சிஎஸ்ஏ ஒருநாள் கோப்பை: மேற்கு மாகாண அணியின் கேப்டனாக கைல் வெரைன் தேர்வு!

ESPNcricinfo staff

கைல் வெரைன் © AFP via Getty Images

தென்னாப்பிரிக்க உள்ளூர் ஒருநாள் கோப்பைப் போட்டியில் மேற்கு மாகாணத்தின் கேப்டனாக கைல் வெரைன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

வெய்ன் பார்னெலுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளதால் கைல் வெரைனிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. 2022-23 பருவத்தில் கைல் வெரைன் 7 முதல் தர கிரிக்கெட் மற்றும் 3 டி20 ஆட்டங்களுக்கு கேப்டனாகச் செயல்பட்டுள்ளார்.

இதுகுறித்து மேற்கு மாகாண அணியின் தலைமைப் பயிற்சியாளர் சலியேக் நகர்தியன் பேசுகையில் கடந்த சில மாதங்களில் ஏற்பட்ட பணிச்சுமை மற்றும் தோள்பட்டை காயம் காரணமாக கைல் வெரைன் புதிய கேப்டனாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வெய்ன் பார்னெலுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் குணமாவதைப் பொறுத்து ஒருநாள் கோப்பைப் போட்டிக்குத் திரும்புவார். கைல் வெரைன் அணிக்குள் இணக்கமான வீரர். முக்கியமான வீரரும் கூட. ஆகவே அவரிடம் கேப்டன் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. கைல் சிறப்பாக செயல்படுவார் என்பது எனக்குத் தெரியும் என்றார்.

கடந்த பருவத்தில் கைல் தலைமையில் ஒரு டி20 ஆட்டத்தில் வெற்றியும் இரண்டில் தோல்வியும் பெற்றது மேற்கு மாகாண அணி. அதேபோல, 7 நான்கு நாள் ஆட்டங்களுக்கு கைல் கேப்டனாகச் செயல்பட்டார். அதில், இரண்டில் அந்த அணி வெற்றிபெற்றது. கேப்டனாக செயல்பட்ட முதல் தர கிரிக்கெட்டில் கைல் வரைனின் சராசரி 59.44 ஆகும். இதில் ஒரு சதம் மற்றும் நான்கு அரை சதங்களை அவர் அடித்துள்ளார்.

இந்நிலையில் இதுகுறித்து கைல் வெரைன் பேசுகையில் நான் ஆர்வமாக உள்ளேன். இந்த வருடம் சிறந்த வீரர்கள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். மேற்கு மாகாண அணி எனது மனதிற்கு நெருக்கமானது. அந்த அணிக்கு கேப்டனாக செயல்படுவதை பெரிய விஷயமாகக் கருதுகிறேன். போட்டியில் விளையாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

கடந்த ஒருநாள் கோப்பையில் வெய்ன் பார்னெல் தலைமையிலான மேற்கு மாகாண அணி இறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. இருப்பினும், சாம்பியன் பட்டத்தை லயன்ஸ் அணியிடம் பறிகொடுத்தது அந்த அணி.

Comments