விஜய் ஹசாரே கோப்பை: தமிழகத்துக்கு முதல் தோல்வி
விஜய் ஹசாரே கோப்பைப் போட்டியில் பஞ்சாபுக்கு எதிரான ஆட்டத்தில் தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
டாஸ் வென்ற தமிழக அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. பஞ்சாபில் கேப்டன் மந்தீப் சிங், கீப்பர் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அரை சதங்கள் அடிக்க அந்த அணி 251 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.
தமிழகத்தில் அதிகபட்சமாக பாபா அபராஜித் 3 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர், வருண் சக்ரவர்த்தி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், சந்தீப் வாரியர், நடராஜன், சாய் சுதர்சன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்கள்.
தமிழகத்தில் கேப்டன் தினேஷ் கார்த்திக் மட்டுமே போராடினார். 9-வது விக்கெட்டாக ஆட்டமிழந்த கார்த்திக் 82 பந்துகளில் 13 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் உள்பட 93 ரன்கள் விளாசினார். இவருக்கு அடுத்தபடியாக பாபா இந்திரஜித் 25 ரன்கள் எடுத்தார்.
இதனால், 34.2 ஓவர்களில் 175 ரன்களுக்குச் சுருண்ட தமிழக அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. பஞ்சாபில் சித்தார்த் கௌல் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி முதல் தோல்வியைச் சந்தித்துள்ள தமிழக அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. முதலிரு இடங்களில் உள்ள பெங்கால் மற்றும் மத்தியப் பிரதேசமும் தலா 12 புள்ளிகள் பெற்றுள்ளன. எனினும், நெட் ரன் ரேட் அடிப்படையில் தமிழக அணி மூன்றாவது இடத்தில் உள்ளது.
தமிழக அணி தனது அடுத்த ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள மத்தியப் பிரதேசத்தை டிசம்பர் 3-ம் தேதி எதிர்கொள்கிறது.