ஆகஸ்ட் 31: கிளைவ் லாயிட் பிறந்தநாள்!
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் ஜாம்பவான் கிளைவ் லாயிடின் பிறந்த தினம் இன்று. பிரிட்டிஷ் கயானாவின் தலைநகரான ஜார்ஜ்டவுனில் பிறந்த கிளைவ் லாயிட், தனது 14-வது வயதிலேயே தந்தையை இழந்தார். குடும்ப பாரத்தை சுமப்பதற்காக கயானா சுகாதார அமைச்சகத்தில் நிர்வாக எழுத்தர் பணியில் சேர்ந்தார்.
கரீபியன் சமூகத்தின் கடைநிலையில் உள்ள கருப்பினத்தைச் சேர்ந்த கிளைவ் லாயிட், தனது பணியிடத்தில் கடுமையான சவால்களை சந்தித்தார். காலனி ஆதிக்கத்தின் கீழ் வறுமையில் உழன்ற அவர், தனது இருப்பை வெளிப்படுத்துவதற்காக கிரிக்கெட் மட்டையைக் கையிலெடுத்தார்.
ரோஹன் கான்ஹாய், ஜோ சாலமன், பாசில் பட்சர், லேன்ஸ் கிப்ஸ் ஆகியோர் வரிசையில் கயானாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரரானார். கிளைவ் லாயிட், 110 டெஸ்டுகளில் 19 சதங்கள், 39 அரைசதங்கள் உடன் 7,515 ரன்கள் எடுத்தார். அபாரமான பேட்டர் என்றாலும் கிரிக்கெட் உலகின் மகத்தான தலைவன் என்றே வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார்.
கிளைவ் லாயிட் தலைமையிலான மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 1975 ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம் ஓர் அவமானகரமான தோல்வியாக அமைந்தது. ஆனால் அதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு அணிக்குள் இருந்த மனமாச்சர்யங்களைக் களைந்து கிரிக்கெட் வரலாற்றின் அசைக்க முடியாத ஓர் அணியாக மேற்கிந்தியத் தீவுகள் அணியை அவர் உருவாக்கினார்.
ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கேல் ஹோல்டிங், ஜோயல் கார்னர், காலின் கிராஃப்ட் ஆகியோர் அடங்கிய ஓர் அசாத்தியமான வேகப்பந்து வீச்சுப் படையை வளர்த்தெடுத்தார். 'புரொஃபசர்' என்று அழைக்கப்படும் கிளைவ் லாயிட், கடினமான சமயங்களில் சாதுர்யமான முடிவுகள் எடுப்பதற்கு பெயர்போனவர். பல்வேறு பிரிவினர் அடங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியை நிர்வகிப்பதற்கு கிளைவ் லாயிடின் தொடக்க கால பிரிட்டிஷ் ஆங்கில வழிக் கல்வி கைக்கொடுத்தது.
1975, 1979 உலகக் கோப்பைகளை கிளைவ் லாயிட் தலைமையில் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி, 1983-ல் கபில் தேவ் தலைமையிலான இந்தியாவிடம் கோப்பையை இழந்தது. 1975 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிளைவ் லாயிட் அடித்த சதம் அவருடைய சிறந்த இன்னிங்ஸ் என வர்ணிக்கப்படுகிறது.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த சிறந்த கவர் ஃபீல்டர்களில் ஒருவரான கிளைவ் லாயிட், 1985-ல் சர்வதேச கிரிக்கெட்டில் தனது கடைசி ஆட்டத்தை விளையாடினார்.
*
ஜவகல் ஸ்ரீநாத் பிறந்தநாள்!
இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரான ஜவகல் ஸ்ரீநாத் இன்று தனது 54-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.
முதல் தர கிரிக்கெட்டில் 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்திய ஸ்ரீநாத், இந்தியாவுக்காக 67 டெஸ்டுகளில் 236 விக்கெட்டுகளையும் 229 ஒருநாள் ஆட்டங்களில் 315 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
தோள்பட்டை வலியால் அடிக்கடி பாதிப்படைந்த ஸ்ரீநாத் 2003-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார். தற்போது, ஐசிசி ஆட்ட நடுவராக ஸ்ரீநாத் பணியாற்றி வருகிறார்
*
இதே நாளில், 1968-ல் கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக ஒரே ஓவரில் 6 சிக்ஸர்களை விளாசினார் மேற்கிந்தியத் தீவுகளின் மற்றொரு ஜாம்பவான் கேரி சோபர்ஸ். இங்கிலாந்து கவுண்டி போட்டியில் நாட்டிங்ஹாம்ஷைர் அணிக்காக விளையாடிய சோபர்ஸ், கிளாமோர்கன் பந்துவீச்சாளர் மால்கம் நாஸ் பந்துவீச்சில் இந்த சாதனையைப் படைத்தார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் ரவிசாஸ்திரி இந்த சாதனையைச் சமன் செய்தார்.