பிசிசிஐ ஒளிபரப்பு உரிமை: முடிவை வெளியிட்ட ஜெய் ஷா!

ESPNcricinfo staff

ஜெய் ஷா © Getty Images

இந்தியாவில் நடைபெறும் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளுக்கான (ஐபிஎல் தவிர்த்து) டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்துக்கான ஏலம் இன்று நடைபெற்றது. இதில் 2023 - 27 காலகட்டத்திற்கான டிஜிட்டல் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம்18 நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக 2018 - 23 காலகட்டத்தில் 102 சர்வதேச ஆட்டங்களுக்கான உரிமத்தை ரூ. 6,138 கோடிக்குக் கைப்பற்றியிருந்தது டிஸ்னி ஸ்டார் நிறுவனம். இந்நிலையில், அடுத்த 5 வருடங்களில் 88 சர்வதேச ஆட்டங்களுக்கான உலகளாவிய உரிமத்தைக் கைப்பற்றியுள்ளது வியாகாம்18 நிறுவனம். இதற்காக அந்நிறுவனம் ரூ. 5,963 கோடியை அளிக்கவுள்ளது. இதில் தொலைக்காட்சி உரிமம் ரூ. 3101 கோடி என்றும் டிஜிடல் உரிமம் ரூ. 2862 என்றும் அறியப்படுகிறது. இதனால் பிசிசிஐக்கு ஓர் ஆட்டத்துக்கு ரூ. 67.75 கோடி கிடைக்கவுள்ளது.

இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அடுத்த 5 ஆண்டுகளுக்கான பிசிசிஐயின் தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை பெற்றிருக்கும் வியாகாம் 18 நிறுவனத்துக்கு வாழ்த்துகள். ஐபிஎல் மற்றும் மகளிர் பிரீமியர் லீக் ஆகிய போட்டிகளுக்கு அடுத்து பிசிசிஐ ஒளிபரப்பு உரிமையிலும் எங்களுடைய கூட்டணி தொடர்வதால் இந்திய கிரிக்கெட் இரு பகுதிகளிலும் (தொலைக்காட்சி மற்றும் டிஜிடல்) தொடர்ந்து வளர்ச்சியடையும்.

மேலும், இத்தனை ஆண்டுகளில் வழங்கிய ஆதரவுக்காக ஸ்டார் இந்தியா - டிஸ்னி நிறுவனத்திற்கு நன்றி. இந்திய கிரிக்கெட்டை உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் கொண்டு செல்வதற்கு நீங்கள் முக்கியப் பங்காற்றியுள்ளீர்கள் எனக் கூறியுள்ளார்.

Comments