இங்கிலாந்து கிரிக்கெட்டின் புதிய அத்தியாயம்: ஜாஸ் பட்லர் நம்பிக்கை
உலகக் கோப்பையில் மோசமான தோல்வியுடன் வெளியேறிய இங்கிலாந்து அடுத்தகட்டமாக மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
தற்போது, ஆண்டிகுவாவில் உள்ள சர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். இளம் வீரர்களைக் கொண்ட இங்கிலாந்து அணிக்கு இந்தத் தொடர் புதிய தொடக்கத்தைக் கொடுக்கும் என்றும் இதன்மூலம் வெள்ளைப் பந்துப் போட்டிகளில் இங்கிலாந்தை பழைய நிலைக்கு எடுத்துச்செல்ல முடியும் என பட்லர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பயிற்சிக்குப் பிறகு பட்லர் பேசியதாவது: இந்த அணியில் சில திறமை வாய்ந்த வீரர்கள் உள்ளார்கள். வாய்ப்புகளைப் பெறவும் திறமையை வெளிப்படுத்தவும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். சிலர் ஒருநாளில் குறைவான அனுபவம் கொண்டிருந்தாலும் டெஸ்டில் அனுபவத்தைப் பெற்றுள்ளார்கள். ஆகவே அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் எந்த விதத்திலும் வித்தியாசமாக இருக்காது. இந்த அணி சிறப்பான வீரர்களைக் கொண்ட கலவை என்றார்.
2023 உலகக் கோப்பை தங்களுக்கு மோசமானதாக அமைந்ததாகவும் இருப்பினும் இங்கிலாந்து அணியை மீண்டும் பழைய நிலைக்கு எடுத்துச் செல்வது தன்னுடைய கடமை எனவும் பட்லர் குறிப்பிட்டார். இதுகுறித்துப் பட்லர் பேசியதாவது: வெள்ளைப் பந்துப் போட்டிகளில் இங்கிலாந்து அணி நீண்ட காலமாக புகழின் உச்சத்தில் இருந்தது. வீரர்களின் திறமையை நீங்கள் அறிவீர்கள். ஆகவே, வெள்ளைப் பந்து போட்டிகளில் அணிக்கு உதவ முயல்வீர்கள்.
இதனை என்னுடைய பொறுப்பாகவும் பல காலமாக சிறந்து விளங்கிய இங்கிலாந்து அணியை மீண்டும் புகழின் உச்சத்துக்குக் கொண்டுசெல்வது என்னுடைய கடமையாகவும் கருதுகிறேன். ஒரு போட்டி நீங்கள் யார் என்பதை தீர்மானிக்காது. அதனை எனது அனுபவங்களின் ஒரு பகுதியாகவே கருதுகிறேன்.
என்னுடைய வாழ்க்கையையும் வேலையையும் தெளிவான கண்ணோட்டத்துடன் பார்க்கும் இடத்தில் இருக்கிறேன். உலகக் கோப்பைத் தோல்வியைப் பற்றி கவலைகொள்ளாத இரு குழந்தைகள் எனக்குண்டு. இதுவே ஒரு தந்தையாக என்னுடைய கடமைகளை சுட்டிக்காட்டுகிறது. இந்த உலகம் வேகமாக முன்னேறிக்கொண்டே இருக்கும். நாம் அனைவரும் எதையாவது எதிர்நோக்கியே காத்திருப்போம். அது நாம் வெறுக்கும் அளவுக்கு மோசமாக இருக்காது. அதே நேரத்தில் விரும்பும் அளவுக்கு நல்லதாகவும் இருக்காது என்றார்.