முடிவுக்கு வந்த சிபிஎல் பயணம்: அம்பதி ராயுடு விளக்கம்!
சிபிஎல் டி20 லீக்கில் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடி வந்த அம்பதி ராயுடு அந்த அணியுடனான ஒப்பந்தம் நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற அம்பதி ராயுடு, ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸுக்காக விளையாடி மே மாதம் கோப்பை வென்றார். இத்துடன், ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாகவும் அவர் அறிவித்தார்.
பிறகு, மேஜர் லீக் டி20 போட்டியில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் ஆனார். ஆனால், பிசிசிஐயின் புதிய விதிகள் காரணமாக, ஐந்து நாள்களிலேயே மேஜர் லீக் டி20யிலிருந்து விலகினார்.
சிபிஎல் 2023 போட்டியில் 3 ஆட்டங்களில் பங்கேற்ற அம்பதி ராயுடு 15.66 சராசரியில் 47 ரன்கள் எடுத்தார். பிரவீன் தாம்பேவிற்குப் பிறகு சிபிஎல் போட்டியில் பங்கேற்ற இரண்டாவது இந்தியர் அம்பதி ராயுடு தான்.
இந்நிலையில் அம்பதி ராயுடு தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சில கடமைகள் காரணமாக ஆகஸ்ட் 28 வரையில் மட்டுமே சிபிஎல் போட்டியில் விளையாட ஒப்புக்கொண்டேன். ஊடகங்களில் கூறியதுபோல, நான் விலகவில்லை. எனது ஒப்பந்தம் முடிந்துவிட்டது. சிபிஎல் நிர்வாகம் மற்றும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணிக்கு நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.
I have agreed to play in the cpl only till the 28 th of August as I have had prior commitments.. so as stated in the media I have not pulled out but finished my agreement.. thank you @CPL and @sknpatriots
— ATR (@RayuduAmbati) September 1, 2023
அதேபோல, ஜிம்பாப்வேயின் வேகப்பந்துவீச்சாளரான பிளெஸிங் முசரபானியும் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியிலிருந்து தனிப்பட்ட காரணங்களினால் விலகுவதாக அறிவித்துள்ளார். சிபிஎல் 2023 போட்டியில் 3 ஆட்டங்களில் விளையாடிய அவர் ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார்.
அம்பதி ராயுடு மற்றும் முசரபானிக்குப் பதிலாக வேகப்பந்துவீச்சாளர் பென்னி ஹாவல் மற்றும் டாப் ஆர்டர் பேட்டர் வில் ஸ்மீத் ஆகியோர் செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பாட்ரியாட்ஸ் அணியில் இணைந்துள்ளார்கள்.
அதேபோல, பார்படாஸ் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய டோனோவான் ஃபெரிரா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெற்றுள்ளார். இதனால் அவருக்குப் பதிலாக கார்லோஸ் ப்ராத்வெயிட் பார்படாஸ் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். ஆஸ்திரேலிய தொடருக்குப் பிறகு டோனோவான் ஃபெரிரா சிபிஎல் போட்டிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.