ஷ்ரேயஸ், அர்ஷ்தீப் சிங் அசத்தல்: 4-1 என தொடரை வென்ற இந்தியா

ESPNcricinfo staff

அர்ஷ்தீப் சிங் © AFP/Getty Images

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்திலும் வெற்றிபெற்று 4-1 என டி20 தொடரைக் கைப்பற்றியுள்ளது இந்திய அணி.

பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா, ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது. இந்திய அணியில் தீபக் சஹாருக்குப் பதிலாக அர்ஷ்தீப் சிங் அணிக்குள் வந்தார். ஆஸ்திரேலியத் தரப்பிலும் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. கிறிஸ் கிரீனுக்குப் பதிலாக நேதன் எல்லீஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.

வழக்கத்துக்கு மாறாக சின்னசாமி மைதானம் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்தது. பவுன்ஸ் ஆகி பந்து நின்று வந்ததால் இந்தியாவின் தொடக்க இணை தடுமாற்றத்துடனேயே விளையாடியது. சிறிய மைதானம் என்பதால் ஆரம்பம் முதலே குறைவேகப் பந்துகளை நன்கு பயன்படுத்தினார்கள் ஆஸி. பந்துவீச்சாளர்கள். பெஹ்ரன்டார்ஃப் வீசிய 4-வது ஓவரில் இரு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸரை அடித்த ஜெயிஸ்வால் கடைசிப் பந்திலும் சிக்ஸர் அடிக்க முயன்று 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரில் ருதுராஜும் 10 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

அதே ஓவரில் சூர்யகுமாரின் கேட்சைத் தவறவிட்டார் பென் மெக்டெர்மாட். ஆனால் இந்த வாய்ப்பை சூர்யகுமார் பயன்படுத்திக்கொள்ளத் தவறி மீண்டும் மெக்டெர்மாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 5 ரன்கள் மட்டுமே எடுத்தார். 8-வது ஓவரை தன்வீர் சங்காவிடம் கொடுத்தார் வேட். வழக்கமாக சுழற்பந்துவீச்சாளர்களுக்கு பெரிதாக ஒத்துழைக்காத சின்னசாமி ஆடுகளம் இன்று கைகொடுத்தது. இதனால் பந்து நன்றாகத் திரும்பி, பேட்டர்களின் சவாலை மேலும் அதிகரித்தது.

9-வது ஓவரில் சங்காவின் சுழலில் பெரிய ஷாட்டுக்கு முயன்று 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார் ரிங்கு சிங். இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்தார்கள். 10 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் எடுத்தது இந்தியா. துவார்ஷிஸின் 3-வது ஓவரில் ஜிதேஷ் சர்மா ஒரு பவுண்டரியும் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு பவுண்டரியும் ஒரு சிக்ஸரையும் விளாசினார்கள். ஜிதேஷ் சர்மாவுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தாலும் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்த அவர், ஹார்டியின் குறைவேகப் பந்தில் ஆட்டமிழந்தார். ஜிதேஷ் சர்மா - ஷ்ரேயஸ் ஐயர் இணை 24 பந்துகளில் 42 ரன்கள் எடுத்து அணியை சரிவில் இருந்து மீட்டது. 15-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது இந்தியா.

பின்னர் ஷ்ரேயஸுடன் கூட்டணி அமைத்த அக்‌ஷர் படேல் தொடக்கத்தில் நிதானம் காட்டினாலும் மோசமான பந்துகளைத் தண்டித்தார். பெஹ்ரண்டார்ஃப் வீசிய 19-வது ஓவரில் சிக்ஸரைப் பறக்கவிட்ட அக்‌ஷர் அதே ஓவரில் மீண்டும் சிக்ஸர் அடிக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். 21 பந்துகளில் இரு பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 31 ரன்களை அவர் எடுத்தார்.

எல்லிஸ் வீசிய கடைசி ஓவரில் ஒரு பவுண்டரி மற்றும் சிக்ஸரை அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்த ஷ்ரேயஸ் ஐயர், 53 ரன்களில் ஆட்டமிழந்தார். கடைசிப் பந்தில் ரவி பிஸ்னாய் இரண்டாவது ரன்னுக்கு ஓடி ரன் அவுட்டானார். இறுதியில் 8 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்தது இந்தியா.

ஆடுகளம் பேட்டர்களுக்குச் சவாலாக இருந்ததால் ஆஸி. இன்னிங்ஸ் ரசிகர்களுக்கு சுவாரசியத்தை அளித்தது. அர்ஷ்தீப் வீசிய முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசினார் டிராவிஸ் ஹெட். முகேஷ் குமாரின் முதல் ஓவரில் ஜோஷ் ஃபிலிப்பி 4 ரன்களுக்கு வீழ்ந்தார். மெக்டெர்மாட் சிக்ஸருடன் தனது ரன் கணக்கைத் தொடங்கினார். ஹெட் - மெக்டெர்மாட் அதிரடியால் 4 ஓவர்களில் 40 ரன்களை எடுத்தது ஆஸ்திரேலியா.

இதனால் இந்திய அணியின் ஆபத்பாந்தவனான பிஸ்னாயிடம் பந்தைக் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். அதற்குப் பலனும் கிடைத்தது. 1 சிக்ஸரும் 5 பவுண்டரிகளும் அடித்து பவர்பிளேயில் மிரட்டிய டிராவிஸ் ஹெட்டை போல்ட் செய்தார் பிஸ்னாய். தனது அடுத்த ஓவரில் ஹார்டியை வீழ்த்தினார் பிஸ்னாய். அடுத்த 3 ஓவர்களுக்கு பவுண்டரியே வரவில்லை. 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 70 ரன்கள் எடுத்தது.

டிம் டேவிட் - மெக்டெர்மாட் இணை 38 பந்துகளில் 47 ரன்கள் எடுத்தது. 13-வது ஓவரில் 100 ரன்களைக் கடந்தது. 17 ரன்கள் எடுத்த டிம் டேவிட்டை தனது சுழலில் வீழ்த்தினார் அக்‌ஷர் படேல். அர்ஷ்தீப் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸர் அடித்து அரை சதத்தைப் பூர்த்தி செய்தார் மெக்டெர்மாட். 54 ரன்கள் எடுத்த அவர் அதே ஓவரில் ஆட்டமிழந்தார். ஒரு பவுண்டரியும் அடிக்காமல் 5 சிக்ஸர்களை அவர் அடித்தார்.

ஆஸ்திரேலியாவிற்கு கடைசி 5 ஓவர்களில் 45 ரன்கள் தேவைப்பட்டன. முகேஷ் குமார் வீசிய 17-வது ஓவரில் மேத்யூ ஷார்ட், துவார்ஸிஸ் அடுத்தடுத்தப் பந்துகளில் ஆட்டமிழந்தார்கள். அவேஷ் கானின் அடுத்த ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரிகளை விளாசி ஆட்டத்தை மேலும் பரபரப்பாக்கினார் மேத்யூ வேட். 19-வது ஓவரை வீசிய முகேஷ் குமார் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவுக்கு 10 ரன்கள் தேவைப்பட்டன. ஆட்டத்தை முடிக்கும் பொறுப்பை அர்ஷ்தீப்பிடம் கொடுத்தார் சூர்யகுமார் யாதவ். முதல் இரண்டு பந்துகளை யார்க்கர்களாக வீசி திணறடித்த அர்ஷ்தீப் அடுத்தப் பந்தில் மேத்யூ வேடின் விக்கெட்டை வீழ்த்தினார். அர்ஷ்தீப்பின் அட்டகாசமான பந்துவீச்சால் கடைசி 3 பந்துகளில் ஆஸ்திரேலியாவால் 3 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இறுதியில் ஆஸி. 154 ரன்கள் எடுக்க இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்குச் சேர்க்கப்படாத அக்‌ஷர் படேல், ஆட்டநாயகனாக மீண்டும் தேர்வானார். டி20 தொடரில் 9 விக்கெட்டுகளை வீழ்த்திய பிஸ்னாய், தொடர் நாயகன் விருதை வென்றார். இந்த வெற்றியின் மூலம் 4-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றுள்ளது சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி.

Comments