இலங்கை - வங்கதேசம்: நாகினி நடனம் பிறந்த கதை!
ஆசியக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்துக்கு இணையான எதிர்பார்ப்பை பல்லக்கலேவில் இன்று தொடங்கும் இலங்கை, வங்கதேசம் அணிகள் இடையிலான ஆட்டம் ஏற்படுத்தியுள்ளது. காயம் காரணமாக முன்னணி வீரர்கள் விலகியதால் இரு அணிகளுமே கடுமையான நெருக்கடியில் உள்ளன. ஆனாலும் சமூக வலைதளங்களில் இரு நாட்டு ரசிகர்களுக்கு இடையிலான வார்த்தைப் போர் மட்டும் குறைந்தபாடில்லை.
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய இலங்கை கேப்டன் ஷனகா, வங்கதேச வீரர்கள் அவசரகதியில் முடிவெடுப்பவர்கள் என்று வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசனை மறைமுகமாக சாடினார். ஆட்டத்துக்கு முன்பாக வங்கதேசத்தை உளவியல்ரீதியாக சீண்டிப் பார்க்கும் ஓர் உத்தியாகவே இது பார்க்கப்படுகிறது. இதற்கெல்லாம் விதைபோட்டது நாகினி நடனம்!
கிரிக்கெட்டில் எத்தனையோ விதமான கொண்டாட்டங்களைப் பார்த்திருப்போம். அக்தரின் ஏரோபிளேன் கொண்டாட்டம் தொடங்கி கரீபிய வீரர்களின் கங்னம் ஸ்டைல் வரை. இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் வாள்வீச்சுக் கொண்டாட்டமும் ரசிகர்களின் மனம்கவர்ந்த ஒன்று. ஆனால், நாகினி நடனமோ மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதில்லை; மாறாக எதிரணியை ஏளனம் செய்வதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
நாகினி நடனம் பிறந்த கதை கொஞ்சம் சுவாரசியமானது. 2016 பிபிஎல் போட்டியின் போது ஓர் ஆட்டத்தில் விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் வங்கதேச சுழற்பந்து வீச்சாளர் நஜ்முல் இஸ்லாம் அபு, பாம்பு போல நடனமாடினார். இதைப் பார்த்த ராஜ்சாஹி அணி கேப்டன் டேரன் சமி, நீ ஒரு பாம்பைப் போலவே நடனமாடுகிறார் என்று நஜ்முல் இஸ்லாமைப் பாராட்டினார். அப்போதிருந்து விக்கெட் எடுக்கும் போதெல்லாம் பாம்பு போல படமெடுக்க ஆரம்பித்தார் நஜ்முல் இஸ்லாம்.
2018-ல் இலங்கைக்கு எதிரான டி20-ல் அறிமுகமான நஸ்முல் இஸ்லாம், தனுஸ்கா குணதிலகா விக்கெட்டை வீழ்த்தியவுடன் முஷ்ஃபிகுர் ரஹிம் உள்ளிட்ட தனது சக வீரர்களுடன் இணைந்து நாகினி நடனத்தை ஆடினார். சில்ஹெட்டில் நடைபெற்ற அடுத்த ஆட்டத்தில் வங்கதேசத்தை வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது இலங்கை அணி. வங்கதேச கேப்டன் முஷ்ஃபிகுர் ரஹிம் விக்கெட்டைக் கைப்பற்றிய குணதிலகா, வங்கதேசத்தைப் பழிதீர்க்கும் விதமாக நாகினி நடனமாடினார்.
2018-ல் இலங்கையில் நடைபெற்ற நிதாஸ் கோப்பைப் போட்டியில் தனது முதல் ஆட்டத்தில் இலங்கையை வீழ்த்தியது வங்கதேசம். 35 பந்துகளில் 72 ரன்களைக் குவித்த முஷ்ஃபிகுர் ரஹிம், 215 ரன்களை வெற்றிகரமாக விரட்டிய மகிழ்ச்சியில் நாகினி நடனத்தை ஆடினார். கொழும்பில் நடைபெற்ற இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது ஆட்டத்தில் வெற்றியைக் கொண்டாடும் விதமாக வங்கதேச வீரர் ஒருவர் ஓய்வறையின் கதவை உடைத்தது சர்ச்சைக்குள்ளானது.
பரபரப்பான அந்த ஆட்டத்தின் கடைசி ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் அடித்து மஹ்மதுல்லா வங்கதேசத்தை வெற்றிபெற வைத்தார். இதைத் தொடர்ந்து பிரேமதாசா மைதானத்தில் வங்கதேச வீரர்கள் நாகினி நடனம் ஆடி, இலங்கை ரசிகர்களை வெறுப்பேற்றினார்கள். அதன்பிறகு இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் என்றாலே நாகினி நடனம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறிவிட்டது.
இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டங்களில் தென்படும் பரபரப்புகளுக்குப் பின்னால் ஒரு நீண்ட கால வரலாறு உள்ளது. ஆனால் ஆசியாவின் வெவ்வேறு முனைகளில் உள்ள இலங்கை, வங்கதேசம் அணிகளுக்கு இடையிலான மோதல் சிறுபிள்ளைத்தனமான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. ஆசியக் கோப்பையிலாவது நாகினி நடனத்துக்கு முடிவுகட்டப்படுமா?