சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா: தொடரை வென்றது இளம் இந்தியா

ESPNcricinfo staff

அக்‌ஷர் படேல் © BCCI

ராய்பூரில் நடைபெற்ற முதல் சர்வதேச டி20யில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

நான்காவது டி20யில் இந்திய அணி நான்கு மாற்றங்களுடனும், ஆஸ்திரேலிய அணி ஐந்து மாற்றங்களுடனும் களமிறங்கின. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். முதல் மூன்று ஆட்டங்களில் 200 ரன்களுக்கு மேல் குவித்த நம்பிக்கையில் இந்திய அணி களமிறங்கியது.

முதல் ஓவரை, இந்தத் தொடரில் இரு மெய்டன் ஓவர்களை வீசிய பெஹ்ரன்டார்ஃப் வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. பந்தை ஆரோன் ஹார்டியிடம் கொடுத்தார் மேத்யூ வேட். முதல் ஓவரை தொடரின் மூன்றாவது மெய்டன் ஓவராக வீசினார் ஹார்டி. தொடக்கத்தில் சற்று தடுமாற்றம் இருந்தது தெரியவந்தது.

எனினும், ஜெயிஸ்வால் வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார். 37 ரன்கள் எடுத்த அவர் மீண்டும் ஒருமுறை பவர்பிளேயில் ஆட்டமிழந்தார். அணிக்கு துணை கேப்டனாக திரும்பிய ஷ்ரேயஸ், தன்வீர் சங்கா பந்தில் ஆட்டமிழந்தார். சூர்யாவும் ஏமாற்றமளித்து 1 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.

ருதுராஜ் கெயிக்வாட்டால் அதிரடிக்கு கியரை மாற்ற முடியவில்லை. ரிங்கு சிங் துணிச்சலான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இருவரும் சிறிய கூட்டணியை கட்டமைத்தார்கள். ருதுராஜ் அதிரடிக்கு மாறும் நேரத்தில் தன்வீர் சங்கா ஓவரில் இன்சைட் அவுட் ஷாட்டுக்கு முயற்சித்து ஆட்டமிழந்தார்.

களத்திலிருந்த இளம் வீரர்கள் அச்சமின்றி விளையாடினார்கள். விக்கெட்டுகள் விழுந்த நெருக்கடியின் தடம் தெரியாதவாறு ஜிதேஷ் சர்மா சிக்ஸர்களை பறக்கவிட்டார். ரிங்கு சிங்கும் இறங்கி வந்து 100 மீட்டருக்கு ஒரு சிக்ஸரை அறைந்தார்.

சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்ததால் தொடர்ந்து நான்காவது முறையாக 200 ரன்களைக் கடப்பது சிரமமாக இருந்தது. எனினும், ரிங்கு - ஜிதேஷ் இணை 29 பந்துகளில் 50 ரன்களைக் கடந்ததால் எப்படியும் 190 ரன்களுக்கு இந்திய அணியை அழைத்துச் சென்றுவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. 18 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 161 ரன்கள் எடுத்தது.

கடைசி இரு ஓவர்களில் பவுண்டரிகளைப் பறக்கவிடாமல் விக்கெட்டுகளை வீழ்த்தி குவித்தது ஆஸ்திரேலியா. 19-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா 19 பந்துகளில் 35 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அக்‌ஷர் படேல் டக் அவுட் ஆனார். இந்திய அணியால் 19-வது ஓவரில் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. கடைசி ஓவரில் ஸ்டிரைக்கில் ரிங்கு சிங் இருந்ததால், ஓரளவுக்கு அதிரடிக்கான நம்பிக்கை இருந்தது.

ஆனால், கடைசி ஓவரை வீசிய பெஹ்ரன்டார்ஃப் முதல் பந்திலேயே அற்புதமான யார்க்கரில் ரிங்குவை வீழ்த்தினார். ரிங்கு சிங் 46 ரன்கள் எடுத்தார். ரிங்கு ஆட்டமிழந்ததால், கடைசி ஓவரில் ஒரு பவுண்டரிகூட அடிக்க முடியவில்லை.

20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது இந்திய அணி. கடைசி இரு ஓவர்களில் 13 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட்டுகளை இழந்தது.

180-க்கும் குறைவான வெற்றி இலக்கு என்கிற நேர்மறை எண்ணத்துடன் ஆஸ்திரேலிய தொடக்க பேட்டர்கள் களமிறங்கினார்கள். தீபக் சஹார் வீசிய 3-வது ஓவரில் டிராவிஸ் ஹெட் நான்கு பவுண்டரிகள், ஒரு சிக்ஸர் விளாசினார். ஒரேயொரு பந்து டாட் பந்து. இந்த ஓவரில் 22 ரன்கள் விளாசப்பட்டதால் ஆஸ்திரேலிய அணி முதல் மூன்று ஓவர்களிலேயே 40 ரன்களைத் தொட்டது.

புத்திசாலித்தனமாக பேட்டுக்கு வேகத்தைக் கொடுக்ககூடாது என ரவி பிஸ்னாயை அழைத்தார் சூர்யா. முதல் பந்திலேயே ஸ்வீப் செய்ய முயற்சித்து ஃபிலிப்பி ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் அக்‌ஷரை வீசச் செய்தார். இதற்குப் பலனாக அபாயகரமான டிராவிஸ் ஹெட் விக்கெட் கிடைத்தது.

பவர்பிளேயின் முதல் மூன்று ஓவர்களில் விக்கெட்டுகளை இழக்காமல் 40 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, அடுத்த மூன்று ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 12 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்தச் சரிவிலிருந்து ஆஸ்திரேலியாவால் மீள முடியவில்லை. இந்திய அணியும் அதற்கு இடமளிக்கவில்லை. அக்‌ஷர் பந்தை பக்கவாட்டாக விளையாட முயற்சித்து ஹார்டி போல்டானார். பவர்பிளேவுக்கு பிறகு ஒரேயொரு சிக்ஸர் மட்டுமே ஆஸ்திரேலியா அடித்தது. 10 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்தது.

மீண்டும் ரவி பிஸ்னாய், அக்‌ஷர் சுழல் கூட்டணியை அழைத்தார். இந்த முறை அக்‌ஷர் பந்தில் பென் மெக்டெர்மாட் போல்டானார். இவரும் அக்‌ஷர் பந்தை பக்கவாட்டாக விளையாட முயற்சித்து பந்தைத் தவறவிட்டார்.

டிராவிஸ் ஹெட்டின் அதிரடியான ஓவருக்குப் பிறகு 15-வது ஓவரில் மீண்டும் பந்துவீச வந்தார் தீபக் சஹார். குறைவே ஷார்ட் பந்தில் டிம் டேவிட்டையும், மேத்யூ ஷார்ட்டையும் அடுத்தடுத்த ஓவர்களில் வீழ்த்தினார்.

கடைசி 3 ஓவர்களில் 47 ரன்கள் தேவைப்பட, பொறுப்பு முழுக்க கேப்டன் மேத்யூ வேடிடம் மட்டுமே இருந்தது. அவேஷ் கானும், முகேஷ் குமாரும் அட்டகாசமாக யார்க்கர்களை செயல்படுத்தினார்கள். கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 31 ரன்கள் தேவைப்பட்டன. முகேஷ் குமார் ஒரேயொரு சிக்ஸரை மட்டுமே கொடுத்தார்.

20 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் பிஸ்னாய் மற்றும் அக்‌ஷர் 8 ஓவர்கள் வீசி 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியுள்ளது. சூர்யகுமார் கேப்டனாக அணியை வழிநடத்துவது இதுவே முதன்முறை. முதல் முயற்சியிலேயே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம் வீரர்களைக் கொண்டு விளையாடி தொடரை வென்று கொடுத்துள்ளார்.

Comments