அணிக்குத் திரும்பிய ஷ்ரேயஸ், தீபக் சஹார்: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா

ESPNcricinfo staff

மேத்யூ வேட், சூர்யகுமார் யாதவ் © Sportzpics

முதலிரு ஆட்டங்களில் வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் களமிறங்கிய இந்திய அணியிடம், மூன்றாவது டி20யில் மேக்ஸ்வெலின் அதிரடிக்கு பதில் இல்லை. ராய்பூரில் நடைபெறவுள்ள நான்காவது ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் ஆஸ்திரேலிய அணி இருக்கிறது.

ஆஸ்திரேலிய அணியில் கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், ஜோஷ் இங்லிஸ் ஆகியோர் ஆஸ்திரேலியா திரும்பிவிட்டார்கள். ஸ்டீவ் ஸ்மித்தும் ஏற்கெனவே நாடு திரும்பிவிட்டார். இதன்மூலம், இளம் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இளம் இந்திய அணி. பந்துவீச்சைப் பொறுத்தவரை ஆஸ்திரேலிய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. விளையாடிய இரு ஆட்டங்களில் ஆதிக்கம் செலுத்திய ஜேசன் பெஹ்ரன்டார்ஃப் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக இருப்பார். இந்தத் தொடரில் 8 ஓவர்களில் 37 ரன்கள் மட்டுமே கொடுத்துள்ளார். இந்தத் தொடரில் இரு மெய்டன்களை வீசியவரும் இவர்தான்.

இந்திய அணியில் ஷ்ரேயஸ் ஐயர் துணை கேப்டன் பொறுப்பை ஏற்கவுள்ளார். இவர் யாருடைய இடத்தில் விளையாடவுள்ளார் என்பதுதான் பெரிய கேள்வியாக உள்ளது. டி20யில் மூன்றாவது வரிசையில்தான் ஷ்ரேயஸ் நிறைய ஆட்டங்களில் விளையாடியிருக்கிறார். இந்தத் தொடரில் கீப்பராக இருக்கும் இஷான் கிஷன் மூன்றாவது வரிசையில் விளையாடுகிறார். இவர்களைத் தொடர்ந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ரிங்கு சிங் உள்ளார்கள். திலக் வர்மாவுக்குப் பதில் களமிறங்கினார். ஷ்ரேயஸ் 4-வது வரிசையில் விளையாடி, சூர்யா ஒரு இடம் கீழே இறங்கி களமிறங்க நேரிடும்.

திருமணம் காரணமாக மூன்றாவது டி20யில் விளையாடாத முகேஷ் குமார் மற்றும் கடைசி இரு டி20 ஆட்டங்களுக்கு மட்டும் சேர்க்கப்பட்ட தீபக் சஹார் ஆகியோர் ராய்பூரில் இன்று பயிற்சியில் ஈடுபட்டார்கள். பிரசித் கிருஷ்ணா இந்தத் தொடரில் 12 ஓவர்கள் வீசி 13.25 எகானமியில் 159 ரன்கள் கொடுத்துள்ளார்.. இவருக்குப் பதில் வேறு எவரேனும் களமிறக்கப்படலாம். இது தவிர இந்திய அணியில் வேறு மாற்றங்கள் இருக்காது.

இந்தத் தொடரின் முதல் 3 ஆட்டங்களிலும் இந்திய அணி 200 ரன்களுக்கு மேல் குவித்துள்ளது. இரு முறை 200 ரன்களுக்கு மேல் கடந்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவது ஆட்டத்தில் மட்டும் 191 ரன்கள் எடுத்தது.

ராய்பூரை ஆடுகளத்தைப் பொறுத்தவரை ஒரேயொரு சர்வதேச ஆட்டம் மட்டுமே நடைபெற்றுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒருநாள் ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி, அந்த அணியை 108 ரன்களுக்குச் சுருட்டி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிக ரன்கள் அடிக்கப்படும் தொடராக இருப்பதால் பந்துவீச்சாளர்களுக்கு சவாலானதாகவே நாளைய ஆட்டமும் அமையவிருக்கிறது.

Comments