ஒரே நாளில் சல்மான் பட்டின் பதவியைப் பறித்த வஹாப் ரியாஸ்
பாகிஸ்தான் அணித் தேர்வுக்குழு ஆலோசகராக நேற்று முன் தினம் சல்மான் பட் நியமிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் பாகிஸ்தானின் தேர்வுக்குழுத் தலைவராக வஹாப் ரியாஸ் தேர்வு செய்யப்பட்டார். நேற்று முன் தினம் அவரது ஆலோசகர்களாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர்களான சல்மான் பட், கம்ரான் அக்மல் மற்றும் ராவ் இஃப்திகார் நியமிக்கப்பட்டார்கள்.
2010-ம் ஆண்டு ஸ்பாட் ஃபிக்சிங்கில் ஈடுபட்ட காரணத்தால் சல்மான் பட்டுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அவருக்கு ஆலோசகர் பொறுப்பு வழங்கப்பட்டது குறித்து வஹாப் மீது விமர்சனங்கள எழுந்தன. மேலும், சல்மான் பட், கம்ரான் அக்மல் மற்றும் ராவ் இஃப்திகார் ஆகிய மூவருமே பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். பஞ்சாப் அரசுடன் வஹாப் இணைந்து செயல்பட்டுவந்தார். ஆகவே, தனக்குச் சாதகமானவர்களுக்கு வஹாப் பதவிகளை அளித்துள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய வஹாப் ரியாஸ், ஆலோசனைக் குழுவிற்கு சல்மான் பரிந்துரைக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் பெயரைக் களங்கப்படுத்துவதாக குற்றம் சாட்டினார். சல்மானுக்கு முன்னுரிமை அளித்ததாக தன்மீது குற்றம் சாட்டப்பட்டதாகவும், அந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக தன்னைக் காப்பாற்றிக் கொள்ள விரும்புவதாகவும் அவர் கூறினார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் நற்பெயரையும் அவரது நேர்மையையும் பாதுகாப்பதே தனது முதன்மையான பணி என்று கூறிய அவர், சல்மான் பட் அணித் தேர்வில் எந்த வகையிலும் ஈடுபடமாட்டார் என்பதை உறுதிப்படுத்தினார்.