கவுன்டி கிரிக்கெட்டில் சாய் சுதர்சன்!
தமிழ்நாட்டு வீரர் சாய் சுதர்சன் கவுன்டி கிரிக்கெட்டில் நடப்புப் பருவத்தின் கடைசி மூன்று ஆட்டங்களுக்கு மட்டும் சர்ரே அணிக்காக ஒப்பந்தமாகியுள்ளார்.
கவுண்டி சாம்பியன்ஷிப்பில் டாம் லாதம் நியூசிலாந்து அணிக்காக விளையாடுகிறார். ஆலி போப் காயம் காரணமாக விலகியுள்ளார். வில் ஜேக்ஸ், சாம் கரண் ஆகியோர் இங்கிலாந்துக்காக விளையாடச் சென்றுள்ளார்கள்.
எனவே, நடப்புப் பருவத்தின் கடைசி மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக அந்த அணி சாய் சுதர்சனை ஒப்பந்தம் செய்துள்ளது.
இதுகுறித்து சர்ரே கிரிக்கெட் இயக்குநர் அலெக் ஸ்டீவார்ட் கூறியதாவது:
சாய் சுதர்சனைப் பார்த்து, அவருடன் இணைந்துப் பணியாற்றியுள்ள இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த இருவர் உள்பட, நான் மிகவும் மதிக்கக்கூடிய நபர்களால் பெரிதளவில் பரிந்துரை செய்யப்பட்டவர் சாய் சுதர்சன். நடப்புப் பருவத்தின் கடைசி மூன்று ஆட்டங்களில் பேட்டிங்கை பலப்படுத்துவதற்காக அவர் அணியில் இணைக்கப்பட்டுள்ளார் என்றார் ஸ்டீவார்ட்.
சாய் சுதர்சன் 8 முதல் தர ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளார். இருந்தபோதிலும், அவரது பேட்டிங் சராசரி 42.71. இவர் கடந்த இரு ஐபிஎல் பருவங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடந்த மாதம் நடைபெற்ற இளையோர் ஆசியக் கோப்பையில் இந்திய 'ஏ' அணிக்காக விளையாடிய சாய் சுதர்சன் சதம் அடித்தார்.
சாய் சுதர்சனின் பேட்டிங் திறமையை இந்திய சுழற்பந்துவீச்சு ஜாம்பவான் அஸ்வின் தனது யூட்யூப் பக்கத்தில் பாராட்டியிருக்கிறார். இவர் 2021-ல் சர்ரே அணிக்காக விளையாடினார்.