பதிரனா, அசலங்கா அசத்தல் ஆட்டம்: வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை!
ஆசியக் கோப்பையில் பல்லேகலேவில் நடைபெற்ற ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. மழைக்கான வாய்ப்பிருந்ததால் ஆட்டம் முழுமையாக நடக்குமா என்ற சந்தேகம் ரசிகர்களுக்கு இருந்தது. ஆடுகளத்தில் வேகமில்லை என்பதால் இலங்கைப் பந்துவீச்சை எதிர்கொள்வதற்கு வங்கதேச பேட்டர்கள் சிரமப்பட்டனர். தனது முதல் ஓவரிலேயே தன்ஸித் ஹசனை எல்பிடபிள்யூ செய்தார் தீக்ஷனா.
மற்றொரு தொடக்க பேட்டர் நைம் சேக் ரன் ஏதுமில்லாமல் தனஞ்ஜெயா டி சில்வா பந்தில் ஆட்டமிழந்தார். யார்க்கர் கிங் பதிரனா தனது முதல் ஓவரிலேயே வங்கதேச கேப்டன் ஷகிப் அல் ஹசன் விக்கெட்டைக் கைப்பற்றினார். பெரிய இன்னிங்ஸ் ஆட வேண்டிய கட்டாயத்தில் இருந்த ஷகிப் அல் ஹசன், 5 ரன்களில் பெவிலியன் திரும்பினார். நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா இல்லாத நிலையில் பகுதி நேர சுழலர்கள் தனஞ்ஜெயாவும் வெல்லலகேவும் கட்டுக்கோப்பாக வீசினர்.
பொறுப்பாக விளையாடி ஷாண்டோ - ஹிருதாய் கூட்டணி 50 ரன்களைக் கடந்த நிலையில், 20 ரன்கள் எடுத்த ஹிருதாயை எல்பிடபிள்யூ செய்தார் ஷனகா. 66 பந்துகளில் அரைசதம் அடித்த ஷாண்டோவுக்கு நடுவரிசையில் ஒரு பேட்டரும் கைக்கொடுக்கவில்லை. பதிரனா பந்தில் அப்பர் கட் ஆடப்போய் முஷ்ஃபிகுர் ரஹிம் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் விளையாடி 89 ரன்கள் குவித்த ஷாண்டோவை 42வது ஓவரில் தீக்ஷனா போல்டாக்கினார்.
இலங்கையின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. 43வது ஓவரில் டஸ்கின் அஹமதுவையும் முஸ்தஃபிஸுர் ரஹ்மானையும் ரன் ஏதுமில்லாமல் பதிரனா வெளியேற்ற, வங்கதேசம் 164 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. குறைவேகப் பந்துகளை சாமர்த்தியமாக இறுதி ஓவர்களில் வீசிய பதிரனா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 8 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து தீக்ஷனா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ச்சியாக 11வது முறை எதிரணியை ஆட்டமிழக்கச் செய்து இலங்கை புதிய உலக சாதனைப் படைத்தது.
165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கைக்குத் தொடக்கம் சரியாக அமையவில்லை. குறைவேக ஆடுகளம் என்பதால் முதல் சில ஓவர்களில் கிடைக்கும் ஸ்விங்கைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென வங்கதேச பந்துவீச்சாளர்கள் முழு நீளத்தில் வீசினார்கள். மூன்றாவது ஓவரிலேயே திமுத் கருணாரத்னே 1 ரன்னில் டஸ்கின் அஹமதுவின் பந்தில் போல்டானார். அடுத்த ஓவரிலேயே 13 ரன்களில் சோரிஃபுல் இஸ்லாம் பந்துவீச்சில் முஷ்ஃபிகுர் ரஹிமிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் நிசங்கா.
குசால் மெண்டிஸை 5 ரன்களில் ஷகிப் அல் ஹசன் வெளியேற்ற, சமரவிக்ரமா-அசலங்கா கூட்டணி பொறுப்புடன் விளையாடியது. வங்கதேச சுழலர்களின் கட்டுக்கோப்பான பந்துவீச்சை சமாளித்து நல்ல ஸ்டிரைக் ரேட்டில் பேட்டிங் செய்த சமரவிக்ரமா 59 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். வெற்றிக்கு 44 ரன்கள் மட்டுமே தேவை என்கிற நிலையில் மெஹதி ஹசன் பந்துவீச்சில் ஸ்டம்பிங் ஆனார் சமரவிக்ரமா. அடுத்ததாக களமிறங்கிய தனஞ்செயா டி சில்வா 2 ரன்களில், ஷகிப் அல் ஹசனின் யார்க்கரில் போல்டானார்.
அடுத்தடுத்து இரு விக்கெட்டுகள் சரிந்தாலும் அசலங்கா நிதானமாக விளையாடி 83 பந்துகளில் அரைசதம் அடித்தார். டஸ்கின் வீசிய 39வது ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து அணியை வெற்றிபெற வைத்தார். அசலங்கா 62 ரன்களுடனும் ஷனகா 14 ரன்களுடனும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர். 66 பந்துகள் மீதமுள்ள நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றிபெற்றது. வங்கதேசம் தரப்பில் ஷகிப் அல் ஹசன் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். முன்னணி வீரர்கள் காயத்தால் விலகிய நிலையிலும் இலங்கை அணி ஆசியக் கோப்பையை வெற்றியுடன் தொடங்கியிருக்கிறது.
ஒருநாள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு இது தொடர்ச்சியாக 11வது வெற்றியாகும். நாகினி நடனத்தைப் பார்க்க முடியாதது வங்கதேச, இலங்கை ரசிகர்களுக்கு ஏமாற்றமாகவும் பொதுவான ரசிகர்களுக்கு ஆறுதலாகவும் அமைந்தது. 4 விக்கெட்டுகள் வீழ்த்திய பதிரனா ஆட்ட நாயகனாக அறிவிக்கப்பட்டார்.