பரபரப்பான ஆட்டத்தில் மத்தியப் பிரதேசத்தை வீழ்த்திய தமிழக அணி

ESPNcricinfo staff

சாய் கிஷோர் © TNCA

விஜய் ஹசாரே போட்டியில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணியை எதிர்த்து தமிழக அணி விளையாடியது. தானேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தமிழக அணி முதலில் பேட்டிங் செய்தது.

பாபா இந்திரஜித் 92 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்ததால் தமிழக அணி 49.5 ஓவர்களில் 195 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ராகுல் பாதம், சரன்ஷ் ஜெயின் மற்றும் கேப்டன் சுபம் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

இந்த இலக்கைத் துரத்திய மத்தியப் பிரதேச அணிக்கு ஆரம்பம் முதலே தமிழக பந்துவீச்சாளர்கள் நெருக்கடி கொடுத்தார்கள். முதல் 4 பேட்டர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதன்பிறகு ரஜத் படிதார் - வெங்கடேஷ் ஐயர் இணை விக்கெட் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தி விளையாடியது. இந்த இணை 124 பந்துகளில் 77 ரன்கள் எடுத்தது.

27 ரன்கள் எடுத்த வெங்கடேஷ் ஐயர் அவசரப்பட்டு ரன் ஓடி ரன் அவுட்டானார். இதனால் ஆட்டம் தமிழகம் பக்கம் திரும்பியது. கடைசி வரை போராடிய படிதார் 73 ரன்கள் எடுத்து அபராஜித் வீசிய 47-வது ஓவரில் வீழ்ந்தார். அப்போது மத்தியப் பிரதேச வெற்றிக்கு 27 ரன்கள் தேவைப்பட்டன. கைவசம் இரு விக்கெட்டுகள் இருந்தன.

நடராஜன் வீசிய 48-வது ஓவரில் மிஹிர் ஹிர்வானி ஸ்டம்புகள் சிதற ஆட்டமிழந்தார். அடுத்தப் பந்திலேயே குமார் கார்த்திகேயாவும் ரன் அவுட்டாக தமிழக அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சாய் கிஷோர் மற்றும் வருன் சக்கரவர்த்தி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

குரூப் ஈ பிரிவில் இடம்பெற்றுள்ள தமிழக அணி இந்த வெற்றியினால் 16 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

Comments