இந்திய அணியில் அடுத்த தலைமுறை தமிழக வீரர்கள்

ESPNcricinfo staff

சாய் சுதர்சன் © Asian Cricket Council

சிஎஸ்கே அணியில் இல்லாவிட்டால் என்ன, இந்திய அணியிலேயே தமிழக வீரர்களுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கி விட்டன.

2011 உலகக் கோப்பையிலிருந்து குறைந்தபட்சம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வீரராவது இந்திய அணியில் இடம்பெற்று வந்தார்கள்.

2023 உலகக் கோப்பையில் தினேஷ் கார்த்திக், ரவிச்சந்திரன் அஸ்வின், வாஷிங்டன் சுந்தர் என எந்தவொரு முன்னணி தமிழக வீரர்களுக்கும் இடம் இல்லாமல் இருந்தது. தமிழக வீரர்கள் இல்லாத உலகக் கோப்பைக்கான இந்திய அணி என்கிற வருத்தம் தமிழர்கள் மத்தியில் இருந்தது. நடராஜனும் இந்த வருத்தத்தை ஒரு செய்தியாளர் சந்திப்பில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்த நேரத்தில் அக்‌ஷர் படேலுக்குதான் நன்றி கூற வேண்டும். ஆசியக் கோப்பை போட்டியில் அவருக்குக் காயம் ஏற்பட ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரிலிருந்து விலகினார். ஒருவேளை அக்‌ஷர் படேல் குணமடையாவிட்டால், அவரது இடத்தில் விளையாடுவதற்கு அடுத்த தேர்வாக இருந்தது அஸ்வின். அவரை அழைத்து தயார்படுத்தியது இந்திய அணி நிர்வாகம். ஆஸ்திரேலியாவுடனான ஒருநாள் தொடரிலும் அஸ்வின் சிறப்பாகப் பந்துவீசி அனைவரது கவனத்தையும் ஈர்த்து இந்திய அணி நிர்வாகத்துக்கு அழுத்தம் கொடுத்தார்.

அக்‌ஷர் படேல் காயத்திலிருந்து குணமடைய நேரம் எடுக்கும் என தேசிய கிரிக்கெட் அகாடெமியிலிருந்து தகவல், அறிவிக்கப்பட, உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் அக்‌ஷர் படேலுக்குப் பதில் அஸ்வின் சேர்க்கப்பட்டார். சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அஸ்வின் விளையாடவும் செய்தார்.

தினேஷ் கார்த்திக் மற்றும் அஸ்வின் 35 வயதைக் கடந்துவிட்டதால் இந்திய அணியின் பார்வை தமிழகத்தின் அடுத்த தலைமுறை வீரர்கள் மீது விழுமா என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. வாஷிங்டன் சுந்தர் இந்திய அணிக்கான திட்டத்தில் எப்போதும் இருந்துகொண்டேதான் இருக்கிறார். எனினும், பந்துவீச்சைத் தாண்டி முழுநேர பேட்டராக தமிழக வீரர் எவரேனும் மீது வெளிச்சம் பாயுமா என்ற எதிர்பார்ப்பு இருந்துகொண்டே இருந்தது. அண்மையில் 19 வயதுக்குள்பட்டோருக்கான ஆசியக் கோப்பை போட்டிக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது. மாற்று வீரர்கள் உள்பட 18 வீரர்கள் அடங்கிய இந்த அணியில் ஒரு தமிழக வீரர்கூட இடம்பெறவில்லை. இது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தாலும்கூட, மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு அறிவிப்பு பிசிசிஐயிடமிருந்து வெள்ளிக்கிழமை வெளியானது.

தென்னாப்பிரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. வழக்கம்போல அஸ்வின், டெஸ்ட் அணியில் இடம்பிடித்தார். ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தரும் இருந்தார்.

இதைவிட முக்கியமான அறிவிப்பாக இருப்பது சாய் சுதர்சன் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். உலகக் கோப்பைக்குப் பிறகு என்றைக்கும் நீண்டகால திட்டங்களை மனதில்கொண்டு புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும். இப்படியான வாய்ப்பு சாய் சுதர்சனுக்குக் கிடைத்துள்ளது. இந்த அணியில் தொடக்க பேட்டர்களாக ருதுராஜ் கெயிக்வாட் மற்றும் சாய் சுதர்சன் மட்டுமே இருப்பதால், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் அறிமுகமாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. டெஸ்ட் அணியில் இடம்பெற்றுள்ள அஸ்வினும், சாய் சுதர்சன் தேர்வானதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார்.

தென்னாப்பிரிக்க பயணத்தில் இந்தியா ஏ அணியும் இடம்பெற்றுள்ளது. இந்தியா ஏ அணி இரு நான்கு நாள் பயிற்சி ஆட்டத்திலும், ஒரு மூன்று நாள் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடுகிறது. இதற்கான அணியில் மற்றொரு தமிழக வீரரான பிரதோஷ் ரஞ்சன் பால் இடம்பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்க போன்ற சவால் மிகுந்த ஆடுகளங்களில் விளையாடுவது நிச்சயம் நேர்மறையான நல்ல அனுபவத்தைக் கொடுக்கும்.

முரளி விஜய், தினேஷ் கார்த்திக், அஸ்வின் தலைமுறைக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் கோலோச்சும் அடுத்த தலைமுறை வீரர்களாக சாய் சுதர்சன், பிரதோஷ் ரஞ்சன் பால், வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் இருப்பார்கள் என்கிற நம்பிக்கையை இந்த அணித் தேர்வு பிரகாசமாக்கியுள்ளது.

Comments