ஐபிஎல் 2024 ஏலம்: ஆதிக்கம் செலுத்தும் ஆஸி. வீரர்கள்!
ஐபிஎல் 2024 ஏலம் வரும் 19-ம் தேதி துபாயில் நடைபெறுகிறது. இதில், 10 அணிகளும் மொத்தம் 77 வீரர்களைத் தேர்வு செய்யவுள்ளன.
உலகக் கோப்பையை வென்ற ஆஸி. அணியில் இடம்பெற்றிருந்த பேட் கம்மின்ஸ், டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட், ஸ்டீவன் ஸ்மித், ஜோஷ் இங்லீஷ் மற்றும் ஷாட் அபாட் ஆகிய 7 பேர் இந்த ஏலத்தில் பங்கேற்கிறார்கள். இவர்கள் 7 பேரையும் சேர்த்து மொத்தம் 25 வீரர்களுக்கு அடிப்படை விலையாக ரூ. 2 கோடி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2015-ல் பெங்களூரு அணிக்காக ஸ்டார்க் பங்கேற்றார். 2018-ல் கொல்கத்தா அணி அவரை ரூ. 9.4 கோடிக்குத் தேர்வு செய்தது. ஆனால், காயம் காரணமாக அவர் அந்தப் போட்டியில் பங்கேற்கவில்லை. 2023 உலகக் கோப்பையின் இறுதிச் சுற்றில் ஆட்டநாயகன் விருதுபெற்ற டிராவிஸ் ஹெட் 2017-க்குப் பிறகு ஐபிஎல்-ல் பங்கேற்கிறார். பெங்களூர் அணிக்காக இரண்டு பருவங்களில் 10 ஆட்டங்களில் பங்கேற்று 205 ரன்கள் எடுத்தார்.
இந்த உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய கூட்ஸியா, இங்கிலாந்து பேட்டர் ஹாரி புரூக், ஹர்ஷல் படேல், ஷார்துல் தாக்குர், உமேஷ் யாதவ் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ. 2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலத்தில் 30 வெளிநாட்டு வீரர்கள் உள்பட மொத்தம் 77 பேரை 10 அணிகளும் தேர்வு செய்ய உள்ளன. இந்த ஏலத்தில் 1167 வீரர்கள் கலந்துகொள்கிறார்கள். 2023 உலகக் கோப்பையில் 578 ரன்களும் 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திராவிற்கு அடிப்படை விலையாக ரூ. 50 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.