஸ்னாய்.

குறைவேகப் பந்துகளே கைகொடுத்த நிலையில் பிரசித் கிருஷ்ணா வேகத்தை சமரசம் செய்யாமல் வீச, இதனை நன்கு பயன்படுத்திக்கொண்டார் மேக்ஸ்வெல். 8-வது ஓவரில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்களை மேக்ஸ்வெல் விளாசித் தள்ளினார். அக்‌ஷர் படேல் ஸ்டம்ப் லைனில் பந்துவீசி நெருக்கடி கொடுத்தார்.

10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 105 ரன்கள் எடுத்தது ஆஸ்திரேலியா. ஸ்டாய்னிஸ் - மேக்ஸ்வெல் இணை 60 ரன்கள் எடுத்த நிலையில் 13-வது ஓவரில் இந்தக் கூட்டணியைப் பிரித்தார் அக்‌ஷர் படேல்.

டிம் டேவிட்டை ரன் ஏதும் எடுக்காமல் ரவி பிஸ்னாய் வீழ்த்த ஆட்டம் இந்தியா பக்கம் திரும்பியது. ஆனால், மேக்ஸ்வெல் அதிரடிக்குத் தன்னை தயார்படுத்திக்கொண்டார். 16 மற்றும் 17-வது ஓவரில் 29 ரன்கள் கிடைத்தது ஆஸ்திரேலியாவுக்கு. 18-வது ஓவரை அட்டகாசமாக வீசி 6 ரன்களுக்குக் கட்டுப்படுத்தினார் பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியாவுக்கு கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டன. அதுவரை பொறுமையாக விளையாடிய வேட், அக்‌ஷர் வீசிய 19-வது ஓவரை பவுண்டரியுடன் தொடங்கினார். வேட் பந்தை எதிர்கொண்ட போது ஸ்டம்பிங்கிற்கு இஷான் கிஷன் ரெவ்யூ செய்தார். கையுறை ஸ்டம்புகளுக்கு பின்புறமாக இல்லாததால் நோ பால் கொடுக்கப்பட்டது. அடுத்தப் பந்திலேயே சிக்ஸர் அடித்து ரசிர்களை அமைதியாக்கினார் வேட். கடைசிப் பந்தை வேட் அடிக்க முயன்றாலும் பந்து சிக்கவில்லை. இஷானாலும் பிடிக்க முடியாததால் பவுண்டரிக்குச் சென்றது பந்து.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 21 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் பிரசித் கிருஷ்ணாவிடம் பொறுப்பை ஒப்படைத்தார் சூர்யகுமார் யாதவ். குறைவான ஓவர் ரேட் காரணமாக கடைசி ஓவரில் வெளிவட்டத்தில் 4 வீரர்களே அனுமதிக்கப்பட்டனர். ஆஃப் பக்கம் ஃபீல்டர்கள் இருந்த நிலையில் லாங் லெக்கில் பவுண்டரி அடித்து ஓவரைத் தொடங்கினார் வேட்.

அடுத்த குறைவேகப் பந்தில் ஒரு ரன் எடுத்து ஸ்டிரைக்கை மேக்ஸ்வெல்லிடம் ஒப்படைத்தார் வேட். 3-வது பந்தை எதிர்கொண்ட மேக்ஸ்வெல் டீப் கவரில் சிக்ஸர் அடிக்க, 3 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டன. அடுத்தடுத்து இரு பவுண்டரிகளை அடித்த மேக்ஸ்வெல் 47 பந்துகளில் சதம் அடித்தார். இதன்மூலம் டி20யில் அதிவேகமாக சதம் அடித்த ஆஸ்திரேலிய வீரர் எனும் ஆரோன் ஃபிஞ்சின் சாதனையை சமன் செய்தார்.

கடைசிப் பந்தில் இரண்டு ரன்கள் தேவைப்பட்ட நிலையில் நேராக பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்தார் மேக்ஸ்வெல். இந்த ஆட்டத்துக்குப் பிறகு மேக்ஸ்வெல் தாயகம் திரும்புகிறார். மீண்டும் மதிப்புமிக்க இன்னிங்ஸை விளையாடி ஆட்டநாயகன் விருதுடன் இந்தியாவிலிருந்து புறப்படுகிறார் அவர்.

இந்த ஆட்டத்தில் பிரசித் கிருஷ்ணா 68 ரன்களைக் கொடுத்தார். இதன்மூலம் டி20யில் ஓர் ஆட்டத்தில் அதிக ரன்களை விட்டுக்கொடுத்த இந்திய வீரர் எனும் மோசமான சாதனையைப் படைத்தார். 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலையில் உள்ளது.

Comments